ஆசிய கோப்பை 2023: 228 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி 32 ஓவர்களில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி, இந்திய முகாமில் மகிழ்ச்சியை மட்டுமல்ல, தற்போது அணியில் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற திருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னர் மழையால் தடைபட்ட இந்தப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல சாதனைகளையும் படைத்திருக்கிறது.
இரண்டு நாட்கள் (செப்டம்பர் 10, 11) நீடித்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, இந்திய அணி சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சாதனைகள்
இந்தப் போட்டியில், ஒருநாள் போட்டிகளிலேயே அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில் 13 ஆயிரம் ரன்களை முடித்தார், விராட் இந்தச் சாதனையை 267 இன்னிங்ஸ்களில் எட்டினார்.
விராட் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது 1,000 ரன்களையும் பூர்த்தி செய்தார்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை அடித்தார். ஒருநாள் போட்டிகளில் 50வது அரைசதத்தை அடித்த 30வது பேட்ஸ்மேன் ஆனார்.
இந்தியாவின் டாப் ஆர்டரின் நான்கு பேட்ஸ்மேன்கள் அரை சதம் அல்லது அதற்கு மேல் அடித்தது இது நான்காவது முறை.
இதற்கு முன், கடைசியாக 2017ல் பர்மிங்காமில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்திருந்தனர்.
முதலில் ரோஹித் மற்றும் கில் இடையே ஒரு சதம் பார்ட்னர்ஷிப் இருந்தது, பின்னர் ராகுல் மற்றும் கோலி இடையே இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 47வது முறையாக ஒரே ஒருநாள் போட்டியில் 2 சத பார்ட்னர்ஷிப்களை குவித்து சாதனை படைத்தது.
கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் தனது ஆறாவது சதத்தையும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சதத்தையும் அடித்தார்.
கேப்டன் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், ANI
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே கே.எல்.ராகுல் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார். காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ராகுல் விளையாடினார்.
கே.எல்.ராகுலைப் பாராட்டிய ரோஹித் சர்மா, "ராகுலுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி நிமிடத்தில் அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. காயத்தில் இருந்து மீள்வது எளிதல்ல. டாஸ் செய்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அவரை விளையாடச் சொன்னோம். அந்த நிலைமையில் செயல்படுவது எளிதானது அல்ல," என்றார்.
பும்ராவின் பந்துவீச்சு குறித்துப் பேசிய, ரோஹித், "காயத்தில் இருந்து திரும்பிய பிறகு அவர் பந்துவீசிய விதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தன்னை நிரூபித்துள்ளார். அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்தார். கடந்த மாதங்களில் அவர் கடினமாக உழைத்தார்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கோலி ராகுலிடம் என்ன சொன்னார்?
ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
கோஹ்லியுடன் இணைந்து கே.எல்.ராகுலும் சதம் அடித்தார்.
பின்னர் போட்டியின் போது கே.எல்.ராகுலிடம் என்ன சொன்னார் என்று கோலி கூறினார்.
"நாங்கள் இருவரும் பாரம்பரியமான கிரிக்கெட் விளையாடுகிறோம். நாங்கள் மிகவும் ஆடம்பரமான ஷாட்களை அடிப்பதில்லை. இருவரும் பார்ட்னர்ஷிப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். இது மறக்க முடியாத பார்ட்னர்ஷிப். ராகுல் திரும்பி வந்திருப்பது எங்களுக்கு நல்லது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
போட்டியில் நடந்தது என்ன?
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பெர் 10) தொடங்கிய போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் நேற்று, திங்கள் (செப்டம்பர் 11) மாலை 4.30 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இந்தப் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு 356 ரன்களை சேர்த்தனர்.
விராட் கோலி 122 ரன்களும், கே. எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து இருவரும் சேர்ந்து 233 ரன்களை எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஒரு ஜோடி சேர்த்த அதிபட்ச ரன்கள் இதுவாகும்.
இது விராட் கோலியின் 47ஆவது சதமாகும். கே எல் ராகுல் ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்து தனது ஏழாவது சதத்தை எட்டினார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மேன் கில் ஆகிய இருவரும் முறையே 49 பந்துகளுக்கு 56 ரன்களும், 52 பந்துகளுக்கு 58 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணியில் ஷதாப் மற்றும் ஷஹீன் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக திங்கள் மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
இலக்கை எட்டாத பாகிஸ்தான் அணி
இதன்மூலம் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
இதுகுறித்து ரிசர்வ் டே போட்டிக்கு முன்னர் பிபிசி தமிழிடம் பேசிய இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான், 357 ரன்கள் என்ற இலக்கே பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரும் அழுத்தத்தை தரும் என்றார். அதேசமயம் விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே. எல் . ராகுல் ஜோடி நேரம் செல்ல செல்ல ருத்ர தாண்டவம் ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார் அவர்.
மேலும் பேசிய ரகுமான், "பாகிஸ்தானை பொறுத்தவரை ஆரிஸ் ரோஃப் உடல் நலக் குறைவு காரணமாக விலகியதால் அவரால் மீதமுள்ள 5 ஓவர்களை வீச முடியவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய இழப்புதான்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
“இந்த மைதானத்தின் வரலாற்றைப் பார்த்தால், இரண்டாவதாக விளையாடிய அணி இதுவரை 300 இலக்கை தொட்டதில்லை. எனவே இந்த இலக்கு பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாகதான் இருக்கும். அதேபோல 357 ரன்கள் இலக்கு என்பதும் பாகிஸ்தான் அணி மீது ஒரு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மழை வந்தால் அதுவும் பிரச்னையாகும்,” என்றும் தெரிவித்திருந்தார் அப்துல் ரகுமான்.
மழை காரணமாக சாதகமற்ற நிலை காணப்பட்டப் போதிலும் இந்திய அணியால் எப்படி இத்தனை ரன்களை குவிக்க முடிந்தது?
மைதானம் வழக்கத்திற்கு திரும்பிவிட்டது என்பதை ஆட்டத்தை பார்த்தவுடன் தெரிந்தது. ஆனால் பிட்சை பொறுத்தவரை பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித சாதகமான நிலையும் ஏற்படவில்லை.
இதே பிட்ச், பாகிஸ்தான் அணிக்கும் சாதகமாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இணைந்து வேகமாக ரன் குவித்தால் மட்டுமே பின்னர் வரக்கூடிய வீரர்கள் மீது எந்த அழுத்தமும் செல்லாது என்றார் அப்துல் ரகுமான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












