இந்தியாவிடம் இருந்து அண்டை நாடுகள் விலகிச் செல்கின்றனவா? என்ன காரணம்?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி
    • எழுதியவர், ஷுப்ஜோதி கோஷ்
    • பதவி, பிபிசி செய்திகள் வங்காள சேவை, டெல்லி

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோதி முதல்முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றபோது அவர் பல அண்டை நாடுகளின் அரசு அல்லது நாட்டின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அண்டை நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பதவியேற்ற முதல் நாளிலிருந்தே மோதி அரசு கூறி வருகிறது.

இந்தக் கொள்கையானது அதிகாரபூர்வமாக 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற பெயரில் அறியப்படுகிறது. நரேந்திர மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை இதுதான் என்று மத்திய அமைச்சர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புவியியல் ரீதியாக தொலைதூரத்தில் இருக்கும் (அமெரிக்கா அல்லது நைஜீரியா) நாடுகளைக்காட்டிலும் தெற்காசியாவில் இருக்கும் அண்டை நாடுகளுடனான (இலங்கை, வங்கதேசம், மியான்மர் மற்றும் நேபாளம் முதலியன) உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் மற்றும் அவற்றின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதே 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதன் அடிப்படை சாராம்சம் ஆகும்.

வாய்வார்த்தையில் இதைச்சொல்வது வேறு விஷயம். ஆனால் நரேந்திர மோதி அரசின் செயல்பாட்டில் இது உண்மையிலேயே பிரதிபலிக்கிறதா?

ஒருபுறம் டெல்லி பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மறுபுறம் சீனாவைப் பற்றியும் அதிகம் சிந்திக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விலகிச்செல்லும் அண்டை நாடுகள்

பிரதமர் நரேந்திர மோதி நேபாளம் (ஆகஸ்ட், 2014), இலங்கை (மார்ச், 2015) மற்றும் வங்கதேசம் (ஜூன், 2015) ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டனர். ஆனால் அந்த நிலை இப்போது நீடிப்பதுபோல காணப்படவில்லை. பாகிஸ்தானுடனான உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவித்தபோது இந்தியா அந்த நாட்டிற்கு பெருமளவு உதவிகளை அளித்தது. இருப்பினும் அது இந்தியாவின் சந்தேக பார்வையை புறக்கணித்து தன் துறைமுகத்தில் சீன கப்பலை நங்கூரமிட அனுமதித்துள்ளது. ’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த சூழல் காணக்கிடைக்கிறது.

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமலாக்கத்தின் போது இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்ட 'பொருளாதார முடக்கத்திற்கு' எதிராக நேபாள மக்கள் இந்திய எதிர்ப்பு போராட்டங்களில் இணைந்தனர்.

தற்போது நேபாளத்தில் ஆட்சியில் இருக்கும் கே.பி. ஷர்மா ஓலி, ஒரு தீவிர இந்திய எதிர்ப்பாளர் என்று கருதப்படுகிறார்.

2014ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் பிரதமர் மோதி

மாலத்தீவிலும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய ஆதரவு அரசை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரான முகமது முய்சு, இந்திய ராணுவ வீரர்கள் தனது நாட்டிலிருந்து உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

அவரது கட்சியால் தொடங்கப்பட்ட 'இந்தியா வெளியேறு ' பிரசாரம் அதிக ஆதரவைப் பெற்றது. மேலும் அதிபர் முய்சு எந்த தயக்கமும் இல்லாமல் சீனாவின் பக்கம் சாய்ந்தார்.

செயல் உத்தி, வெளியுறவு, பொருளாதாரம் என ஏறக்குறைய அனைத்து விஷயங்களிலும் இந்தியாவைச் சார்ந்து இருக்கும் பூடான் கூட சீனாவுடன் எல்லைப் பேச்சு வார்த்தைகளை தானே தொடங்கிவிட்டது.

தூதரக உறவுகளை ஏற்படுத்தும் சீனாவின் முன்மொழிவையும் நேரடியாக அது நிராகரிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் ஆளும் அரசுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது என்றும் கூற முடியாது.

தாலிபன்களுடன் இந்தியா முழுமையான தூதரக ரீதியிலான உறவை இன்னும் ஏற்படுத்தவில்லை.

இந்த இரு நாடுகளிலும் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் இப்போது நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன.

இந்தப்பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள பெயர் வங்கதேசம். இந்தியாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அங்கு ஆட்சியில் இருந்த அரசு கிட்டத்தட்ட ஒரே இரவில் அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இந்தியாவின் நண்பர்கள் என்று சொல்ல முடியாத சில சக்திகள் இப்போது அங்கு ஆட்சிக்குள் வந்துள்ளன.

இது தவிர சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோதியின் வங்கதேசப் பயணத்தின்போது அவருக்கு எதிரான போராட்டங்களும் வன்முறைகளும் உச்சத்தில் இருந்தன.

ஆப்கானிஸ்தான், மியான்மரில் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான், மியான்மரில் பல்வேறு துறைகளில் இந்தியா செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது

வங்கதேசத்தில் சமீபத்திய இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்களும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தன என்று பல பார்வையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒன்றன் பின் ஒன்றாக அண்டை நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தலை தூக்கும் இந்த சுழலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில கடுமையான குறைபாடுகள் உள்ளதா அல்லது தெற்காசியாவின் புவிசார் அரசியல் கட்டமைப்பு காரணமாக இந்தியாவின் இந்த தலைவிதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய, சர்வதேச உறவு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், முன்னாள் தூதர்கள் மற்றும் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ள வெளியுறவுக் கொள்கை விவகார நிபுணர்களிடம் பிபிசி வங்காள சேவை விரிவாகப் பேசியது.

அவர்கள் அனைவரின் கருத்துகளும் இந்தக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் சமீபத்திய இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்களும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருந்தன என்று பல பார்வையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்

இந்திய வெளியுறவுக் கொள்கையில் குறுகிய கால நலன்களுக்கு முன்னுரிமை - இர்ஃபான் நூருதீன்

டாக்டர். இர்ஃபான் நூருதீன் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் இந்திய அரசியல் பேராசிரியராக உள்ளார். அவர் பொருளாதார மேம்பாடு, உலகமயமாக்கல், ஜனநாயகம் மற்றும் உள்நாட்டு மோதல்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், ''தெற்காசியா உலகின் மிகக் குறைவான ஒருங்கிணைந்த பகுதி என்பதை நான் முன்கூட்டியே சொல்ல விரும்புகிறேன். இங்கே, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வது அல்லது சர்வதேச எல்லை உறவுகள், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைக்காட்டிலும் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது.

வர்த்தகத்தைப் பற்றி பேசினால், சப்-சஹாரா பிராந்தியத்தின் ஏழை ஆப்பிரிக்க நாடுகளிடையே நடைபெறும் வர்த்தகத்தின் அளவை ஒப்பிடுகையில் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் அளவு குறைவாக உள்ளது.

இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் இரண்டு பில்லியன் அதாவது 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அந்த நிலையில் இது உலகின் முக்கிய பொருளாதார மையமாக மாறியிருக்கவேண்டும்.

எனவே பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நாட்டிற்கு இடையிலான உறவுகள் சுமூகமாகவும் இயல்பாகவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்தால் மாலத்தீவு, இலங்கை அல்லது நேபாளம் போன்ற எந்த அண்டை நாடுகளுடனும் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, எந்தவொரு பல்வேறு அம்சங்களைக் கொண்ட கொள்கையையும் இந்தியா ஒருபோதும் முன்னோக்கி நகர்த்தவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த விஷயத்தில், குறுகிய கால நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே, ஒரு குறுகிய மற்றும் கேள்விக்குரிய ’ஒற்றை அம்ச கொள்கை’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தற்போதைய இந்திய அரசு தனது 'இந்து அடையாளத்தை' தன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக நிறுவ விரும்புகிறது. வங்கதேசம் போன்ற பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வழக்கம் போல் இது எதிர்விளைவை ஏற்படுத்தியது.

நரேந்திர மோதி அரசால் அமல்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் இந்தியாவை இந்துக்களின் கடைசி புகலிடமாக காட்டுவதாகும்.

இந்தியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சட்டவிரோத முஸ்லிம் ஊடுருவல்காரர்களுக்கு 'பங்களாதேஷிகள்' என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மறுபுறம் வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தியதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களுக்கிடையில் ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. இதை நீண்ட காலத்திற்கு அடக்கிவைக்க முடியவில்லை.

இந்தச் சூழலில் கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பல அண்டை நாடுகளில் அங்குள்ள அரசு இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதையும், ஆனால் அங்குள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிராக கொதித்துக்கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன்.

வங்கதேசம் தவிர நேபாளம் மற்றும் மாலத்தீவுகளிலும் இதே நிலை காணப்படுகிறது.

ஆனால், ஸ்திரத்தன்மைக்காகவோ, ஜனநாயகத்திற்காகவோ அந்த நாட்டு மக்களின் கோபத்தை நீக்க இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக அந்நாட்டு அரசுகளுடன் ஒத்துழைத்தால் தனது (இந்தியாவின்) நலன்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறது.

அண்டை நாடுகளின் குறுகிய கால நலன்களை மனதில் கொண்டு இந்தியா எப்போதும் நகர்ந்து வருகிறது. நீண்ட கால நலன்களைப் பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகளில் அதன் விளைவுகளை இந்தியா சந்தித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தெற்காசியாவின் சிறிய நாடுகள் இந்தியாவை ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாகப் பார்க்கின்றன என்றால் அதற்கு ஒரு திட்டவட்டமான பார்வையும் காரணமும் உள்ளது.

இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக நிலைநிறுத்த விரும்புகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கது.

ஆனால் அவ்வாறு செய்வதற்கு இந்த அண்டை நாடுகளுக்கான சில பொறுப்புகளை இந்தியா நிறைவேற்ற வேண்டியிருக்கும். இதன் மூலம் பல்வேறு அம்சங்களை கொண்ட உறவுகள் நிறுவப்படும். ஆனால் தற்போதுவரை அதை எங்கும் பார்க்கமுடியவில்லை.'' என்றார்

'அண்டை நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா எப்போதுமே குறுகிய கால நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது,' என்கிறார் பேராசிரியர் இர்ஃபான் நூருதீன்.

பட மூலாதாரம், Wilson Center

படக்குறிப்பு, டாக்டர் இர்ஃபான் நூருதீன்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி - எஸ் டி முனி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல கல்வி நிறுவனங்களில் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியராக டாக்டர் முனி இருந்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் சிறப்புத் தூதுராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான ஐடிஎஸ்ஏவில் உறுப்பினராகவும் உள்ளார்.

தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்,'' நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே அறிவித்த 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் தொடக்கத்திலேயே குறைபாடுகள் இருந்தன.

அந்த அறிவிப்புக்கு முன் எந்த தீவிர ஆலோசனையும் செய்யப்படவில்லை என்று நான் கூறுவேன். அது ஒரு திடீர் முடிவு.

மோதியின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்ட சில நாட்களிலேயே, பாகிஸ்தானில் இருந்து டெல்லி வந்த வர்த்தகக்குழு, காஷ்மீர் ஹூரியத் தலைவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படாததை நாம் கண்டோம்.

ஆனால் ஹூரியத் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வந்து அந்த சந்திப்பிற்காக காத்திருந்தனர்.

பாகிஸ்தான் பிரதிநிதிகளை சந்திக்க ஹூரியத் தலைவர்களை அனுமதிக்கப்போவதில்லை எனும்பட்சத்தில் அவர்களை ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு வர அனுமதித்திருக்கக்கூடாது.

மேலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்பவில்லை என்றால் மோதி அரசின் பதவியேற்பு விழாவுக்கு நவாஸ் ஷெரீப்பை அழைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது இந்தக்கொள்கையின் நோக்கமாக இருந்ததில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டும் பல உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும்.

எளிமையாகச் சொன்னால், இது 'இந்தியா முதன்மை ' கொள்கை.

மோதியின் ஆட்சியில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதில் மேலும் இரண்டு பெரிய தவறுகளை செய்தது என்று நான் கருதுகிறேன்.

முதலாவது, உளவு அமைப்புகளின் மீது அதிக சார்பு.

புலனாய்வுத் தகவல்கள் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் உளவு அமைப்புகளின் கண்களால் அண்டை நாட்டைப் பார்த்து, அதன் அடிப்படையில் ஒரு கொள்கை அல்லது உத்தியை உருவாக்க முயற்சித்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுதான் இப்போது நடந்துள்ளது.

இரண்டாவதாக, வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆளும் கட்சி தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டதை, மோதி அரசுக்கு முன்பு எந்த அரசிலும் நான் பார்த்ததில்லை.

மோதியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்சியின் போது கூட, நேபாளம், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஓரளவு பாகிஸ்தானுடனும் இந்தியா என்ன கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதை வெளியுறவு அமைச்சருக்கு பதிலாக ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் முடிவு செய்தார்.

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உத்தியை தீர்மானிக்கும் பொறுப்பு இந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த முடிவு இந்தியாவின் நலனுக்கானது அல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையைப் பற்றி நாம் விவாதித்தால் அங்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்விக்கான பல காரணங்களை பார்க்க முடிகிறது.

உதாரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் அவர் மீது சாமானிய மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது என்பதையும் இந்தியா ஒருபோதும் அவரிடம் தெளிவாக எடுத்துக்கூறவில்லை.

அவர் இந்தியாவின் சிறந்த நண்பராக இருக்கும்பட்சத்தில் இதை அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை. இது தவிர தீவிர உளவுத்துறை தோல்வியும் ஏற்பட்டது.

ஷேக் முஜ்பூர் ரஹ்மான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இந்திரா காந்தியின் அரசியல் செயலர் பிஎன் ஹக்சர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாப்டர் மூலம் அவரை அங்கிருந்து வெளியேற்ற முன்வந்தார்.

இதற்கு ரஹ்மான் தயாராக இருக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை இந்தியா அறிந்திருந்தது.

ஆனால் ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பது பற்றிய இந்தியாவுக்கு எந்த தகவலும் இருக்கவில்லை.'' என்றார்

அரசியல் ஆய்வாளர் எஸ்.டி.முனி

பட மூலாதாரம், S D Muni

படக்குறிப்பு, அரசியல் ஆய்வாளர் எஸ்.டி.முனி

நான்கு அண்டை நாடுகளில் இந்திய எதிர்ப்பு அரசுகள் - சௌமென் ராய்

சௌமன் ராய் பல நாடுகளுக்கான இந்திய தூதராகவும் இருந்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் வங்கதேசம், அவரது முக்கிய ஆராய்ச்சி மற்றும் ஆர்வமுள்ள பகுதிகளாக இருந்தன.

தன் கருத்துக்களை முன்வைத்த அவர் ''இந்தியாவின் அண்டை நாடுகளில் நடக்கும் சம்பவங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகவோ நான் கருதவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளும் பல்வேறு காரணங்களால் அரசியல் குழப்பத்தை சந்தித்து வருகின்றன. தெற்காசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

நேபாளம், மாலத்தீவு அல்லது வங்கதேசத்தின் அரசியல் படம் மாறினால் அல்லது அதிகாரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், அவற்றுக்கு அந்த நாடுகளின் உள் நிலைமையே அடிப்படைக் காரணம்.

இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஒருவர் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கிறார், அங்கு அவருக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவோ அல்லது அதன் வெளியுறவுக் கொள்கையோ விரும்பினாலும் எதையும் செய்ய முடியாது. அங்குள்ள அரசியல் நிலைமை மற்றும் திசையின் அடிப்படையில் மட்டுமே அந்த நாடு முன்னே நகரும்.

எனவே அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நான் சொல்ல விரும்புகிறேனா?அதுதான் இல்லை.''

சௌமென் ராய்

பட மூலாதாரம், Soumen Roy

படக்குறிப்பு, சௌமென் ராய்

''இந்த உறவுகளில் பல விரிசல்கள் உள்ளன. இவை சில நேரங்களில் வளர்ந்து கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன.

ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகளின் பரப்பளவு, ராணுவம், பொருளாதார சக்தி அல்லது உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு காரணமாக இந்த விரிசல் நீடிக்கும்.

இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் இந்த உண்மைகளை மனதில் வைத்து முன்னேற வேண்டும். உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்

ஒரு நாட்டில் எதிர்பாராத பெரிய மாற்றம் ஏற்பட்டால் மற்ற எந்தக் காரணிகளையும் விட உள்நாட்டு நிகழ்வுகளே அதில் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன.

இப்போது நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசத்தில் என நான்கு இந்திய எதிர்ப்பு அரசுகள் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்துள்ளன என்பதை நாம் கவனித்தால் அதை வெறும் தற்செயல் நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.

பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தற்போது மூன்று அல்லது நான்கு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் சவாலான கட்டத்தில் உள்ளன. இது எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் இந்தியாவின் அண்டை நாடுகளில் (பாகிஸ்தான் தவிர) எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் டெல்லியுடனான பேச்சுவார்த்தையின் பாதை ஒருபோதும் மூடப்படவில்லை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

மாலத்தீவின் முய்சு அரசு கூட இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. நேபாளத்துடனான ஒத்துழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்தது.

வங்கதேசத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையே தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை பேணியே ஆகவேண்டும். இதற்கு மாற்று இல்லவே இல்லை.

இந்த 'பணி உறவை' பேணுவது டெல்லிக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.

'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்துவிட்டது' என்று பலர் வங்கதேசம் தொடர்பாக இந்தியாவை விமர்சிக்கிறார்கள்.

அதாவது ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கப்பட்டது. இன்று இந்தியா அதற்கான விலையை கொடுக்க வேண்டியுள்ளது என்பதே இதன் பொருள்.

ஆனால் அப்படிப்பட்டவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால், உண்மையில் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு இன்னொரு மாற்று 'கூடை' இருந்ததா என்பதுதான். எளிமையாகச்சொன்னால், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அரசியலில் நிறைந்துள்ளன.

அத்தகைய சக்திகளுடன் கைகோர்ப்பது இந்தியாவுக்கு சாத்தியமில்லை. இதை கொள்கையின் தோல்வி என்றோ அல்லது வேறு விதமாகவோ விவரித்தாலும் அதுதான் உண்மை.'' என்றார்

மாலத்தீவு அதிபர் முகமது மொய்சோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்முய்சு

உலகளாவிய சக்தியாக மாற விரும்பும் இந்தியா - சஞ்சய் பரத்வாஜ்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு மையத்துடன் நீண்ட காலமாக தொடர்புடைய சஞ்சய் பரத்வாஜ், அந்த நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பற்றி அவர் நீண்ட காலமாக ஆய்வு செய்துள்ளார். அவர் வங்கதேசத்திலும் நீண்ட காலம் இருந்திருக்கிறார்.

அவர் பேசியபோது ''இந்தியா ஒரு பெரிய பிராந்திய வல்லரசு மற்றும் அது படிப்படியாக உலகளாவிய சக்தியாக மாற விரும்புகிறது.

இந்த இலக்கை எட்டுவதில் அண்டை நாடுகளுக்கு பெரும் பங்கு உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், தன் புவியியல் பகுதியில் அண்டை நாடுகளிடமிருந்து அங்கீகாரம் அல்லது மரியாதை கிடைக்காவிட்டால், சர்வதேச அளவில் ஒரு நாடு மரியாதை பெறுவது கடினமாகிவிடும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது குறித்து அது பேசுகிறது.

இப்போது பேசப்படும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை என்பது முற்றிலும் புதிய விஷயம் அல்ல.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் தெற்காசியாவில் குஜ்ரால் கோட்பாட்டைப் பின்பற்றுவது பற்றி பேசினார். அண்டை நாடு என்ன செய்தது அல்லது செய்யவில்லை என்பதைப் பற்றி சிந்திக்காமல், உறவுகளை மேம்படுத்த ஒருதரப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கொள்கை.

அதன் பிறகு மன்மோகன் சிங் காலத்தில் இது வேறு விதமாகச் சொல்லப்பட்டது. அப்போது அண்டை நாடுகளிடம் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இது தானாகவே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்று கூறப்பட்டது.''

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சஞ்சய் பரத்வாஜ்

பட மூலாதாரம், University of Delhi

படக்குறிப்பு, சஞ்சய் பரத்வாஜ்

''இந்த சூழலில் வங்கதேசத்துடனான வரலாற்றுச் சிறப்புமிக்க நில ஒப்பந்தம் அல்லது உத்தேச டீஸ்டா ஒப்பந்தத்தின் வரைவு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது அவசியம். பின்னர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் இதற்கு அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என பெயரிடப்பட்டது. ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளின் அடிப்படை சாராம்சம் அப்படியே உள்ளது.

சீனாவைப்போல அண்டை நாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்யவோ அல்லது அங்கு இலவச உதவிகளையோ வழங்கும் அளவிற்கு இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பலம் இல்லை.

இந்தியாவின் ஏறக்குறைய எல்லா அண்டை நாடுகளும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சொந்த எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற சீனா தனது கருவூலத்தை அவர்களுக்காக திறந்து வைத்துள்ளது.

அண்டை நாடுகள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவோ அல்லது புவியியல் ரீதியாகவோ எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், பொருளாதாரத் தேவை காரணமாக அவை சீனாவின் செல்வாக்கின் கீழ் வருவதற்கு இதுவே காரணம். இதுபோன்ற விஷயங்களில் இந்தியா விரும்பினாலும் அதிகம் எதுவும் செய்ய முடியாது.''

இந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா மற்றும் வங்கதேச நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஜூலையில், சீனா மற்றும் வங்கதேச உயர்மட்ட தலைமைப் பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

''முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது ஆட்சிக் காலத்தில், ’அனைத்தையும் மாற்றலாம் ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இந்த புவியியலுடன் மட்டுமே நாம் செல்ல வேண்டும்,’என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளின் விஷயத்திலும் இதுதான் உண்மை. இந்தியா எங்கு இருக்கிறதோ, அங்கேயேதான் இருக்கும். அவர்கள் விரும்பினாலும் இந்தியாவை தங்களிடமிருந்து விலக்கி வைக்க முடியாது.

எனவே இந்த பொறுப்பு பரஸ்பரம் உள்ளது. உறவுகளில் ஏற்படும் சீர்குலைவுக்கு ஒரு நாட்டின் கொள்கையை காரணமாக சொல்லமுடியாது. அதற்கு இரு நாடுகளும் பொறுப்பு. இருவரின் பரஸ்பர நலன்களும் ஒரே திசையில் இருந்தால் உறவு சுமூகமாக இருக்கும். அவற்றில் முரண்பாடு ஏற்படும் போது ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டைகள் இருக்கும்.

பல்வேறு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான அதிருப்தி ஏன் நிலவுகிறது? நடைமுறை காரணிகள் தவிர கட்டமைப்பு காரணிகளும் இதில் உள்ளன என்று நான் கூறுவேன்.

வங்கதேசம் முஸ்லிம் பெரும்பான்மை நாடு. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த ஒரு வன்கொடுமை சம்பவமும் அங்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இது ஒரு நடைமுறை காரணி.

இது தவிர இந்தப்பிராந்தியத்தில் இந்தியாவின் கட்டமைப்பு வேறுபாடு காரணமாக அண்டை நாடுகள் அதை ஒரு மேலாதிக்க சக்தியாகக் கருதுகின்றன.

அந்த நாடுகளில் உள்ள சில சக்திகள் தங்கள் சொந்த நலன்களுக்காக இந்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டுகின்றன. இதை ஒரு கட்டமைப்பு காரணி என்று அழைக்கலாம்.

இதில் புதிதாக எதுவும் இல்லை. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. அது இனியும் தொடரும்.

ஆனால் எந்த ஒரு அண்டை நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு எழுவதற்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தவறு கண்டுபிடிப்பது சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.' 'என்கிறார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)