உலகக்கோப்பை: 1992 கனவுடன் இறங்கி முதல் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் செய்த தவறுகள்

உலகக்கோப்பை கிரிக்கெட்: 1992 கனவுடன் முதல் போட்டியில் களமிறங்கியது பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வரிசை பேட்டர்களான பக்கர் ஜமான்(12), இமாம் உல் ஹக்(15), பாபர் ஆசம்(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் நடுவரிசை பேட்டர்களான ரிஸ்வான்(68), சஹீல்(68) இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்தனர். கீழ்வரிசையில் முகமது நவாஸ்(39), சதாப்கான்(32) குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நெதர்லாந்து அணி 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. மேக்ஸ், ஆக்கர்மேன் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தாலும், 2வது விக்கெட்டுக்கு விக்ரம், பாஸ் டி லீட் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

பாகிஸ்தான் செய்த தவறுகள் என்ன?

உலகக்கோப்பை: 1992 கனவுடன் இறங்கி முதல் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் செய்த தவறுகள்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம் ஆகியோர் புதிய பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு, பவர்ப்ளே ஓவருக்குள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ரன்ரேட் உயர்வுக்கு மிகப்பெரிய பிரேக் போட்டது. இதில் ஒரு பேட்டர் நிலைத்து நின்றிருந்தாலும் பாகிஸ்தான் ஸ்கோர் 350 ரன்களை தொட்டிருக்கும்.

பாகிஸ்தானில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பாட்னர்ஷிப் அமைத்த அளவுக்கு கடைசி வரிசை பேட்டர்கள் நிலைக்கவில்லை. ஒருவேளை நிலைத்து பேட் செய்திருந்தால் ஸ்கோர் 300 ரன்களை எட்டியிருக்கும், வெற்றிக்குப் பின் நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும்.

அதேபோல பந்துவீச்சில் நெதர்லாந்தின் 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். பந்துவீச்சு முறையில் எந்த நுணுக்கத்தையும் பயன்படுத்தாமல் அஃப்ரிடி, ஹேரிஸ் ராஃப், ஹசன் அலி வழக்கமான முறையில் வீசினர்.

யார்கராக சில பந்துகளை வீசவோ அல்லது, ஸ்விங் செய்யவோ, அல்லது லைன் லென்த்தை மாற்றி வீசவோ தவறினர். அவ்வாறு சிந்தித்திருந்தால், 3வது விக்கெட் ஜோடியை விரைவாகவே பிரித்திருக்கலாம்.

விக்ரம், பாஸ் டி லீட் விக்கெட் வீழ்த்திய பின்பு ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. அதுவரை ஆட்டம் சுவற்றில் நின்ற பூனையாகவே இருந்தது. ஷதாப் கான், முகமது நவாஸ் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசினாலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுக்கும் விக்கெட் டேக்கராக இந்தப் போட்டியில் ஒளிரவில்லை.

நெதர்லாந்து அணியின் ஆமை வேக ஆட்டம்

ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் பாகிஸ்தான் கையில் இல்லை. விக்ரம் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.

பாஸ் டி லீட் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் பங்களிப்பு மட்டுமே பெரிதாக இருந்தது. கீழ்வரிசை பேட்டடர்கள் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை.

ரன்ரேட்டை வேகப்படுத்தாதது, ஆமை வேக ஆட்டம், விக்கெட்டுகளுக்கு இடையே ரன்களை சேர்க்காதது நெதர்லாந்து தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹேரிஸ் ராப் 3 விக்கெட்டுகளையும், ஹசன்அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பு 288. வெற்றி பெறுவதற்கான ரன் சராசரி 322.

உலகக்கோப்பை கிரிக்கெட்: 1992 கனவுடன் முதல் போட்டியில் களமிறங்கியது பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத் நகரில் நடந்த இந்தப் போட்டியில் 300 ரன்கள் வரை குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் போட்டியின் தொடக்கத்தில் குறிப்பிட்டார். முதல் இன்னிங்ஸ் இறுதியில் பாகிஸ்தான் 286 ரன்களை குவித்தது.

கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைப் போல மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதோடு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையான ரவுண்ட் ராபின் முறையில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடப்பதும் அதற்கு முக்கியமான காரணம்.

பெருமளவு காலியாக உள்ள இருக்கைகள்

உலகக் கோப்பை தொடக்கப் போட்டி நடந்த ஆமதாபாத் மைதானத்தில் இருக்கைகள் காலியாக இருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்தது.

ஹைதராபாத் மைதானத்திலும் பாகிஸ்தான் - நெதர்லாந்து போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன.

ஏற்கெனவே ஹைதராபாத் மைதானம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் குறைகூறியிருந்தனர்.

1992-இல் என்ன நடந்தது?

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பே இல்லாத அணியாகக் கருதப்பட்டது.

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது.

அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது.

அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.

முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

நெதர்லாந்து அணியில் 3 இந்திய வம்சாவளி வீரர்கள்

நெதர்லாந்து அணியில் 3 இந்திய வம்சாவளி வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் நடந்துவரும் உலகக் கோப்பைப் போட்டியின் பாகிஸ்தானுக்கு எதிரான லீக்ஆட்டத்தில் நெதர்லாந்து அணியில் 3 பூர்வீக இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தேஜா நிஜாமனாரூ, ஆர்யன் தத், விக்ரம்ஜித் சிங் ஆகிய 3 வீரர்களுமே இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இதில் தேஜா நிஜாமனாரு, ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆர்யன் தத் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரையும், விக்ரம்ஜித் சிங், ஜலந்தர் அருகே சீமா குர்து பகுதியைச் சேர்ந்தவர்.

தந்தையும், மகனும் ஒரே அணிக்கு எதிராக ஆடிய பெருமை

பாகிஸ்தானுக்கு எதிராக தந்தையும், மகனும் ஆடிய பெருமை இந்த உலகக் கோப்பையில் அரங்கேறியுள்ளது. நெதர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாஸ் டி லீட் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளார்.

இவரின் தந்தை டிம் டி லீட், கடந்த 1996 உலகக் கோப்பைப் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளார். தந்தையும், மகனும் ஒரே அணிக்கு உலகக் கோப்பையில் விளையாடிய பெருமை கிடைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)