கடைசி வரை போராடிய விராட் கோலியின் சதம் வீண்: ஒரு நாள் தொடரை வென்றது நியூசிலாந்து

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது இந்தத் தொடரின் இறுதிப் போட்டியாகும்.
இதற்கு முன்பு, இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன.
இந்தப் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் தனது முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அதே சமயம் டெவோன் கான்வே ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு, டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியின் பேட்டிங்கைத் தொடர்ந்தனர். டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் இப்போட்டியில் சதமடித்தனர்.

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images
நியூசிலாந்து க்ளென் பிலிப்ஸ் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது நான்காவது விக்கெட்டை இழந்தது.
இதன் பின்னர், டேரில் மிட்செல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மிட்செல் ஹே இரண்டு ரன்களிலும், சச்சரி ஃபாக்ஸ் 10 ரன்களிலும், கிறிஸ்டியன் கிளார்க் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.

பட மூலாதாரம், Shammi Mehra / AFP via Getty Images
338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ரோஹித் சர்மா 11 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும், மூன்றாவது இடத்தில் பேட் செய்த விராட் கோலியும், ஆறாவது இடத்தில் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டியும் இந்திய அணியின் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர்.
விராட் கோலி 91 பந்துகளில் தனது சதத்தை எட்டினார், அதே நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டியும் தனது அரை சதத்தை எட்டினார்.
6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்சித் ராணா 42 பந்துகளில் அரைசதம் எடுத்து அதிரடி காட்டினார். ஆனால், இவரது விக்கெட்டுக்கு பின்னர் இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தனியாக போராடிய விராட் கோலியும் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












