You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்ன ஆனது இலங்கை அணிக்கு? எப்படி சாதித்தது இந்தியா? : 5 முக்கிய காரணங்கள்
இலங்கை அணிக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 5-0 என்று ஒயிட்வாஷ் செய்தது.
முன்னதாக, கடந்த மாதத்தில் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா 3-0 என்று ஒயிட்வாஷ் செய்த நிலையில், இந்தியாவின் முழுமையான வெற்றிக்கும், இலங்கை அணியின் படுதோல்விக்கும் 5 முக்கிய காரணங்களை இக்கட்டுரை அலசுகிறது.
- என்ன ஆனது இலங்கை அணிக்கு?
கடந்த மாதத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 3 டெஸ்ட் போட்டிகளையும் சிறப்பாக வென்று இலங்கை அணிக்கு இந்திய அணி பெரும் அதிர்ச்சியளித்தது.
முதல்முறையாக இலங்கை மண்ணில் 3-0 என்று டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, டெஸ்ட் தொடரின் மகத்தான வெற்றி ஒருநாள் போட்டி தொடரை நம்பிக்கையுடன் தொடங்க உதவியது.
டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றதால், அது இலங்கை அணியின் நம்பிக்கையை மிகவும் குலைத்து, ஒருநாள் தொடரிலும் பிரதிபலித்தது.
அதனால் சோர்வுடன் விளையாடிய இலங்கை அணி 5-0 என்று ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்துள்ளது.
- இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடி பாணி
டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணி பெரும் வெற்றி பெற்றதற்கு இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடியும், நிதானமும் கலந்த பாணி பெரிதும் உதவியது.
டெஸ்ட் தொடரிலும், அதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும், பல கட்டங்களில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, ரோகித், தவான் போன்றோரின் அதிரடி ஆட்டம், புவனேஸ்வர்குமார் மற்றும் டோனியின் நிதான ஆட்டம் ஆகியவை உதவியுள்ளன.
இதேபோல் அவ்வப்போது கே. எல். ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் சிறப்பாக பங்களித்தனர்.
சிகரம் வைத்தாற்போல் மிக சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் கோலி, அணியின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்.
- நம்பிக்கையுடன் காணப்படும் இந்திய பந்துவீச்சாளர்கள்
அண்மையில் முடிவடைந்த ஒருநாள் தொடரில், நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டாவதாக பேட் செய்த நிலையில், குறைந்த அளவு இலக்கு நிர்ணயிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான்.
இதே போல், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்று வென்றதற்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு உதவியது.
அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், சுழல் பந்துவீச்சாளர்களும் வெவ்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளனர்.
- சோபிக்கத் தவறிய இலங்கை மட்டைவீச்சாளர்கள்
டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியால் பெரும் எண்ணிக்கையில் ரன்களை குவிக்கமுடியவில்லை.
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் மட்டைவீச்சாளர்கள் விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தனர்.
ஆனால், அந்த வலுவான நிலையை பின்னர் களமிறங்கிய வீரர்கள் வீணடித்துவிட்டனர். இதே போல் மற்ற போட்டிகளிலும் நிலைத்து விளையாடாத இலங்கை மட்டைவீச்சாளர்களால் பெரும் எண்ணிக்கையை குவிக்கமுடியவில்லை.
அணியின் முக்கிய வீரர்களில் ஓரிருவரை தவிர மற்ற யாரும் இந்த தொடர்களில் சிறப்பாக பங்களிக்கவில்லை.
- உத்வேகம் குறைந்த நிலையில் இலங்கை பந்துவீச்சாளர்கள்
நேற்று முடிவடைந்த ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை பந்துவீச்சாளர்களில் தனஞ்ஜயவை தவிர மற்ற யாரும் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.
டெஸ்ட் தொடரில் பல கட்டங்களில் உத்வேகம் குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்களால் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்தமுடியவில்லை.
இதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும் நம்பிக்கை குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சளர்களால் தங்கள் அணிக்கு கிடைத்த வலுவான நிலையை பயன்படுத்த முடியவில்லை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :