You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதிக்கு இலங்கை வடக்கு மாகாண சபையில் அஞ்சலி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கையின் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 129வது அமர்வு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை ஆரம்பமான நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவிப்பதுடன் 2 நிமிட மெளன அஞ்சலியினை எழுந்துநின்று செலுத்துமாறு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.இதனையடுத்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை ஆற்றினர்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி உரையாற்றுகையில், "தமிழுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் தமிழ்,கலை,கலாசாரம் போன்ற சகல துறைகளிலும் முன்மாதிரியாக இருந்து பலவித சேவைகளை செய்த மாபெரும் மனிதர் காலமாகிவிட்டார். அவருடைய வாழ்கை எமக்கு பல விதங்களிலும் ஒரு போதனையாக அமைந்துள்ளது.அவரது அரசியல் வாழ்கையில் வட மாகாண தமிழ் மக்களுக்கு ஒருசில ஏக்கங்கள் இருந்தாலும் அவருடைய முழுமையான வாழ்கையை எடுத்து பார்க்கும் போது நல்ல குணாம்சங்களை பார்க்கக்கூடியதாக உள்ளது," என்றார்.
வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அஞ்சலி உரையாற்றுகையில்,"தமிழ் நாடு இன்றைக்கு பொருளாதார வளர்சியில் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது முன்னிலையில் உள்ளது. இதற்கு கருணாநிதியின் பங்களிப்பு மிக முக்கியமானது. திருவள்ளுவரின் பெருமையை உலகறிய செய்யும் முகமாக கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலையை வைத்து தமிழனின் புகளை உலகுக்கு எடுத்து இயம்பியத்தில் முன்னின்றவர். பல்லாயிரக்கணக்கான தமிழ் நாட்டு மக்களின் கண்ணீரில் சஞ்சலமாகி அண்ணாவுக்கு அருகாமையில் தற்போது நீங்க துயிலில் இருக்கின்றார்," என்றார்.வடக்கு மாகாணசபையின் அனுதாப செய்தி அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் ஊடாக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :