கொழும்பு துறைமுகம் அருகே கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் வந்தது

பட மூலாதாரம், AP
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவிய எம்.வீ.எக்ஸ்பிரிஸ் பர்ல் (MV X-PRESS PEARL) கப்பலின் தீ பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பரவியிருந்தது.
இந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியன ஈடுபட்டிருந்தன. எனினும், இந்த கப்பலில் நேற்று முன்தினம் (25) பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.
அதனைத் தொடர்ந்து, தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்திருந்த நிலையில், கப்பலில் இருந்த பல கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன.

பட மூலாதாரம், SLAF
186 மீற்றர் நீளமும், 34 மீற்றர் அகலும் கொண்ட இந்த கப்பலின் அனைத்து பகுதிகளிலும் இந்த தீ பரவியிருந்தது.
குறித்த கப்பலில் பெருமளவு இரசாயண பதார்த்தங்கள் இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கப்பலில் இருந்த இரசாயன பதார்த்தத்தின் கசிவு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், இந்தியா கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு கடையினர் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.
கப்பலில் பரவிய தீ இந்தியாவின் உதவியுடன் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம், தமது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரை பகுதிகளில் கப்பலிலிருந்து கசிந்த இரசாயண பதார்த்தங்கள் கரையொதுங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் நைட்ரஜன் எசிட், அழகுசாதண பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளமை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
குறித்த இரசாணய பதார்த்தங்கள் உரிய வகையில் களஞ்சியப்படுத்தப்படாமையே, இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிய வருகின்றது.
இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் ஹசிரா மற்றும் கட்டாரின் ஹமாட் துறைமுகங்களுக்குள் செல்ல முயற்சித்த போதிலும், அந்த நாட்டுகள் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தபின்னணியிலேயே, குறித்த கப்பல் இலங்கை நோக்கி பயணித்துள்ள சந்தர்ப்பத்தில், இந்த தீ பரவியுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை, கடலில் இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளனவா என்பது தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடல் ஆய்வு நிறுவனமான நாரா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாரா நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமாக கடல் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்தே நாடு முழுவதும் கடலுணவுகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதனால், அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சர், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கப்பல் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்திலிருந்து குறித்த கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கடலில் கலந்திருக்கும் இரசாயண பதார்த்தங்கள் தொடர்பிலும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பிலும் நாரா நிறுவனம் ஆய்வுகளை தொடர்ந்தும் நடத்தி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடல் பகுதிகளில் கலந்துள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் சமுத்திர சுற்றாடல் ஆய்வு அதிகார சபை, நாரா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன.
எவ்வாறாயினும், குறித்த கப்பல் முழுவதும் தற்போது தீ பரவியுள்ள நிலையிலேயே, தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
மேலும், குறித்த கப்பலில் தீ பரவியமை குறித்து, கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- இயக்குநருடைய நடிகராக இருப்பதுதான் தர்மம்"- நடிகர் பசுபதி
- வைரமுத்துவுக்கு ஒஎன்வி விருது: எதிர்க்கும் நடிகை பார்வதி - என்ன காரணம்?
- சீனாவில் வீகர் மக்கள் மீது பரிசோதிக்கப்பட்ட உணர்ச்சி கண்டறியும் மென்பொருள்
- அதார் பூனாவாலா: சீரம் தடுப்பூசி சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி?
- விவசாயிகள் போராட்டம்: 6 மாத போராட்டத்தை நினைவூட்டும் காட்சிகள்
- ஆன்லைன் வகுப்பு புகார்கள்: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 உத்தரவுகள்
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் தொட்டு விட்டதா?
- கொரோனா தடுப்பூசி: ஆண்மை குறைவு, மாதவிடாய், மதுப்பழக்கம் - புரளிகளும் உண்மைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












