திருக்குறள், திருவள்ளுவரை தமிழ்நாடு கட்சிகள், ஆளுநர் பயன்படுத்துவது அரசியல் ஆதாயத்துக்காகவா?

திருவள்ளுவர்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

திருவள்ளுவர் குறித்தும் திருக்குறள் குறித்தும் எழும் சர்ச்சைகள் புதிதல்ல. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் திருவள்ளுவரை தங்களின் அடையாளமாக கூறிக்கொள்வதும் அரசியல் தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக திருக்குறள் ஒன்றை கூறி தொடங்குவதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழ் மொழியின் தமிழ்நாட்டு மக்களின் அடையாளமாக திகழ்ந்த திருக்குறள், இன்று தேசம் முழுவதும் தேசத்தைக் கடந்தும் பயணிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் திருவள்ளுவரை வெவ்வேறு விதங்களில் கொண்டாடுவதை பார்க்கிறோம். திருவள்ளுவரை ஒவ்வொரு கட்சியும் அடையாளப்படுத்துவது, வாக்கு அரசியலுக்காகவே என்றும் அவர் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசியல் களத்தில் திருவள்ளுவரைச் சுற்றி கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்:

திமுக ஆட்சிக்காலத்தில் குறிப்பாக முதல்வராக கருணாநிதி இருந்தபோது திருவள்ளுவரை தமிழின் அடையாளமாக மாற்றுவதற்காக பல முயற்சிகள் நடந்தன.

1976ஆம் ஆண்டில் சென்னையில் வள்ளுவர் கோட்டம், 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையிலான 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பிரமாண்ட கட்டுமானங்கள் திமுக ஆட்சியில் எழுப்பப்பட்டன. மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் 2009ம் ஆண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார் கருணாநிதி.

கட்டுமானங்களில் மட்டுமல்லாமல், திருக்குறள் தமிழ் இலக்கிய உலகிலும் பல்வேறு வடிவங்களிலும் முன்னிறுத்தப்பட்டது. 1330 குறள்களுக்கும் உரை எழுதியுள்ள கருணாநிதி, ஒவ்வொரு குறளுக்கேற்ப சிறுசிறு கதைகளை சித்தரித்து அதற்கேற்ப ஓவியம் தீட்டி குறளோவியத்தையும் உருவாக்கினார். அரசுப் பேருந்துகளில் திருக்குறள், அரசு அலுவலகங்களில் திருக்குறள் என பல்வேறு வடிவங்களில் திருக்குறளை மக்கள் மனதில் பதிப்பதற்காக ஓர் இயக்கமாக திமுக அரசு முன்னெடுத்தது.

கடந்த 7-8 ஆண்டுகளாக திருவள்ளுவரை சுற்றி நடப்பவற்றில் பல பாஜக முன்னெடுக்கும் சில சர்ச்சைகளின் அடிப்படையில் ஏற்படுவதாக விமர்சனங்கள் உள்ளன.

வட இந்தியாவில் திருவள்ளுவரை எடுத்துச் செல்வதில் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் ஆர்வம் காட்டினார்.

தருண் விஜய்

'திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு வட இந்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இந்தி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். அப்போதுதான், திருவள்ளுவர் சிறப்பை அறியாமல் இந்தியாவின் ஒருமைப்பாடு முழுமை பெறாது என்று மக்கள் புரிந்து கொள்வர்". தன்னுடைய முயற்சியில் உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முன்னின்ற தருண் விஜய் அச்சமயத்தில் கூறியவை இவை.

ஆனால், 2016 டிசம்பரில் இந்த திருவள்ளுவர் சிலை நிறுவப்படுவதற்கு முன்பே ஜூன் மாதத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதற்கு சில மதவாத அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டுக் கிடந்தது. அதன்பின், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய நிலையில், சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.

'காவி திருவள்ளுவர்' சர்ச்சை

அதேபோன்று, பல்வேறு உருவ மாறுதல்களுக்குப் பிறகு, வேணுகோபால் சர்மா என்பவர் உருவாக்கிய வெண்ணிற உடையில் காட்சியளிப்பது போன்ற திருவள்ளுவர் படமே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவி உடை அணிந்தபடி சித்தரித்து, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று, தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும் காவி உடையணிந்து திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து பாஜக 'காவி திருவள்ளுவரை' முன்னிறுத்துவதாக விமர்சனம் எழுந்தது.

திருவள்ளுவர் பாஜக

'காவி திருவள்ளுவர்' சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் மோதி தமிழ்நாடு வரும்போதெல்லாம், கலந்துகொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமாகவே உள்ளது.

அதன் சமீபத்திய உதாரணமாக, சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோதி, அதன் விளக்கத்தையும் கூறினார்.

அதாவது, 'ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே' என்ற திருக்குறள் விளக்கத்தையும் பிரதமர் மோதி எடுத்துரைத்தார்.

திருவள்ளுவரை பாஜக கையிலெடுப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, நவம்பர் 2021-ல் `திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய, நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை வள்ளுவர் எழுதியுள்ளதாக நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது" என்றார்.

திருக்குறள் திருவள்ளுவர்

மேலும், ``திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகின்றனர். ஆனால், மதமும் கடவுளும் வேண்டாம் என வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் நடைபெற்று வருகிறது. சமூக நீதியை வென்றெடுப்பதற்கு திருக்குறளும் ஓர் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிப்பதற்கு இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார்.

"ஜி.யு.போப் ஒரு மதபோதகர்"

திருவள்ளுவர் - திருக்குறள் குறித்த சமீபத்திய சர்ச்சையாக இருப்பது, டெல்லியில் சிலை திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதுதான்.

திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு. போப் பற்றி பேசிய அவர், "ஆதிபகவன் என்ற திருக்குறளில் 'ஆதிபகவன்' என்ற வார்த்தையை "முதன்மை தெய்வம்" (ப்ரைமல் டெய்ட்டி) என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார். ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். ஜி.யு. போப் ஒரு மதபோதகர். அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர்.

1813இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவையை பிரித்தெடுத்தார்" என பேசினார்.

"தமிழர்கள் வாழ்வோடு கலந்தது திருக்குறள்"

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சர்ச்சைகளின் மையமாக திருவள்ளுவர் இருக்கிறாரா என்பது குறித்தும் தமிழக கட்சிகள் வாக்கு அரசியலுக்காக திருவள்ளுவரை பயன்படுத்துகின்றதா என்பது குறித்தும் 'அறம்' இணைய இதழின் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் 'பிபிசி தமிழிடம்' பேசினார்.

சாவித்திரி கண்ணன்
படக்குறிப்பு, சாவித்திரி கண்ணன்

"மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து பொது நிலையில் திருக்குறளை படைத்திருப்பதால்தான் அது 'உலகப் பொதுமறையாக இருக்கிறது. எந்த சார்பு நிலையும் எடுக்காமல் எல்லா காலகட்டத்திற்கும் பொதுவானதாக இருக்கிறது. எந்தவொரு மதவாதியும் அதனை கையகப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லாத ஈர்ப்பும் மரியாதையும் திருவள்ளுவர் மீது உண்டு. தமிழர்கள் வாழ்வோடு கலந்துபோனது திருக்குறள். தமிழர்களுக்கு திருக்குறள் பன்னெடுங்காலமாக ஒரு ஞான விளக்காக இருக்கிறது. அது மாயை அல்ல. வதந்தியும் அல்ல, மிக வெளிப்படையான இலக்கியம்.

இத்தகைய இலக்கியம் குறித்து ஆளுநர் கையில் எடுத்து இப்படி பேசுவது அவர்களுக்கு தோல்வியில்தான் முடியும்.

திருக்குறளை தன் வாழ்வியலாகக் கொண்டவர் ஜி.யு.போப், அவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாது. தொண்டு மனப்பான்மையுடனும் தமிழை தமிழர்களைக் காட்டிலும் ஆழமாக புரிந்துகொண்டவர். சர்வதேச அரங்குக்கு திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தவர். அவரையே குற்றம்சொல்வது பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.

எதிலெல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அதிலெல்லாம் அரசியல் செய்கின்றனர்.

தமிழர்களுக்கு மொழி மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அவர்களின் அடையாளங்களுள் ஒருவராக திருவள்ளுவர் இருக்கிறார். மொழி மீதான அபரிமிதமான ஈர்ப்பையும் திருவள்ளுவர் மீதான மரியாதையையும் தொடுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு நெருக்கமாகிவிடலாம் என பாஜக கருதுகிறது.

பாஜகவின் தருண் விஜய் சிறிது காலம் திருவள்ளுவரை முன்னெடுத்தார், அதன்பிறகு அவர் காணாமல் போய்விட்டார்" என தெரிவித்தார்.

திமுக அரசியல் செய்ததா?

திருக்குறள் திருவள்ளுவர்

திமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைப்பது போன்ற முன்னெடுப்புகள் வாக்கு அரசியல் ஆகாதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாவித்திரி கண்ணன், "திமுகவின் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். திருக்குறளை மக்கள் இயக்கமாக கொண்டுவந்தது திமுகதான். கிராமம்தோறும் வாசிப்பு பட்டறைகளை நிறுவி வாசிப்பை இயக்கமாகக் கொண்டு வந்தது திமுக. இதன் தொடர் வெளிப்பாடாக வள்ளுவரை பொதுமைப்படுத்த வேண்டும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் வள்ளுவருக்கு கருணாநிதி சிலை எழுப்புகிறார். அதனுள் ஒரு வாக்கு அரசியல் இருக்கலாம், இல்லை என்று சொல்ல முடியாது. அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம்.

ஆனால், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து அவர்கள் செய்வது இயல்பான, தமிழர்களோடு கலந்த விஷயம்.

ஆனால், பாஜக காவி உடையணிந்து திருவள்ளுவரின் கீர்த்தியையும் புகழையும் அபகரிக்க முயற்சிக்கின்றனர். அந்த மாதிரி இல்லாமல், திமுக இயல்பாக செய்தது அவர்களின் வாக்கு அரசியலுக்கும் பயன்பட்டது" என தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, "இலவசங்கள் சமூக ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்" - ஜெ. ஜெயரஞ்சன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: