You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இர்ஃபான் கான்: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்
புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தனது 53 வயதில் இன்று (ஏப்ரல் 29) காலமானார்.
லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த இர்ஃபான் கானின் உடல்நிலை மோசமானதால் நேற்று மும்பையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.
தனது இயல்பான நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்ட இர்ஃபான் கான், பாலிவுட் படங்களான பிக்கு, லன்ச் பாக்ஸ், கரிப் கரிப் சிங்கிள், மக்பூல் உட்பட 100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார்.
மேலும் லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லினியர், ஜுராசிக் வேல்ட் போன்ற ஆங்கில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் சனிக்கிழமையன்று, இர்ஃபானின் தாயார் சயீதா பேகம் ஜெய்பூரில் காலமானார்.
தற்போது இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தாயின் இறுதிச் சடங்கில் இர்ஃபானால் கலந்துகொள்ள முடியவில்லை.
தாயின் முகத்தை கடைசியாக நேரில் பார்க்க முடியாமல் வீடியோ கால் மூலம் பார்த்து அழுதார் இர்ஃபான்.
இர்ஃபான் கானின் உயிரை பறித்த புற்றுநோய்
இர்ஃபான் கான் 'நியுரோ எண்டோ க்ரைன்' புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ரத்தத்திற்குள் ஹார்மோன்களை விடுவிக்கும் செல்களை பாதிக்கும்.
இந்த புற்றுநோய் கட்டியானது, உடலின் பல்வேறு உறுப்புகளில் உருவாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில புற்றுநோய் கட்டிகள் ரத்தத்திற்குள் அதிக அளவிலான ஹார்மோன்களை விடுவிக்க செய்கிறது இதனால், இதய நோய், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது.
இதற்கு அறுவை சிகிச்சை அல்லது கிமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இர்ஃபான் கான் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
திரைப்பட நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "மிக சீக்கிரமாக சென்றுவிட்டீர்களே இர்ஃபான் ஜி. உங்களுடைய நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த சில சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீண்ட காலம் நீங்கள் இருப்பீர்கள் என்று விரும்பினேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இர்ஃபான் கான் நம்பமுடியாத திறமை கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன், அவரது மறைவு செய்தி மிகவும் சோகம் அளிப்பதாகவும் உலக சினிமாவில் அவருடைய பங்களிப்பு மிகவும் பெரிது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான இம்ரானின் மறைவு செய்தி வருத்தமளிப்பதாகவும், அவருடைய குடும்பத்திற்கு இந்தக் கடினமான நேரத்தில் கடவுள் பலம் கொடுக்கட்டும் எனவும் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டிருக்கிறார்.
"இர்ஃபான் கான் காலமான செய்தி வருத்தமாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் நடித்துள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இறுதியாக நான் பார்த்த திரைப்படம் ஆங்ரேஸி மீடியம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை திரிஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், அவருடைய கடின உழைப்பையும், கண்ணியம் மற்றும் திறமையையும் பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
திறமையுள்ள ஒரு அற்புதமான நடிகரை இழந்துவிட்டோம். அவர் என்னிடம் பேசிய அன்பான வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: