நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”

பட மூலாதாரம், Sunrisers/ FB
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அத்தோடு, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல தயாராகி வந்த நடராஜன், தான் கடந்து வந்த பாதைகளையும், ஐபிஎல் தந்த நினைவுகளையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
"மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை நெசவுத்தொழிலாளி, அம்மா சாலையோரத்தில் உணவுக் கடை நடத்திவருகிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டென்னிஸ் பந்தில் விளையாட ஆரம்பித்தேன். இருபது வயதில் தான் முறையாக கிரிக்கெட் பயிற்சியை துவங்கினேன். அப்போது தான் அண்ணன் ஜெயபிரகாஷ் மூலம் சென்னையில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிக்கு பிறகு அடுத்தடுத்து விளையாட வாய்ப்புகள் வந்தன. அப்போது பள்ளி படிப்புக்கு தேவையான புத்தகங்கள் கூட வாங்க முடியாத நிலையில் இருந்தோம். கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து தான் கிரிக்கெட் போட்டிக்கு செல்வேன். இப்படித்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது" என தனது கிரிக்கெட் பயணத்தின் துவக்க காலங்களை வலிகளோடு பகிர்ந்து கொண்டார் நடராஜன்.
2014ம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் விளையாட இவருக்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் போட்டியிலேயே பந்துவீச்சு முறையில் ஆட்சேபம் எழுந்து சர்ச்சையானது மிகுந்த மனவேதனையை தந்ததாக கூறுகிறார் இவர்.
"ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே அப்போது எனது லட்சியமாக இருந்தது. அதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால் எனது பந்துவீச்சு முறையில் சர்ச்சை வந்ததால் அடுத்த ஒரு வருடத்திற்கு என்னால் கிர்க்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு எனது பந்து வீச்சை சிறப்பாக்கினேன். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். அதில் தான் எனது முழுத்திறனும் வெளிவந்தது. 2017ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி என்னை தேர்வு செய்ததது. அடுத்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றபோதும், கடந்த 2 ஆண்டுகளாக களத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. என்னால் முடிந்த எனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினேன்" என தெரிவிக்கிறார் நடராஜன்.

பட மூலாதாரம், Sunrisers/ FB
29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தோனி மற்றும் ஏ பி டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை அவுட்டாக்கியதால் சர்வதேச அளவிலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
"சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரருமான முரளிதரன் பந்து வீச்சின் பல நுணுக்கங்களை எங்களுக்கு கற்றுத்தந்தார். கிரிக்கெட் குறித்து அதிக நேரம் நாங்கள் பேசிக்கொள்வோம். ஒவ்வொரு முறை விக்கெட் எடுத்ததும் சக வீரர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுவார்கள். நட்சத்திர பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியபோதும் அதுவே நடந்தது. குறிப்பாக, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏபிடிவில்லர்சை யார்க்கர் பந்தில் அவுட் ஆக்கியதற்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. சேலத்திலிருந்து நண்பர்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். விக்கெட் எடுத்ததில் ஒருபுறம் சந்தோசம் இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுவதற்கான பயிற்சியில் மட்டுமே எனது கவனம் இருக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மறக்க முடியாத போட்டி என்றால் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தை சொல்வேன். அதில் தான் எனது யார்க்கர் பந்து வீச்சுக்கான பாராட்டுக்கள் கிடக்கத் துவங்கியது" என ஐபிஎல் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுவரும் இவருக்கு, தனது குடும்பத்திலிருந்தும் ஓர் மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதை பூரிப்புடன் பகிர்ந்து கொள்கிறார் இவர்.
"பெங்களூரு அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற அதேநாளில் தான், 'எனக்கு மகள் பிறந்திருக்கிறாள்' என்ற மகிழ்ச்சியான செய்தியும் வந்தது. மிகவும் சந்தோஷமான தருணம் அது. எனது குழந்தையை நேரில் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்" என புன்னகையுடன் கூறுகிறார் நடராஜன்.
நவம்பர் 27ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் டி20க்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் நடராசன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ திங்கட்கிழமை அறிவித்தது. இதனால், இரட்டிப்பு மகிழ்ச்சியில், தான் இருப்பதாக தெரிவிக்கிறார் இவர்.
"இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. அதை அடைவதற்காகத் தான் முயற்சி செய்து வந்தேன். என்றாவது ஒருநாள் இந்திய அணியில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக அந்த வாய்ப்பு கிடைக்கும் என சற்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். என்னைப் போன்று கிராமத்திலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கடுமையான பயிற்சி தான் எனக்கு இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்கிறார் தங்கராசு நடராஜன்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பெற்றதற்கு மூத்த கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Sunrisers/ FB
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, 'கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!' என கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! நடராஜனுடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- பிகார் தேர்தல்: நிதிஷ் குமாரின் தனித்துவத்துக்கு முடிவு கட்டிய முடிவுகள்
- "இனிமேல் ஹீரோ தான். அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் கிடையாது": ஆர்.ஜே. பாலாஜி பேட்டி
- பிஹார் தேர்தல்: தேஜஸ்வி, நிதிஷ் குமார், பாஜக, காங்கிரஸ் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகள்
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
- லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












