அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு: ஆண்கள் வேலை வாய்ப்பை எந்த அளவு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கான வாய்ப்பை முழுமையாகப் பறிக்கும் என்கிறார்கள் போட்டித் தேர்வர்கள். உண்மை என்ன?
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு ஏற்கனவே 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை பார்க்கும் சதவீதத்தை இது அதிகரிக்கும் என்பதால் அவரது இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்தும் வரவேற்புகள் வெளியாயின. இதற்கு முன்பாக, 1989ல் மு.கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தபோது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த இட ஒதுக்கீடு மேலும் பத்து சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு, காலத்தின் கட்டாயம் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தற்போதுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு முறையிலேயே பெரும்பாலான இடங்களை பெண்கள்தான் பெறுகிறார்கள். இது இன்னும் அதிகரிக்கப்பட்டால், ஆண்களுக்கான வாய்ப்புகள் மேலும் குறையும் என்கிறார்கள் தேர்வர்கள்.
"தேர்வு முடிந்து தரவரிசைப்படி பட்டியலிடும்போது 40 சதவீதம் பெண்கள் வந்துவிட்டால், தனியாக பெண்களுக்கான தனி ஒதுக்கீட்டை அந்தந்தப் பிரிவுகளில் பின்பற்றக்கூடாது. ஆனால், அப்படி பெண்கள் 40 சதவீதத்தையும் தாண்டி தேர்ச்சிபெற்றாலும்கூட, தனியாக பெண்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இது ஆண்களின் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கிறது" என்கிறார் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளரான ஐயாசாமி.
டிஎன்பிஎஸ்சி காட்டும் புள்ளிவிவரங்களின்படி, குரூப் 1, குரூப் 2 போன்ற உயர்நிலைத் தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது குரூப் 1 தேர்வில் 75 சதவீதமும் குரூப் 2ல் சுமார் 60 சதவீதமும் பெண்களே பெறுகிறார்கள்.
குரூப் 4 போன்ற கீழ் நிலைத் தேர்வுகளில்தான் ஆண்கள் சற்று அதிக எண்ணிக்கையில் தேறுகிறார்கள். அதாவது 45 அளவுக்கு ஆண்களுக்குக் கிடைக்கிறது. ஆகவே, மொத்த இடங்களில் ஆண்களுக்கு ஐம்பது சதவீதம், பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இடஒதுக்கீட்டை அளிக்கலாம் என்கிறார்கள் சில பயிற்சியாளர்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மனித வள மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் அளிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலும், 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையிலேயே 2019ல் டிஎன்பிஎஸ்சியின் எல்லா பிரிவுகளிலும் பெண்களே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால், இந்தக் கூற்றைப் புறக்கணிக்கிறார் கோ. கருணாநிதி. "முதன் முதலில் இட ஒதுக்கீடுவந்தபோது, தங்களுடைய வாய்ப்புகள் பறிபோகுமென்று உயர் ஜாதியினர் இதேபோன்ற வாதத்தைத்தான் வைத்தார்கள். அதே போலத்தான் இன்று ஆண்கள் இதனை எதிர்க்கிறார்கள். தற்போது எந்தத் தேர்வை எடுத்துக்கொண்டாலும் பெண்கள்தான் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆகவே, அவர்கள்தான் கூடுதலான இடங்களைப் பிடிப்பார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை" என்கிறார் அவர்.
இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகத்தான் இதைச் செய்கிறார்கள். காரணம், புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் உடனடியாக வெளியிடப்படுவதால் இந்த எதிர்ப்பு வருகிறது என்கிறார் சங்கர் ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்த சிவபாலன்.
"அரசு இது தொடர்பான புள்ளவிவரங்களை முழுமையாக வெளியிட்டு, ஏன் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கிறோம் என்பதைச் சொல்லி, 40 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் சொன்னதால்தான் எதிர்ப்பு வருகிறது. உண்மையில் 1989 முதல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அரசுப் பணிகளில் இருக்கும் பெண்களின் விகிதாச்சாரம் 50 சதவீதத்தை எட்டவில்லை. ஒரு கட்டத்தில் அதை எட்டும்போது, இரு தரப்பினருக்கும் 50 - 50 என்ற விகிதத்தில் வேலைவாய்ப்புகளை அளிக்கலாம். இந்த விவகாரத்தை இன்றைக்கு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு அணுகக்கூடாது. ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம்" என்கிறார் சிவபாலன்.

பட மூலாதாரம், Getty Images
1929 பிப்ரவரியில் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடந்தபோது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்றும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகளாக 100 சதவீதமும் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் பெரியார் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
"அந்தத் தீர்மானத்தை நெருங்கும் வகையில் தமிழ்நாடு அரசு இப்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நாம் மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்" என்கிறார் கருணாநிதி. பள்ளி இறுதித் தேர்வுகள் முதல் அனைத்துத் தேர்வுகளிலும் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். மாணவிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி, அதிக இடங்களைப் பிடிக்கிறார்கள் என்றால் அது அவர்களது உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வருகிறது. அதற்கு இடஒதுக்கீட்டை குறைசொல்லக்கூடாது என்கிறார் அவர்.
ஆனால், ஆண் தேர்வர்கள் அரசின் இந்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது ட்விட்டரில் #JusticeForMenInTNPSC என்ற ஹாஷ்டாகை அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- இலங்கை தமிழ் அரசியல் கைதிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்? அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












