இலங்கை ஜனாதிபதி மாளிகையில் செல்ஃபி, ஜிம், நீச்சல் - உற்சாகத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த ஜனாதிபதி மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நிரம்பியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள அறைகளில் உள்ள வசதிகளை பார்வையிட்டு வருகின்றனர். சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில வகை வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர்.

சில போராட்டக்குழுவினர் ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர்.

சிலர் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததை அறிந்த போராட்டக்காரர்கள் அதனுள்ளே சென்று பார்வையிட்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு பக்கவாட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தை பிரத்யேகமாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.

அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் அதனுள் ஆர்வ மிகுதியில் குதித்து நீச்சலடித்துக் குளித்தனர்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி ஏராளமான கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர். சிலர் அங்கிருந்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா தலம் போல போராட்டக்காரர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: