குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் ; 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலத்தில் 2002 ஆண்டில் நடந்த படுகொலைகளில் குல்பர்க் சொசைட்டி சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனை

இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட வேறு 12 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குஜராத்தின் அஹமதாபாதில் உள்ள குல்பர்க் சொசைட்டி என்ற குடியிருப்புப் பகுதியில் , இந்துக்கள் கும்பல் ஒன்று நடத்திய வன்முறையில், 69 பேர் வெட்டியும், தீவைத்தும் கொல்லப்பட்டனர்.

இவர்களில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஷான் ஜாஃப்ரியும் அடங்குவார்.

குல்பர்க் சொசைட்டி வன்முறைகள் ( ஆவணப்படம்)

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, குல்பர்க் சொசைட்டி வன்முறைகள் ( ஆவணப்படம்)

இந்தச் சம்பவம் குஜராத் மாநிலமெங்கும் நடந்த முஸ்லீம்களுக்கெதிரான கலவரங்களில் ஒரு பகுதியாக நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்டவர்கள் ( பெரும்பாலோனோர் முஸ்லீம்கள்) கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரங்கள் அதற்கு முன்பாக, கோத்ரா என்ற இடத்தில் இந்து யாத்ரீகர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி ஒன்று தீவைக்கப்பட்டு சுமார் 60 இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து வந்தன.