பள்ளிகளில் சாதி பாகுபாட்டை களைய சந்துரு குழுவின் 10 பரிந்துரைகள் - ஆதரவும் எதிர்ப்பும்

பள்ளிகளில் சாதி

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, பள்ளிகளில் சாதிய பாகுபாட்டை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துரு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதலை அடுத்து பள்ளி வளாகங்களில் சாதிய பாகுபாட்டை களைவது குறித்து ஆலோசிக்க தமிழக அரசு கமிட்டி அமைத்திருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் சாதிய பாகுபாடுகளை களைவதற்கான பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமான பத்து பரிந்துரைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சாதிப் பெயர்கள் நீக்கம்

“கள்ளர் மறுவாழ்வு” “ஆதி திராவிடர் நல” போன்ற சாதிய அடையாளம் கொண்ட சொற்களை பள்ளிப் பெயர்களிலிருந்து நீக்க வேண்டும். இந்தப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுமே “அரசுப் பள்ளி” என்றழைக்கப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து பள்ளி எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிட வேண்டும்.

பள்ளிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் சாதி பெயர்களை நீக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறைகளுக்கு கீழ் அல்லாமல் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வி துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

பள்ளிகளில் சாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், பள்ளி மாணவர்கள் இடையே கடந்த ஆண்டு சாதி மோதல் ஏற்பட்டது.

ஆசிரியர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளது?

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அவர்களின் பணியிடத்தை மாற்ற வேண்டும். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் போது, அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மை சாதி அல்லாதவரை நியமனம் செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் வருகை பதிவேட்டில் அவர்களின் சாதிப் பெயர்கள் குறிப்பிட்டிருக்கக் கூடாது. எந்த சூழலிலும் மாணவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதி பெயர்களை குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைக்கவோ, பேசவோ கூடாது.

பள்ளிகளில் என்ன மாற்றங்கள் தேவை ?

வகுப்பறைகளில் மாணவர்கள் ஆங்கில எழுத்து வரிசையில் அமர்த்தப்பட வேண்டும். மாற்று திறனாளி மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு விதிவிலக்காக முன்வரிசையில் இடம் அளிக்கலாம்.

மாணவர்களின் கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களை பொதுவாக வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்பும் அறிவிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவரை தனது அறைக்கு தனியாக அழைத்து கூற வேண்டும்.

இவற்றை மீறினால் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவரின் சாதி விவரம் கொண்ட ஆவணங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வு செய்யும் அதிகாரிகளின் பார்வைக்கு மட்டுமே இருக்க வேண்டும்.

பள்ளிகளில் சாதி

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் கைகளில் கயிறுகள், நெற்றியில் பொட்டு போன்ற குறியீடுகள் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சொல்லப்பட்டது என்ன?

சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகள், நெற்றியில் பொட்டு ஆகியவை அணியக் கூடாது. அவர்கள் பள்ளிக்கு வரும் சைக்கிள்களில் சாதி குறியீடுகள் இருக்கக் கூடாது. ஆ

றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் மாணவர்களுக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகுப்புகள் நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சங்கங்கள் அமைக்கவும், மாணவர் சங்கத் தேர்தல் நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிகளில் சாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வகுப்பறைகளில் ஆங்கில எழுத்து வரிசையில் மாணவர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கைப்பேசிக்கு தடை

மாநில அரசும், பள்ளிக்கல்வி துறையும் ஏற்கெனவே அறிவுறுத்தியது போல, கைப்பேசிகளை பள்ளி வளாகங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ போன்ற பிற பாடத்திட்டங்களை பயிலும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

மாணவர் புகார் பெட்டிகள்

பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். அவை மாணவர் மனசு உட்பட எந்த பெயரிலும் அழைக்கப்படலாம். அதன் சாவி பள்ளி நல அலுவலரிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

வாரத்துக்கு ஒரு முறை அதிலுள்ள புகார்களை பரிசீலிக்க வேண்டும். எந்த நேரத்திலும் மாணவரின் பெயர் வெளியே தெரியக் கூடாது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இட ஒதுக்கீடு

ஆதி திராவிடர் மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்வு செய்யும் வண்ணம், மேல் நிலை வகுப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.

மண்டல வாரியாக சமையலறைகள்

ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறைகள் இருப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சமையலறைக் கொண்டு அங்கிருந்து உணவை விநியோகம் செய்யும் வசதிகள் கொண்டிருக்க வேண்டும். மண்டல வாரியாக ஊழியர்களை நியமிக்கும் போது, சாதிவாரி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

பள்ளிகளில் சாதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறை இருப்பதற்கு பதிலாக மண்டல அளவில் சமையலறைகள் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சாதிய வன்முறைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள்

உரிய பரிசீலனைக்கு பிறகு, சில பகுதிகளை ‘சாதி வன்முறைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள்’ என வகைப்படுத்த அரசு முடிவு செய்யலாம். சிறப்பு உளவுத்துறை குழுவை அமைத்து, சாதி பாகுபாடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளை கண்டறியலாம். கல்வி காவிமயமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்கலாம்.

பாடத்திட்டங்களில் மாற்றம்

ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டம் சமூக நீதி பண்புகளை உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும்.

மாணவர்களின் பாடத்திட்டங்களில் சாதிய பாகுபாடுகள் தூண்டும் வகையில் இல்லாததை கண்காணிக்க சமூக நீதி குழு அமைக்கப்பட வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட அந்தக் குழு கூறும் பரிந்துரைகளை ஏற்று பாடப்புத்தகங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

'ஹிஜாப் அணியலாம், கயிறு கட்டக் கூடாதா?' - எச் ராஜா

நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாஜவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பேசிய அவர், “ஒரு பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர், ஆசிரியராக இருக்கக் கூடாது என்றால் அதை எப்படி செயல்படுத்த முடியும்? எப்படி பெரும்பான்மை சமூகத்தை ஒதுக்க முடியும்? இந்து மதத்தை குறி வைப்பது போல இந்த அறிக்கை இருக்கிறது. எனவே இந்த அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். என் கையில் சிவப்பு கயிறு இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

எச்.ராஜா

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

கயிறுகள், நெற்றியில் சாதி குறியீட்டு திலகங்கள் வைப்பதற்கான தடையை வரவேற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சாமுவேல் ராஜ், “ பள்ளி மாணவர்கள் சாதிக் கட்சி அடையாளங்களாக நெற்றியில் திலகம் இட்டுக் கொள்கிறார்கள் என்று எச்.ராஜாவுக்கு தெரியாதா? ஏன் அதைப் பற்றி பேசுவதில்லை? நெற்றியில் பொதுவாக வைக்கப்படும் பொட்டு சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அனைத்து இந்துகளும் அதே நிறத்தில் வைத்துக் கொள்ளட்டுமே. எச்.ராஜாவுக்கு இந்து மதத்தை விட சாதியின் மீதே அதிகப் பற்று இருப்பது போல் தெரிகிறது” என்றார்.

அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் அதை இப்போது பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சாமுவேல் ராஜ் தெரிவித்தார்.

மாணவர்கள் கயிறு கட்டினால் அறுப்பது யார்?

கயிறு கட்டுவதற்கான தடையை எதிர்த்த, தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, “மாணவர்கள் கட்டியிருக்கும் கயிறுகளை அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்குள் சென்று அறுக்கப் போகிறார்களா? எதிர்த்து நிற்கும் பருவத்தில் இருக்கும் மாணவர்களிடம் இப்படி செய்தால், பள்ளிக்கு வெளியில் வா பார்த்துக் கொள்கிறேன் என்ற மனநிலை தானே உருவாகும்” என்றார்.

“ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் தான் இது போன்ற மோதல்கள் ஏற்பட்டனவா? எங்கோ ஒரு இடத்தில் சத்துணவுக் கூட ஊழியருக்கு சாதி பாகுபாடு ஏற்பட்டால் ஏன் அனைத்து சத்துணவுக் கூடங்களையும் மூட வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)