ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஜெர்மி போவென்
- பதவி, சர்வதேச ஆசிரியர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானுடன் ஒரு புதிய போரில் குதிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ள முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் அபாயகரமான தருணத்தை உருவாக்கியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேல் "தற்காப்பு" (pre-emptive) என்ற சொல்லைப் பயன்படுத்தியது.
"தற்காப்பு நடவடிக்கை" என்ற சொல் குறிப்பது போல, இது ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அளிக்கப்பட்ட பதில் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, இது ஒரு "விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர்".
இரானின் இஸ்லாமிய ஆட்சி பலவீனமாக உள்ளதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்துள்ளன; அதாவது அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆண்டின் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறையின் விளைவுகள் மற்றும் கடந்த கோடை காலப் போரினால் மோசமாக சேதமடைந்துள்ள பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகக் கருதுகின்றன. இது நழுவவிடக்கூடாத ஒரு வாய்ப்பு என்பதே அவர்களின் முடிவாகத் தெரிகிறது.
இது தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட அமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு அடியாகும்.
தங்களது அறிக்கைகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இரான் தங்கள் நாடுகளுக்கு ஆபத்தானது என்று கூறினர். டிரம்ப் இதுவொரு உலகளாவிய ஆபத்து என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய ஆட்சி நிச்சயமாக அவர்களின் பரம எதிரிதான். ஆனால், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், மறுபுறம் இரானுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அதிகார ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொள்ளும் போது, தற்காப்பு என்பதற்கான சட்டரீதியான நியாயம் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பார்ப்பது கடினம்.
அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்பார்ப்பு இரானில் ஈடேறுமா?
தாக்குதல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. ஆயுத மோதல் தொடங்கிவிட்டால், அதை கட்டுப்படுத்துவது இயல்பாகவே மிகவும் கடினமானது. தலைவர்களுக்கு தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்.
பெஞ்சமின் நெதன்யாகு பல தசாப்தங்களாக இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். டெஹ்ரானில் உள்ள ஆட்சிக்கும், இரானின் ராணுவத் திறனுக்கும் தங்களால் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நெதன்யாகு தனது நாட்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஹமாஸுடனான இரண்டு ஆண்டுகாலப் போர் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இஸ்ரேல் போரில் இருக்கும் போது தனது அரசியல் நிலை வலுப்பெறுவதாக அவர் நம்புகிறார்.
தன் இயல்பிற்கேற்ப, டொனால்ட் டிரம்பின் குறிக்கோள்கள் அவ்வப்போது மாறி வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம், இரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி விரைவில் வரும் என்று அவர் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க கடற்படையின் பெரும்பகுதி வெனிசுவேலா தலைவரை பதவியிலிருந்து அகற்றும் பணியில் தீவிரமாக இருந்ததால், அவரிடம் ராணுவ ரீதியான தெரிவுகள் குறைவாகவே இருந்தன.
அமெரிக்கா அந்தப் பிராந்தியத்திற்கு இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்களையும், கணிசமான தரைவழித் தாக்குதல் படைகளையும் அனுப்பி வைத்திருந்த நிலையில், இரானின் அணுசக்தி லட்சியங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து டிரம்ப் அதிகம் பேசினார். இருப்பினும், கடந்த கோடை காலப் போருக்குப் பிறகு, இரானின் அணுசக்தித் திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரான் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை எப்போதும் மறுத்து வந்துள்ளது. ஆனால் அணுசக்தித் திட்டத்தில் சிவில் பயன்பாட்டிற்கான தேவையைக் காட்டிலும் அதிகமாக யுரேனியத்தை அது செறிவூட்டியுள்ளது. குறைந்தபட்சம், ஒரு அணுகுண்டை உருவாக்குவதற்கான வாய்ப்பையாவது அது தன்வசம் வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதுவரை அது நிகழப்போகிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளியிடவில்லை.
தனது வீடியோவில், இரான் மக்களுக்கு "சுதந்திரத்திற்கான நேரம்" நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார். நெதன்யாகுவும் இதேபோன்ற செய்தியையே அளித்தார். அதாவது இந்தப் போர் இரானிய மக்களுக்கு அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார். ஆனால் அது நடக்குமா என்பது முற்றிலும் நிச்சயமற்றது.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விமானப்படை தாக்குதல் போதுமா?
விமானத் தாக்குதல்களால் மட்டுமே ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. 2003-ஆம் ஆண்டில் இராக்கின் சதாம் உசேன், அமெரிக்கா தலைமையிலான பிரமாண்டமான படையால் பதவியிறக்கப்பட்டார். 2011-இல் லிபியாவின் மும்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் சில அரபு நாடுகளால் வான்வழி பாதுகாப்பு வழங்கப்பட்ட கிளர்ச்சிப் படைகளால் வீழ்த்தப்பட்டார்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே அதன் முடிவு அரசு இயந்திரத்தின் வீழ்ச்சி, உள்நாட்டுப் போர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கொலைகளாகவே அமைந்தது. லிபியா இப்போதும் ஒரு சிதைந்த நாடாகவே உள்ளது. இராக் இன்னும் அந்த ஊடுருவலின் விளைவுகளையும், அதைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியையும் எதிர்கொண்டு வருகிறது.
ஒருவேளை, வான்வழித் தாக்குதலால் மட்டுமே ஓர் ஆட்சி வீழ்ந்த முதல் நிகழ்வாக இது அமைந்தாலும் கூட, இந்த இஸ்லாமிய ஆட்சிக்குப் பதிலாக மனித உரிமைகளைப் போற்றும் ஒரு தாராளவாத ஜனநாயகம் அங்கே அமைந்துவிடாது. தற்காலிகமாகப் பொறுப்பேற்கக் கூடிய நம்பகமான மாற்று அரசாங்கம் எதுவும் காத்திருக்கவில்லை.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முக்கியத்துவம்
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, இரான் அரசு ஒரு சிக்கலான அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளது; இது சித்தாந்தம், ஊழல் மற்றும் தேவைப்படும் போது இரக்கமற்ற முறையில் பலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றின் கலவையால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில், போராட்டக்காரர்களைக் கொல்ல தான் தயாராக இருப்பதை டெஹ்ரான் அரசு தனது நடவடிக்கைகளால் நிரூபித்தது. வீதியில் இறங்கி இந்த முறைமைக்கு சவால் விடுத்த ஆயிரக்கணக்கான சக குடிமக்களை, சுட்டுக் கொல்லுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் பாதுகாப்புப் படைகளை அது கொண்டுள்ளது.
ஒருவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயியை கொல்ல முயற்சிக்கலாம். படுகொலைகளை ஒரு முக்கிய உத்தியாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களையும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா தலைவர்களையும், அவர்களின் கீழ் இருந்த பல தளபதிகளையும் இஸ்ரேல் கொன்றுள்ளது.
இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயமாகும். இது ஒரு ஆயுதமேந்திய அமைப்பை அல்ல, மாறாக ஒரு முழுமையான அரசை வழிநடத்துகிறது. இது ஒரு தனி மனிதனின் அதிகாரம் மட்டும் அல்ல. ஒருவேளை உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்படுவார்; பெரும்பாலும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) ஆதரவு பெற்ற மற்றொரு மதகுருவே அந்த இடத்திற்கு வருவார். இந்தப் புரட்சிகர காவல்படை, நாட்டின் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அதைப் பாதுகாப்பதையே தனது முதன்மையான பணியாகக் கொண்டுள்ளது.
தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், இல்லையெனில் நிச்சயம் மரணம் நேரிடும் என்றும் டிரம்ப் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார். ஆனால் டிரம்பின் இந்த சலுகையால் ஐஆர்ஜிசி ஈர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இஸ்லாமியக் குடியரசின் சித்தாந்தத்திலும் ஷியா இஸ்லாம் பிரிவின் கொள்கைகளிலும் "தியாக மரணம்" என்பது ஒரு மாறாத மற்றும் முதன்மையான அங்கமாகும்.
இரானைப் பொருத்தவரை டிரம்பின் நம்பிக்கை சரியாகுமா?
அரசியலிலும் வாழ்க்கையிலும் முதன்மையான உந்துசக்தி கொடுக்கல்-வாங்கல் (transactional) சார்ந்தது என்று டிரம்ப் நம்புகிறார். அவருடைய புத்தகம் குறிப்பிடுவது போல, அது "தி ஆர்ட் ஆஃப் தி டீல்" (ஒப்பந்தத்தின் கலை). ஆனால் இரானைக் கையாளும்போது சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையின் வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். அதை அளவிடுவது மிகவும் கடினம்.
ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த நெருக்கடி அதிகரித்ததாலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல் படைகளைத் திரட்டியதாலும், போர் தவிர்க்க முடியாதது என்று டெஹ்ரான் தலைமை கருதுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த கோடை காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதை உணர்ந்தே இரானும் இம்முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
இரான் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலியர்களையோ நம்பவில்லை. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்திய ஜே.சி.பி.ஓ.ஏ (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இது ஒபாமா நிர்வாகத்தின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சாதனையாகக் கருதப்பட்டது.

'மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையும் மோசமாகும்'
இரான் குறைந்தது அவகாசம் பெறுவதற்காகவாவது, ஜே.சி.பி.ஓ.ஏ-வின் இரண்டாவது கட்ட ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவை எதிர்க்கும் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இரான் அளிக்கும் ஆதரவு ஆகியவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிகிறது.
இது இரானியத் தலைமைக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் இது முற்றிலும் சரணடைவதற்குச் சமமானது. ஏவுகணைகளையும் நட்பு நாடுகளையும் விட்டுக்கொடுப்பது, தற்போது எதிர்கொண்டுள்ள தாக்குதலை விட, ஆட்சி மாற்றத்திற்குத் தங்களை இன்னும் எளிதாகப் பலியாக்கிவிடும் என்ற எண்ணம் அந்நாட்டுத் தலைமையின் மனதில் இருந்திருக்கலாம்.
இரானியத் தலைவர்கள் இப்போது இந்தப் போரை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு உயிர் பிழைப்பது மற்றும் அதன் விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்துக் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்றைய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையையும் அதன் சாத்தியமான விளைவுகளையும் கண்டு சௌதி அரேபியா தலைமையிலான அண்டை நாடுகள் திகைப்படைந்து போயிருக்கும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குப் பிரச்னைகளை ஏற்றுமதி செய்யும் திறன் அதிகம் என்பதால், மீண்டும் வெடித்துள்ள தீவிரமான இந்தப் போர் ஏற்கனவே கொந்தளிப்பாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கும் இப்பிராந்தியத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மேலும் மோசமாக்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












