மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
அமலாக்கத் துறையின் (ED) மனு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லைவ் லா (Live Law) தளத்தின்படி, ஐ-பேக் வளாகத்தில் நடந்த சோதனையின்போது நடந்ததாகக் கூறப்படும் குறுக்கீடு தொடர்பாக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மற்றும் டிஜிபி, காவல்துறை ஆணையர், காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐ-பேக் வளாகத்தில் நடந்த விசாரணையின்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மற்றும் மாநில அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அமலாக்கத் துறை விசாரணையில் தலையிட்டு தடுத்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லைவ் லா செய்தியின்படி, "இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு பிப்ரவரி 3, 2026 அன்று எடுத்துக் கொள்ளப்படும். இடைப்பட்ட காலத்தில், பிரதிவாதிகளான மேற்கு வங்க அரசு, ‘ஐ-பேக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான காட்சிகளைக் கொண்ட அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பாதுகாக்க வேண்டுமென’ அறிவுறுத்தப்படுகிறது" என நீதிமன்றம் கூறியது.
நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐ-பேக் தொடர்பாக விசாரிக்க வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மேற்கு வங்க காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.