You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மூலம் அணிதிரளும் போராட்டம்
இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமனக் கோரி கொழும்பு நகரில் சில பொதுமக்கள் தினம்தோறும்கூடி பதாகைகளைப் பிடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சதுக்கத்தில் தினமும் மாலையில் 4.30 மணியிலிருந்து ஆறு மணிவரை ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 பேர் வரை தினமும் இந்தப் போராட்டத்தில் நிற்கின்றனர்.
"கடந்த செவ்வாய்க்கிழமையன்று ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர்கள் நடத்திய மிகப் பெரிய ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். அதற்குப் பிறகு பொதுமக்களில் சிலர்கூடி, ஜனநாயக வழியில், எந்தக் கட்சிச் சார்பும் இன்றி தொடர் போராட்டத்தை நடத்துவது என முடிவுசெய்தோம். முதல் நாள் சுமார் 300 பேர் வரை இந்தச் சதுக்கத்தில் கூடினோம். பிறகு தினமும் 50-60 பேர் கூடுகிறார்கள்," என்கிறார் இந்தப் போராட்டத்தில் முதல் நாளிலிருந்து கலந்துகொண்டுவரும் ட்ரேசி ஹொல்சிங்கெர்.
சிலர் கைக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் வந்து கலந்துகொள்கின்றனர். தவிர ஆண்களைவிட பெரும் எண்ணிக்கையில் பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் மட்டுமே அழைப்புவிடுக்கின்றனர். அதைப் பார்த்தே பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
"இந்தப் போராட்டம் யாருக்கும் ஆதரவானது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை மீட்பதற்காக மட்டுமே நாங்களை இதனை நடத்துகிறோம்." என்கிறார் இதில் பங்கேற்ற சுபா விஜேஸ்ரீவர்தனே.
இலங்கையில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளராக இருந்த லசந்த விக்ரமசிங்க கொல்லப்பட்டபோது, இதேபோல பதாகைகளை ஏந்தியும் மெழுகுவர்த்திகளை ஏந்தியும் நடத்திய போராட்டம் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது என்பதைச் சுட்டிக்காட்டும் இவர்கள் அதே போன்ற ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதே தங்களது விருப்பம் என்கிறார்கள் இவர்கள்.
இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்படும்வரை இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக தெரிவிக்கிறார்கள் இவர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: