கொரோனா வைரஸ் சென்னை ஊரடங்கு விதிகள்: இன்று முதல் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமென சென்னை நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருவோர் மீது வழக்குப் பதியப்படுமெனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதன் பெரும் பகுதியினர் சென்னையில்தான் உள்ளனர். கிட்டத்தட்ட 70 சதவீத கொரோனா நோயாளிகள் சென்னையில்தான் உள்ளனர்.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை சென்னை நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்தது.

இந்த முறை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமென்றும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படுமென்றும் சென்னை மாநகரா ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோர், தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பணிக்குச் செல்லலாம் எனத் தெரிவித்தார்.

சென்னைக்கு வெளியில் பணியாற்றுவோரும், சென்னைக்கு வெளியில் குடியிருந்தபடி தினசரி சென்னைக்கு வந்துசெல்வோரும் ஊரடங்கு தினங்களில் செல்ல முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் எல்லைப் பகுதிகள் தவிர, சென்னை நகருக்குள்ளேயே 288 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்

சென்னையைவிட்டு வெளியேறுபவர்கள், தகுந்த இ - பாஸ் வைத்திருக்க வேண்டுமென்றும் இ - பாஸ் இல்லாமலோ போலி இ - பாஸுடனோ வெளியேற முயன்றால் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாஸ் வாங்கிவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டுமென்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வீட்டைவிட்டு வெளியில் வருவோர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும் வேலையில்லாமல் சும்மா சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

கடந்த முறையைப் போலவே இந்த முறையும் சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகியவை மூடப்படவிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் நேரக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளன.

Banner image reading 'more about coronavirus'
Banner

தற்போது சென்னை நகரக் காவல்துறையில் உள்ள 20,000 பேரில் 17,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மீதமுள்ள 3 ஆயிரம் பேர் ரிசர்வாக இருப்பார்கள். இதுதவிர, சிறப்புக் காவலர்கள் ஆயிரம் பேரும் சென்னை நகருக்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொருட்களை வாங்குவோர் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டுமென்றும் அதற்கு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ சேவை, ரயில் நிலையம், விமான நிலையங்களில் இருந்து வீடு திரும்புதல் ஆகியவற்றுக்கு வாடகை வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: