ஜவாஹிரி கொல்லப்பட்டது எப்படி? பால்கனியில் நடமாடியவரை பதுங்கியிருந்து பழிதீர்த்த அமெரிக்காவின் சிஐஏ

பட மூலாதாரம், Getty Images
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை மிரட்டி வந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்- ஜவாஹிரியை பொறுமையாகப் பதுங்கியிருந்து கொன்றிருக்கிறது சிஐஏ அமைப்பு.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிக்கும்வரை, ஜவாஹிரி பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியிலோ அல்லது ஆப்கானிஸ்தானுக்குள்ளோ இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.
மிகவும் ரகசியமாக உலவிக் கொண்டிருந்த ஜவாஹிரி, அமெரிக்காவின் கண்காணிப்பில் சிக்கியது எப்படி? அவரை எப்படி குறிவைத்துக் கொன்றார்கள் என்பது பற்றி ஒரு அதிகாரி கூறியதாக சில தகவல்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜவாஹிரி ஒருங்கிணைத்து வந்தார்.
"அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஒரு பயங்கரவாத நெட்வொர்க் பற்றி அமெரிக்காவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தன" என்று ராய்ட்டர் நிறுவனம் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, நாட்டில் அல்காய்தாவின் நடமாட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வந்தனர்.
காத்திருந்த சிஐஏ
அந்த அடிப்படையில், இந்த ஆண்டு, ஜவாஹிரியின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே இடத்தில் ஜவாஹிரியை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
ஆனால் உனடியாகத் தாக்குதலைத் தொடங்கிவிடவில்லை. பல மாதங்களாகக் காத்திருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆள், அல் ஜவாஹிரிதான் என்பதை படிப்படியாக உறுதி செய்வதற்காக பல்வேறு உத்திகளை அமெரிக்க உளவு அதிகாரிகள் மேற்கொண்டனர். இறுதியில் அவர்தான் அந்த ஆள் என்பதை உறுதி செய்த பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் மூத்த அதிகாரிகளுக்கு விளக்கினர்.

பட மூலாதாரம், Reuters
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அதிபர் ஜோ பைடனிடம் விளக்கியதாக ராய்ட்டர் கூறுகிறது.
இதன் பிறகு ஜவாஹிரியைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
தலைக்கு 200 கோடி ரூபாய் விலை வைத்திருந்த போதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டின் பால்கனிக்கு வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் கூறியிருக்கின்றனர்.
துல்லியமான திட்டம்
"ஜவாஹிரி இருந்த வீட்டின் கட்டுமானம் மற்றும் தன்மையை ஆராய்ந்து, அதில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, கட்டடத்தின் கட்டமைப்க்கு அச்சுறுத்தல் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் ஜவாஹிரியின் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஜவாஹிரியை கொல்ல முடியும்" என்பதை அதிகாரிகள் உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் குறஇப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில் துல்லியமான திட்டத்தை தேர்வு செய்வதற்கு அதிபர் ஜோ பைடன் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியிருக்கிறார். சிஐஏ தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருக்கின்றனர். திட்டம் குறித்து அப்போது ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டங்களின்போது, ஜவாஹிரிதான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை பைடன் கேட்டதாக ராய்ட்டர்ஸிடம் பேசிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜவாஹிரி வசித்த வீட்டின் மாதிரி கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதை பைடன் ஆய்வு செய்ததாகவும் ராய்ட்டஸ் கூறுகிறது.
அத்துடன் வெளிச்சம், வானிலை, வீட்டின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் என தாக்குதலின் வெற்றியைப் பாதிக்கும் பிற காரணிகள் குறித்தும் பைடன் கேட்டறிந்தார் என்று அந்த அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டம் வழக்கறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் ஜவாஹிரியைக் கொல்வது விதிகளுக்கு உள்பட்டது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கோவிட் தொற்றுடன் பைடன்
கடைசியாக ஜவாஹிரியைக் கொல்வது தாலிபன்களுடனான உறவைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது தொடர்பான அதிகாரிகளின் விளக்கத்துக்குப் பிறகு துல்லியான ஒரு வான் வழித் தாக்குதலுக்கு பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார். அது ஜூலை மாதம் 25-ஆம் தேதி. பைடனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருந்த நேரம்.

பட மூலாதாரம், Getty Images
2011-ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்ட போது துணை அதிபராக பைடன் இருந்தார். அப்போது பாகிஸ்தானுடனான உறவு எந்த அளவு பாதிக்கப்படும் என்பது குறித்து பைடன் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அமெரிக்க ராணுவத்தின் வீரர்கள் யாரும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையவில்லை.
திட்டமிட்டபடி உள்ளூர் நேரப்பட்டி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.48 மணிக்கு ட்ரோனில் இருந்து ஏவப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை மூலம் ஜவாஹிரி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை 'வெடிக்காத' வகையைச் சேர்ந்தது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தவிர கட்டடத்தின் வேறு பகுதி எதுவும் சேதமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர்
எகிப்திய தலைநகர் கெய்ரோவில் 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்ட மரியாதைக்குரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஜவாஹிரி.
அவரது தாத்தா, ரபியா அல்-ஜவாஹிரி, மத்திய கிழக்கின் சன்னி இஸ்லாமிய கற்றலின் மையமான அல்-அஸ்ஹரின் தலைமை இமாமாக இருந்தார். அதே நேரத்தில் அவரது மாமா ஒருவர் அரபு லீக்கின் முதல் பொதுச் செயலாளராக இருந்தார்.
ஜவாஹிரி பள்ளியில் இருந்தபோதே இஸ்லாமிய அரசியலில் ஈடுபட்டார். எகிப்தின் பழமையான, மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினராக இருந்ததற்காக 15 வயதில் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவரால் மருத்துவம் படிக்க முடிந்தது. 1974 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1995 இல் இறந்த அவரது தந்தை முகமது அதே கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராக இருந்தார்.
அடிப்படைவாத இளமைப் பருவம்
ஜவாஹிரி ஆரம்பத்தில் குடும்ப பாரம்பரியத்தையே கடைப்பிடித்தார். கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் மருத்துவமனையைக் கட்டினார். ஆனால் எகிப்திய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்த தீவிர இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன.
எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் 1973-ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, அவர் அதில் இணைந்தார்.

பட மூலாதாரம், Reuters
1981 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது அதிபர் அன்வர் சதாத்தை சிப்பாய்கள் போல உடையணிந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருடன் ஜவாஹிரியும் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளின் கோபத்துக்கு சதாத் ஆளானார்.
நீதிமன்ற விசாரணையின்போது ஜவாஹிரியின் வாதம், அவரை இஸ்லாமியவாதிகளின் தலைவராக அடையாளப்படுத்தியது.
சதாத்தின் படுகொலையில் அவருக்கு தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
அவர் எகிப்தில் சிறையில் இருந்தபோது அதிகாரிகளால் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார் என்று சக கைதிகள் கூறுகின்றனர். இந்த அனுபவமே அவரை ஒரு வெறித்தனமான தீவிரவாதியாக மாற்றியதாக கூறப்படுகிறது.
1985-ல் விடுதலையானதைத் தொடர்ந்து ஜவாஹிரி சௌதி அரேபியாவுக்குச் சென்றார்.
பின்னர் பாகிஸ்தானின் பெஷாவருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சென்றார். அங்கு அவர் சோவியத் ஆக்கிரமிப்பின் போது மருத்துவராகப் பணிபுரிந்தார். அந்தத் தருணத்தில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஒரு பிரிவை அங்கு நிறுவினார்.
1993-ஆம் ஆண்டு எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் மீண்டும் செயல்படத் தொடங்கியபோது ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எகிப்திய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னணியில் ஜவாஹிரி இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
1990 களின் நடுப்பகுதியில் எகிப்திய அரசைக் கவிழ்த்து இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான அவரது அமைப்பின் தாக்குதல்களால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜவாஹிரிக்கு 1999-இல் எகிப்திய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மேற்கு நாடுகளுக்குக் குறி
ஜவாஹிரி 1990 களில் புகலிடம் மற்றும் நிதி ஆதாரங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்ததாகக் கருதப்படுகிறது.
1997 ஆம் ஆண்டில், ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அங்குதான் ஒசாமா பின்லேடன் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு வருடம் கழித்து, எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத், பின்லேடனின் அல்-காய்தா உள்ளிட்ட 5 அமைப்புகள் இணைந்து யூதர்களுக்கு எதிரான இஸ்லாமிய முன்னணி உருவாக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பின் முதல் பிரகடனத்தில் அமெரிக்க குடிமக்களை கொல்லக் கட்டளையிடும் ஃபத்வா அடங்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு 223 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களில் பின்லேடனும் அல்-காய்தாவும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தனர் என்பதற்கு சான்றாகக் கிடைத்த செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களில் ஜவாஹிரியும் பேசியிருந்தார்.
அந்தத் தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












