வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

வள்ளலார் சர்வதேச மையம்
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது?

ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வள்ளலாரை முன்னிறுத்தி கருத்தியல் மோதல்

வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள்.

இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன.

சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வள்ளலார் யார்?

வள்ளலார் சர்வதேச மையம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 19ம் நூற்றாண்டின் தமிழ் சைவ ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாமல் அனைவருக்குமான பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை நம்பினார். அதேபோன்று, கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார்.

வெளியை வெறும் நிலப்பரப்பாக மட்டும் பார்க்காமல் ஞானத்தின் ஒரு பரந்த தொடர்ச்சியாக நம்பினார் வள்ளலார். அவரது கொள்கைகள் பக்தியின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுடன் முரண்படுவதை காணலாம்.

அவர் எழுதிய திருவருட்பா ஆறு பாகங்களாக உள்ளன. இவை திருமுறைகள் என்று அழைக்கப்படும். முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீக வாழ்க்கை குறித்து பேசிய வள்ளலார், தனது கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும், ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சடங்குகளையும் நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார்.

“கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக” என்று எழுதியிருந்தார். 1927ம் ஆண்டு வெளி வந்த குடியரசின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை தந்தைப் பெரியார் பிரசுரித்திருந்தார்.

“வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர்,

வேத ஆகமத்தின் விளைவு அறியீர்”

என்று ஆறாவது திருமுறையில் கூறியுள்ளார்.

வள்ளலார் சர்வதேச மையத்துக்கு ஏன் எதிர்ப்பு ?

1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 80 காணி நிலம் (106 ஏக்கர்) நிலத்தை மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அதில் அவர், சத்ய தர்ம சாலையை நிறுவினார். 1871-ம் ஆண்டு சத்ய ஞான சபையின் கட்டுமானம் தொடங்கி 1872-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக திறந்த வெளியாக இருக்கும் இடத்தில், புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தங்கள் தத்துவத்தை குலைக்கும் செயல் என்கிறார், வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவா.

“மக்கள் கொடுத்த 106 ஏக்கரின் நடுவே ஞான சபையை நடுவில் கட்டவில்லை வள்ளலார். உடம்பில் உள்ள தலையை குறிக்கும் வண்ணம் தென் திசை மூலையில் கட்டியிருந்தார். பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே வெளி என்பது எங்களுக்கு வெறும் திடல் அல்ல. பெருவெளி என்பது தத்துவம். அதை குலைக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

எப்படி கோயில்கள் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளனவோ அது போன்ற விதிகள் இங்கும் உள்ளன என்று சுட்டிக்காட்டும் சுப்ரமணிய சிவா, “தில்லை நடராஜர் கோயிலில் அதன் பழமையை குலைக்கும் வகையில் தீட்சிதர்கள் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதே இந்து சமய அறநிலையத்துறை எங்களது பெருவெளியை குலைக்கப் பார்க்கிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வள்ளலார் சர்வதேச மையம்

நிலத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் மக்கள்

வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள மக்களின் முன்னோர்கள் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை எதிர்க்கும் அவர்கள், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாடாக இருக்கிறது.

ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ‘வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்’ நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் சர்வதேச மையம்

‘அரசு வெளிப்படையாக இல்லை’

வள்ளலார் சர்வதேச மையம்

பட மூலாதாரம், Facebook

இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் 12 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்றார்கள், பிறகு 3.8 ஏக்கர் நிலம் எடுப்போம் என்கிறார்கள். வள்ளலாரின் கொள்கைகளை உலகுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால் அரசின் முயற்சி அவரது கொள்கைகளுக்கே மாற்றாக இருந்தால், முன்னுரிமை கொள்கைக்கு தான், பிறகு தான் சர்வதேச மையம்” என்கிறார்.

“சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் ஏதாவது கட்டடம் கட்ட முடியுமா? விவேகானந்தர் பாறையில் புதிதாக எதையும் கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் மணியரசன், இதுவும் மதத்தின் ஒரு பிரிவு, ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “வள்ளலார் சர்வதேச மையம் வள்ளலாரின் கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அடிப்படையில் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு என்ன கூறுகிறது?

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். வடலூரில் நேரில் இருந்து அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “பெருவெளி நிலமான 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையம் கட்டுவதற்கான பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குகின்றனர்” என்று பேசியிருந்தார்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் இரண்டு தடவை முறையாக நடத்தப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பு கூறுகிறது.

வள்ளலார் சர்வதேச மையம்

சர்வதேச மையத்தின் கட்டுமான விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன், சத்ய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அருட்பெரும் ஜோதியை எட்டுகால் வாயில் திறப்பின் போது மக்கள் காண்பதற்காக வள்ளலார் பெருவெளியை விட்டுச் சென்றார் என்றும் எனவே அந்த இடத்தில் சர்வதேச மையம் கட்டக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

தைப்பூசம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மக்கள் பெருவெளியில் கூடும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாலேயே அங்கு சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது. அறங்காவலர்கள் கொண்ட குழு அமைக்காமல் சர்வதேச மையம் அமைப்பது இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன் படி குற்றமாகும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச மையம் கட்டி முடிக்கப்பட்ட பின் அது சத்ய ஞான சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)