You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுவான் வாங்: இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை வந்தது சீன கப்பல்
சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து கடந்த சில நாட்களாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு
இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது. எனவே இந்த கப்பலின் வருகையை தடுக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரியது.
கடந்த 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பின் யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தது.
இருப்பினும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவை பகைத்து கொள்ள கூடாது என அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை கடந்த சனிக்கிழமையன்று அனுமதி வழங்கியிருக்கிறது.
இருப்பினும் இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் நேற்று இலங்கையை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்