மாயாவதி மீது தரக்குறைவான விமர்சனம்: பா.ஜ.க. தலைவர் பதவி நீக்கம்

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை தரக் குறைவாக விமர்சித்த அம்மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயா சங்கர் சிங், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மாயாவதிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு தீவிரமாக பிரச்சாரம் நடந்துவருகிறது.

இந்த நிலையில், மாயாவதி தொகுதிகளை பணம் கொடுப்பவர்களுக்கு விற்பனை செய்துவருவதாக தயா சங்கர் சிங் குற்றம்சாட்டினார்.

மேலும் மாயாவதியை பாலியல் தொழிலாளர்களுடனும் ஒப்பிட்டுப் பேசினார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பா.ஜ.கவை விமர்சித்தன.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தயா சங்கர் சிங்கின் கருத்துக்கு மன்னிப்புக் கோரினார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவகாரம் பூதாகரமானதையடுத்து, தயா சங்கர் சிங்கும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தபோதும், அவரை கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty

இன்று இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தயா சங்கர் சிங்கை கட்சியை விட்டே நீக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பாக நடந்த நிகழ்வுகள் குறித்து மாயாவதி கண்டித்து வருவதாலோ என்னவோ, உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.கவின் துணைத் தலைவர் தயா சங்கர் சிங், அவரை தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடப்பதாகவும் தனது அரசியல் வாழ்விலும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்திருப்பதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் தனது உள்ளம் கசிந்து உருகுவதாகவும் பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.