தனது கடைசி டிவிட்டர் பதிவில் கௌரி லங்கேஷ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Twitter
வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் செவ்வாய்க்கிழமையன்றுசுட்டுக்கொல்லப்பட்டார்.
கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டிவிட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கிவந்த கௌரி லங்கேஷ், கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Facebook
தனது டிவிட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்ட போலி செய்தி ட்வீட்கள் உள்ளிட்ட பலவற்றை கௌரி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். போலி செய்திகள் சில சயங்களில் தவறுதலாக பகிரப்பட்டு வருவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு 9 மணி நேரம் முன்னதாக, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் குறித்த செய்தி இணைப்பு ஒன்றை கௌரி ட்வீட் செய்தார்.
இந்நிலையில் கௌரி இறந்தபிறகு அவரது ட்வீட்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.
கடைசி டிவிட்டரில் கௌரி சொன்னது என்ன?
தான் இறப்பதற்கு முன்பு கௌரி வெளியிட்டிருந்த ட்வீட்களில் போலி செய்திகள் பகிரப்படுவது குறித்து கௌரி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Twitter
தனது டிவிட்டரில், ''போலியான செய்திகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துவிடும் தவறினை நாம் செய்துவிடுகிறோம். இது குறித்து நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்; மற்றவர்களின் தவறுகளை படம்போட்டுக்காட்ட முயற்சிக்க வேண்டாம்'' என்று கௌரி தெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் , ''நாம் நமக்குள் சண்டை போட்டு வருவதாக ஏன் எனக்கு தோன்றுகிறது? நமது பெரிய எதிராளி யார் என்று நமக்கு தெரியும். அது குறித்து நாம் கவனம் செலுத்தலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துவந்தார் கௌரி.
கௌரியின் தந்தை பி.லங்கேஷ், ஒரு கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர்.
தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரன் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் கௌரி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












