You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூர் அருகே அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் காணவில்லை
சிங்கப்பூருக்கு அருகே அமெரிக்க போர் கப்பலும், எண்ணெய் ஏற்றிச் சென்ற ஒரு கப்பலும் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து அமெரிக்க கடற்படை மாலுமிகள் காணாமல் காணாமல் போய் உள்ளதாகவும், ஐந்து மாலுமிகள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் கிழக்கு கடல் பகுதியில் யுஎஸ்எஸ் ஜான் எஸ். மக்கெயின் என்ற ஏவுகணை போர்கப்பல், துறைமுகத்தில் நிறுத்தத் தயாரான நேரத்தில் லைபீரியா நாட்டுக் கொடியைக் கொண்ட எண்ணெய்க் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காணாமல் போன அமெரிக்க கப்பல் மாலுமிகளை தேடும் பணியும் மீட்பு நடவடிக்கைளும் நடந்து வருகிறது.
இந்த மோதல் சம்பவத்தில் விபத்துக்குள்ளான அல்னிக் எம் சி என்ற எண்ணெய் கப்பல் 30,000 டன் எடையை கொண்டது. இது யுஎஸ்எஸ் ஜான் எஸ். மக்கெயின் கப்பலை விட மூன்று மடங்கு அதிக எடை கொண்டது.
இந்த விபத்தில் எண்ணெய்க் கப்பலின் முன் பக்கம் சேதமடைந்தபோதிலும், கப்பலில் இருந்த பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. மேலும் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்களுடன், சிங்கப்பூர், மலேசிய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்த நான்கு மாலுமிகளுக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயகங்கள் எதுவும் இல்லை என்றும், அவர்கள் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், ஒரு மாலுமிக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்றும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
அல்னிக் எம் சி எண்ணெய்க் கப்பல் சுமார் 12,000 டன் எண்ணெய் ஏற்றிக்கொண்டு தைவானில் இருந்து சிங்கப்பூர் வந்தது
``கப்பலில் இருந்து எண்ணெய் கசியாததால், கடலில் மாசு ஏற்படவில்லை. மேலும், சிங்கப்பூர் நீர்வழிப் பாதையில் எந்த பாதிப்பும் இல்லை`` என சிங்கப்பூர் துறைமுக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :