தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுவது ஏன்?

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் கட்சி முதலாவதாக ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், தியாகராய நகரில் பழ. கருப்பைய்யா, மைலாப்பூரில் திரைக்கலைஞர் ஸ்ரீபிரியா, ஆலந்தூரில் சரத்பாபு, வானூரில் தலித் மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்பின் பொய்யாமொழி, எடப்பாடியில் தாசப்பராஜ், சிங்காநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிவித்தார். அந்த பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தற்போது இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால், அந்தத் தொகுதியில் ம.நீ.ம சார்பில் சுபா சார்லஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றையும் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "கோயம்புத்தூர் எனக்கு மிகவும் பிடித்த ஊர். ஆனால், கொங்கு ஊழல் கோட்டையாக மாறியிருக்கிறது. அதை மாற்றியமைக்க அங்கு போட்டியிடுகிறேன். கொங்கின் சங்கநாதமாக என் குரல் ஒலிக்கச்செய்ய வேண்டிய கடமை மக்களுடையது. சரித்திரங்களில் ஊழல் நிகழ்ந்திருக்கிறது. பெரிய மாற்றத்தை நேர்மையானவர்கள்தான் கொண்டுவந்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஏற்கனவே 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தற்போது 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் என மொத்தமாக 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :