You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக துணை முதல்வராகிறார் ஓ.பி.எஸ்: அமைச்சரவை இன்று மாலை 4.30 மணிக்கு மாற்றம்
தமிழகத்தில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாலை 4.30 மணிக்கு துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கிறார்.
இது தொடர்பாக மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் யோசனைப்படி, துணை முதல்வராக பதவியேற்கும் ஓ.பன்னீர்செல்வம் வசம் நிதி, வீட்டுவசி, கிராமப்புற வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் பன்னீர்செல்வம் ஆதரவாளரகான கே.பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சி மொழித் துறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டிவசம் உள்ள கால்நடைத்துறை, உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடமும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவனித்து வந்த இளைஞர் விவகாரங்கள் துறை, பி.பாலகிருஷ்ண ரெட்டியிடமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, எம்.பி.சம்பத் வகித்து வந்த சுரங்கம் மற்றும் கனிம வளத் துறைகளின் பொறுப்பு, அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் ஒப்படைக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேர் குழு அறிவிப்பு:
முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையதுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இருவரின் தலைமையிலான அணிகள் இணைப்பை அவர்கள் உறுதிப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வலுப்படுத்த கட்சித் தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி. முனுசாமி, ஒருங்கிணைப்பு துணை அமைப்பாளராக வைத்திலிங்கம் இணைந்து பணியாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பழனிசாமி குறிப்பிட்டார்.
அதிமுகவை வலுப்படுத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு நியமிக்கப்படும் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தங்களுடைய நோக்கமாக இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சசிகலா நீக்கமா?
இக்கூட்டத்தின் முடிவில் பேசிய வைத்திலிங்கம், "சசிகலாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி தீர்மானிக்கும்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :