அதிகம் மீன் சாப்பிட்டால் மனஅழுத்த நோயைத் தடுக்கலாம்

பட மூலாதாரம், Science Photo Library
அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
ஒருவர் உண்ணும் உணவுக்கும் அவரது மனநிலைக்கும் இடையில் உறவு இருப்பதாகக் கூரும் வேறு ஆய்வுகளின் முடிவுகளை இந்த ஆய்வின் முடிவுகள் மேலும் உறுதிப்படுத்துவதாக மைண்ட் என்கிற மனநலம் தொடர்பான தொண்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மீன் உணவுக்கும் மனிதர்களின் மன அழுத்த நோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கும் சீன ஆய்வாளர் ஒருவர், இவற்றின் முடிவுகள் கலவையாகவே இருப்பதாக கூறியிருக்கிறார். Journal of Epidemiology and Community Health என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளை கூர்ந்து ஆராய்ந்ததில், ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மட்டுமே ஏராளமான மீன் உணவு சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து தெரியவந்திருப்பதாகவும், உலகின் மற்ற இடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இது குறித்து எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், VIKTOR PROKHOROV
இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரியது என்பதால் இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரும் நோக்கில் 2001 ஆம் ஆண்டுமுதல் இது தொடர்பாக செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஆய்வுகளையும், அவற்றின் தரவுகளையும், முடிவுகளையும் ஆய்வாளர்கள் ஒப்பீடு செய்துபார்த்தனர்.
அதன் முடிவில் அதிகமாக மீன் உண்பதற்கும், மனிதர்களின் மன அழுத்த நோய்க்கும் இடையில் கணிசமானத் தொடர்பு இருப்பதையும், அது ஆண் மற்றும் பெண் என இரு தரப்பாருக்கும் பொருந்துவதாகவும் கண்டறிந்தனர்.
எதனால் இது நடக்கிறது என்பதற்கான தெளிவான முடிவுக்கு ஆய்வாளர்கள் வரமுடியாவிட்டாலும், மன ஆரோக்கியத்துக்கு மீன் நல்லது என்பதை தங்கள் ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கிய உணவாக மீன்
மூளையில் இருக்கும் சமிக்ஞைகளுக்கான இரண்டு முக்கிய வேதிமங்களான டோபோமைன் மற்றும் செரொடோனின் ஆகியவை மனிதர்களின் மன அழுத்த நோயோடு தொடர்புடையவை. இந்த இரண்டு மனித மூளை வேதிமங்களின் செயல்களை கட்டுப்படுத்துவதில் மீன்களில் இருக்கும் ஒமெகா 3 என்கிற கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுவதால் அதிகமாக மீன் உணவு சாப்பிடுவது மன அழுத்த நோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.
இன்னொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. பொதுவாக மீன்களை அதிகம் சாப்பிடும் வழக்கமுள்ளவர்கள் தமது உணவை ஆரோக்கியமானதாக, எல்லா சத்துக்களும் அடங்கியதாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களின் ஆரோக்கியமான உணவு அவர்களின் மன நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவக்கூடும் என்றும் ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது.
“மன அழுத்த நோயை தடுப்பதற்கான முதல்கட்டத்தில் அதிகமான மீன் உணவு உட்கொள்வது நல்ல பலன் தரும்”, என்கிறார் கிங்டாவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாங் பஃபெங் ஜாங்.

பட மூலாதாரம், BBC World Service
அதேசமயம், இந்த நன்மையானது சாப்பிடும் மீனைப் பொறுத்து மாறுபடுகிறதா என்பது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
உணவுக்கும் மன நிலைக்கும் இடையிலான தொடர்பு குறித்து தாங்கள் ஒரு கையேட்டை வெளியிட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் மைண்ட் தொண்டு அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ரேச்சல் பாய்ட், மீன்களில் இருக்கும் நல்ல கொழுப்புகளை உண்பது தமது பரிந்துரைகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
அதே சமயம், மன அழுத்த நோய் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதால், கூடுதலான மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுத்துவிடலாம் என்று மிகவும் எளிமைப்படுத்திவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அதேசமயம், உணவில் மீன்களின் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை சேர்த்துக்கொள்வது என்கிற மிக எளிய, சிறிய, நடைமுறை சாத்தியமான பழக்கத்தின் மூலம் மனிதர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மீன்களை சாப்பிட விரும்பாத மரக்கறி உணவாளர்கள், மீன்களில் இருக்கும் நல்லவிதமான கொழுப்பு அமிலத்தின் பலன்களை அடையவேண்டுமானால், ஏராளமான விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.












