You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் இன்று 7 1/2 மணி நேர மின் வெட்டு - தொடரும் நெருக்கடி
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் இன்றைய தினம் (2022மார்ச் 2) 7 1/2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படுகிறது.
நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இதன்படி, இன்றைய தினம் 7 1/2 மணி நேர மின்சார தடையை ஏற்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு தாம் வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், மின்சார உற்பத்திக்கு தேவையான ஏரிபொருள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
''மின்சார தடையை தவிர்ப்பதற்கான மாற்று திட்டங்கள் எதுவும் கிடையாது. இவ்வாறான நிலைமை உருவாகும் என அரசாங்கத்திற்கு பல்வேறு தடவைகள் கூறினோம். இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தடவைகள் வலியுறுத்தினோம். எனினும், அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எதிர்காலம் தொடர்பில் தற்போதைக்கு ஒன்றும் கூற முடியாது. இன்றைய தினமும் எரிபொருள் கிடைக்கவில்லை என்றால், இந்த நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையும். தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு அமைய, வார நாட்களில் 7 முதல் 8 மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என அவர் தெரிவிக்கிறார்.
இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு தற்போதைய 150 மில்லியன் ரூபா இருந்தால் போதுமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கிறார்.
இதேவேளை, மின்சாரத்தை வழமை போன்று வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய திறைசேரி மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கடந்த சில காலமாகவே தொடர் மின்சார விநியோகம் தடைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
இதன்படி, இன்று (2022மார்ச் 2) மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் 7 1/2 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- புதின் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீறிய பைடன்
- சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறித்து என்ன சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
- யுக்ரேன் மீது படையெடுப்பு: இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காதது ஏன்?
- வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து மஞ்சள் நீராட்டு நடத்திய குடும்பம்
- 500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம் - நடைமுறையில் சாத்தியமா?
- உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்