மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமராகிறார், ரணில் விக்ரமசிங்க பதவி விலகல்

Ranil Wickremesinghe

பட மூலாதாரம், Getty Images

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார்.

தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தனது தீர்மானம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றுவதன் ஊடாக தெளிவூட்டவுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அதை அவர் கையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ எப்போது பதவியேற்பு?

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நாளை பதவி பிரமாணம் செய்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைகால அரசாங்கத்தில் 16 அமைச்சர்கள் அங்கம் வகிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுகின்றார்.

இந்த இடைகால அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை நடைமுறையில் இருப்பதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தலில் பெற்றிருந்தார்.

இதன்படி, இலங்கையில் ஆளும் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி வசமும், ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமும் காணப்படுகின்றமையினால் நாட்டை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், Getty Images

இந்த விடயங்களை கருத்திற் கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இரண்டு கட்சிகள் நாட்டை ஆட்சி செய்கின்றமையினால், எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்ற விடயத்தை கருத்திற் கொண்டு சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக விதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.

  • 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
  • பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை இடைகால அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்லும் வகையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கி, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ரணில் உரை

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்துகளை வெளியிடக் கூடிய தகவல் அறியும் உரிமை மற்றும் அனைவரையும் சமமாக மதிக்கும், நல்லிணக்கத்தை உருவாக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து திணைக்களங்களையும் அரசியலில் இருந்து விடுவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், நியாயமாகவும் நடைபெற்றமை அதன் ஒரு பிரதிபலனாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாங்கள் ஆற்றிய அந்தப் பணிகளுக்கான சரியான தீர்மானத்தை எதிர்காலமே பெற்றுக்கொடுக்கும் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் தொடர்பில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கின்ற போதிலும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை கருத்திற் கொண்டு, அவர்களின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தாம் பதவி விலகத் தீர்மானித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :