ஆன்லைன் வகுப்பு புகார்கள்: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 உத்தரவுகள்

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாட்டில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆன்லைன் வகுப்புகளின்போது நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுத்துறையினருக்கு ஐந்து உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆன்லைன் வகுப்பில் ஒரு ஆசிரியர் விரும்பத்தகாத வகையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையாகியது. அந்த ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை முறைப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பட மூலாதாரம், TNDIPR
அப்போது சென்னை பள்ளி ஆன்லைன் வகுப்பு சம்பவம் தொடர்பான புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சில முடிவுகளையும் உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்தார். அதன் விவரம்:
- இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினரால் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த பதிவை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
- இணைய வழி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
- அக்குழு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணைய வழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
- இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி உதவி எண் உருவாக்க வேண்டும்.
- இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத்தடுப்பு காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- கருப்புப்பூஞ்சை: தமிழ்நாட்டில் எதிர்ப்பு மருந்துக்கு தட்டுப்பாடு, என்ன செய்கிறது அரசு?
- ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டது ஏன்? கட்சிக்குள் மோதலா?
- கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?
- இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
- மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கொரோனா தொடங்கியது முதல் 8,800 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
- கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து தப்ப நடுவானில் திருமணம் செய்த மதுரை தம்பதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












