ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில்- கோவையில் நடந்தது என்ன?

நிர்மலா சீதராமன், ஜி.எஸ்.டி, கோவை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புக்காட்சி)
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கோவையில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார்.

அப்போது கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், மத்திய அமைச்சருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவையைச் சேர்ந்த ஏராளமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி., வருமானவரித்துறை உள்ளிட்ட வெவ்வேறு மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர்.

தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். அதில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் மற்றும் தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் சில விஷயங்களைப் பேசினார். இவர் கோவையில் உணவகச் சங்கிலியையும் நடத்தி வருகிறார்.

“நீங்கள் இனிப்பு ரகங்களுக்கு 5% ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். இன்புட் கொடுக்கிறீர்கள். சாப்பாட்டுக்கு 5% வைத்திருக்கிறீர்கள். ஆனால் இன்புட் கிடையாது. கார வகைகளுக்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் பிரட்டையும், பன்னையும் விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றுக்கும் 28% வரை ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். ஒரே பில்லில் ஒரே குடும்பத்துக்கு, விதவிதமாக ஜி.எஸ்.டி., போட்டுக் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அதுக்கு 18% ஜி.எஸ்.டி., இருக்கிறது. கஸ்டமர் ‘நீங்கள் கிரீமையும், ஜாமையும் கொடுங்கள். நானே உள்ளே வைத்துக்கொள்கிறேன்' என்கிறார். எங்களால் கடை நடத்த முடியவில்லை,” என்றார் சீனிவாசன்

மேலும், “ஒன்று எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி அதிகமாக்கிவிடுங்கள். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசனிடம் கேட்டால், ‘வடநாட்டில் அதிகம் இனிப்பு உண்கிறார்கள், அதனால் 5% ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறார்கள்’ என்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி என்றுதான் சாப்பிடுவார்கள். தயவு செய்து இதனை பரிசீலனை செய்யவும்,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிர்மலா சீதராமன், ஜி.எஸ்.டி, கோவை
படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்

குறுக்கிட்டு பதிலளித்த நிர்மலா சீதாராமன்

இதற்கு அப்போதே குறுக்கிட்டுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மாநில வாரியாக நாங்கள் வரி விதிப்பது இல்லை,” என்றார்.

அதற்கு “இந்தியா முழுதும் நீங்கள் வரியை ஏற்றினாலும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒரே மாதிரியாக வரி விதியுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரு குடும்பம் வந்து சாப்பிட்டால், பில் போடுவது கம்ப்யூட்டருக்கே கஷ்டமாக இருக்கிறது” என்றார் சீனிவாசன்.

வைரலான வீடியோ

நிர்மலா சீதாராமனுடன் சீனிவாசன் பேசிய வீடியோ, சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களுக்குள் ‘வைரல்’ ஆகப் பரவியது.

இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அப்போது அவரிடம், சீனிவாசன் எழுப்பிய கேள்விகள் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், “அவர் கேட்டது பற்றி, ஜி.எஸ்.டி., அதிகாரிகளை அனுப்பி, ஓட்டல்கள் சங்கத்தின் கோரிக்கையை கேட்கச் சொல்லியிருந்தேன். அவர் கேள்வி கேட்கும்போது, பன்னுக்கு ஜி.எஸ்.டி., இல்லை ஆனால் க்ரீமுக்கு இருக்கிறது, இதையெல்லாம் எங்கள் கம்ப்யூட்டரால் கணக்குப் பண்ண முடியவில்லை கம்ப்யூட்டரே திணறுது என்று ஜனரஞ்சகமாகப் பேசினார். தவறு ஒன்றுமில்லை. அவருடைய ஸ்டைலில் அவர் பேசினார்.''என்றார்

மேலும் அவர்,'' உண்மையில், அமைச்சர்களைக் கொண்ட குழ, எந்தெந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்று விரிவாக ஆய்வு செய்தபின்பே, பரிந்துரைத்துள்ளனர். அந்த குழுவில், பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதே ஓட்டல்கள் சங்கமும் இதற்காக ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் அதை ஆய்வு செய்கிறது. ஆனால் தொழிலில் நீண்ட காலமாக இருக்கும் அவர் ஜனரஞ்சகமாகப் பேசியது, ஜி.எஸ்.டி.,க்கு பரம விரோதமாக இருப்பவர்களுக்கு ஆதாயமாக இருக்கும்,” என்றார்.

“ ‘பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை’ கேள்வி கேட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள்’ என்பார்கள். நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஜி.எஸ்.டி.,யில் மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் முயற்சி செய்கிறார்கள்,” என்று விளக்கினார்.

நிர்மலா சீதராமன், ஜி.எஸ்.டி, கோவை
படக்குறிப்பு, ‘இனிப்பு ரகங்களிக்கு 5% ஜி.எஸ்.டி., ஆனால் கார வகைகளுக்கு 12% ஜி.எஸ்.டி., ஏன்?’ என்று உணவகத் துறையினர் கேள்வி எழுப்பினர்

ஸ்வீட்டுக்கு ஒரு விதமாகவும், காரத்துக்கு வேறுவிதமாகவும் இல்லாமல் ஒரே சீராக ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டுமென்று ஓட்டல்கள் சங்கம் வைத்துள்ள கோரிக்கை குறித்து பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவர்கள் மட்டுமில்ல, நாடு முழவதும் ஆயிரக்கணக்கான அமைப்புகள் இப்படிக் கோரிக்கை வைத்துள்ளன,” என்றார்.

“இதுபோல அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, எதற்காவது ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளதா?’’ என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

அதற்கு, “நிறைய பொருட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டிருப்பதாக கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஜி.எஸ்.டி., வருவதற்கு முன்பே, மருத்துவக் காப்பீடுக்கு பல மாநிலங்களில் தனித்தனியாக வரி விதிக்கப்பட்டு வந்தது.

இப்போது அது சர்ச்சையானதும், தனிநபர் காப்பீடுக்கு அல்லது குழு மருத்துவக் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டியை குறைப்பதா, முதியோருக்கு மட்டும் விட்டுக் கொடுக்கலாமா என்று பல்வேறு மாநில அமைச்சர்களும் பல வித கேள்விகளையும் கேட்டார்கள். கமிட்டி முடிவின்படியே, அதற்கு முடிவு எடுக்கப்படும்,” என்றார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதராமன், ஜி.எஸ்.டி, கோவை
படக்குறிப்பு, சீனிவாசன்

‘யதார்த்தமாகப் பேசினேன்’

இதற்கிடையில், சீனிவாசனின் பேச்சு, வைரலாகப் பரவியதால், அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, விளக்கம் அளித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. எந்த வித உள் நோக்கத்துடனும் நான் அந்தக் கேள்வியை எழுப்பவில்லை. ஓட்டல்கள் சங்கத்தின் கோரிக்கையை, யதார்த்தமாகப் பேசினேன். அவ்வளவுதான்.

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் அவரைச் சந்தித்து, இந்த கோரிக்கை குறித்த மனுவையும் கொடுத்தேன். இதே நிதியமைச்சர், ஆங்கிலத்தில் மட்டும் அல்லது இந்தியில் மட்டும் பேசுபவராக இருந்திருந்தால் நான் தமிழில் இவ்வளவு விரிவாகப் பேசியிருக்க முடியாது. தமிழில் இவ்வளவு எளிமையாகப் பேசவும், அணுகவும் கூடிய அறிவார்ந்த அமைச்சர் என்பதால்தான் அவரிடம் இந்தக் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினேன். நிச்சயமாக அந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)