ரஜினியின் "அண்ணாத்த" படம் ஒத்திவைப்பு - புதிய கட்சி அறிவிப்பு தாமதமாகுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஹைதராபாத்தில் நடந்து வந்த அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றபோதும் அவர் பரிசோதனைக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படும் தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தின் படப்பிடிப்பை தீவிரமாக இயக்கி வந்தார்.

இந்த நிலையில் திடீரென ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் தாமதமாக தொடங்கிய படப்பிடிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்கி விட்டது. எனினும், படத்தின் பெயர் விவரம் வெளியாகவில்லை.

இது ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதாராபாதில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிடியில் தொடங்கியது.

இருப்பினும் படத்தை பெயரை சன் பிக்சர்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பிறகே இதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் ரஜினி படத்தின் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எட்டு மாத கட்டுப்பாடுகளுக்குப்பிறகு படப்பிடிப்பு நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் படப்பதிவு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமின்றி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் அரசியல் கட்சி தொடங்குவதாக உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கைகளும் தாமதமாகின. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதி தான் தொடங்கும் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக ரஜினிகாந்த் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார். அப்போது அண்ணாத்த படப்பிடிப்பு குறித்தும் பேசிய ரஜினி, குறித்த நேரத்தில் அந்த படத்தை வெளியிட வசதியாக ஹைதராபாத் படப்பிடிப்புக்கு சென்று விட்டு வந்து முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

இந்த நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரஜினி ஏற்கெனவே தெரிவித்தபடி புதிய கட்சி அறிவிப்பு தாமதமாகுமா அல்லது டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அவர் கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் இடையே மேலோங்கியிருக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :