தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாடு லாக்டவுன்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பதினொரு மாவட்டங்களில் மட்டும் பின்வரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

1. வீடுகள், அலுவலகங்களில் இ - பதிவுடன் பராமரிப்புச் சேவைகள் அனுமதிக்கப்படும்.

2. மின்பொருள் பணியாளர்கள், பிளம்பர்கள், கணிணி பணியாளர்கள் இ - பதிவுடன் காலை முதல் மாலை வரை வீடுகளுக்குச் சென்று பணியாற்றலாம். ஆனால், இதற்கான கடைகளைத் திறக்க அனுமதி இல்லை.

3. மிதிவண்டி, இரு சக்கர வாகனங்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை செயல்படலாம்.

4. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ - பதிவுடன் அனுமதிக்கப்படும்.

5. வேளாண் உபகரணங்கள், பம்ப்செட்கள் பழுது நீக்கும் கடைகள் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

6. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

7. மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

8. ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் பின்வரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முடித்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

1. அழகு நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

2. பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் காலை 6 மணி முதல் 9 மணிவரை திறக்கப்படும்.

3. வேளாண் உபகரணங்கள், பம்ப்செட்கள் பழுது நீக்கும் கடைகள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

4. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

5. மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

6. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் கடைகள் பிற்பகல் வரை செயல்படலாம்.

7. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

8. செல்போன் மற்றும் அவை சார்ந்த விற்பனை நிலையங்கள் பிற்பகல்வரை செயல்படலாம்.

9. கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் வரை செயல்படலாம்.

10. டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டுபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் வரை செயல்படலாம்.

11. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

12. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது பத்து பேர் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

13. தொழிற்சாலைகளில் பணிகளுக்குச் செல்வோர் முன்பு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. அவர்கள் தற்போது இ - பதிவுடன் பணிக்குச் சென்று வரலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :