ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 'பாசிட்டிவ்' திருநங்கை

பட மூலாதாரம், Noori Saleem
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"எல்லோரும் படித்து பட்டம் வாங்குவார்கள். ஆனால் எயிட்ஸ் என நான்கெழுத்து பட்டம் வாங்கிய போது வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. ஆனால், துணிந்து நின்றேன். இன்று என்னால் பல பேர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்" கண்களில் உறுதியோடு கூறுகிறார் டாக்டர் நூரி சலீம்.
இந்தியாவில் முதன்முதலாக ஹெச்.ஐ.வி தொற்று பாதித்த நபரை கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவர் கண்டறிந்த மூன்றாவது ஹெச்.ஐ.வி தொற்று பாதித்த நபர்தான் திருநங்கை நூரி சலீம். 64 வயதாகும் நூரி சலீம் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தான் நடத்தி வரும் இல்லத்தில் தங்க வைத்துப் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார்.
நூரி சலீம் ராமநாதபுரத்தில் பிறந்தவர். 4 வயதில் தாய், நோயால் இறக்க 13 வயதில் தன்னுடைய தந்தையையும் இழந்த நூரிக்கு பாசத்திற்கு பதிலாக வெறுப்பும் துரோகமும் தான் கிடைத்தன.
பிறப்பில் ஆணாக பிறந்த நூரி பருவ வயதில் தன் இயல்பில் மாற்றத்தை உணரத் தொடங்கினார். ஆனால், சமூகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தையை இழந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பம் முடிவு செய்த போது, தன்னால் ஒரு பெண் வாழ்வு கெட்டுவிடக்கூடாது என்று 2 செட் துணி கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் மும்பை சென்றுவிட்டார்.
அங்கு 18 வயதில் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் நூரி.
"பருவ வயதில் நான் கமர்ஷியல் (பாலியல்) தொழிலில் ஈடுபடத் தொடங்கிய போது நாள் ஒன்றுக்கு 10 பேர் கூட வருவார்கள். ஆனால், திருநங்கையாக அறியப்பட்ட எனக்கு அப்போது இதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் எனக்கு விடியல் வரும் என்று நம்பினேன் " என கூறினார் நூரி சலீம்.

பட மூலாதாரம், Noori Saleem
1987 ஆம் வருடம் நூரி சலீமுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. தனக்கு தொற்று ஏற்பட்டதும் வாழ்வின் விளிம்புக்கே சென்று விட்டார் நூரி. இனி எதற்காக உயிர் வாழ வேண்டும் என்று தூக்கமில்லா இரவுகளை கண்ணீரோடு கரைய இனி வாழ்வே சூன்யம் தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டிருந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்களும் நூரி இனி 2 வருடங்கள் தான் உயிரோடு இருப்பார் என இவரின் உயிருக்கு கெடு விதித்து விட்டார்கள். அது இன்னும் தாங்க முடியாத வலியை இவருக்கு கொடுத்தது.
"34 வயதில் எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னதும் நான் நிலைகுலைந்து போனேன். இன்னும் 2 வருடங்களுக்கு மேல் நீ உயிர் வாழ மாட்டாய் என சொன்னதும், என் மனதிற்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டது. மருத்துவர்கள் என்ன கடவுளா? வாழ்வா சாவா என ஒரு கை பார்த்து விடுவாம் என்று முடிவு செய்தேன். எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் என் சக திருநங்கை தோழிகளே என்னை பார்த்து சபித்தார்கள், கேவலமாக திட்டினார்கள், இன்னும் சொல்லப்போனால் மலத்தைக் கொண்டு என் மீது வீசினார்கள். அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். என்னை புறக்கணிப்பவர்கள் நிச்சயம் என் முன்னால் உதவிக்கு நிற்பார்கள். அந்த நாள் வரும் என எனக்குள் வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டேன் " என சொல்லும் போது இன்றும் அவர் கண்களில் அசைக்க முடியாத உறுதி தெரிந்தது.
ஹெச்ஐவி தொற்று ஏற்பட்ட பிறகு வீட்டிற்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் பாலியில் தொழிலில் இருந்தும் முற்றிலுமாக விலகினார் நூரி. தன்னால் இந்த நோய் வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது என உறுதியாக இருந்தார். அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி தொற்று கவுன்சிலிங் தொடர்பாக சென்றிருந்த போது, டாக்டர் உஷா ராகவனின் அறிமுகம் கிடைத்தது. அவரின் வழிகாட்டுதலின் படி, பல்வேறு சமூக வேலைகளை செய்யத் தொடங்கினார். பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டே ஹெச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் முன்னெடுத்தார் நூரி.

பட மூலாதாரம், Noori Saleem
"நான் பல இடங்களில் ஹெச்ஐவி தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். 'ஹெச்.ஐ.வி தொற்று வந்தால் பயப்படாதீர்கள். அது பற்றி மனம் திறந்து உங்கள் துணையுடன் பேசுங்கள். நல்ல மருத்துவரை அணுகுங்கள். இப்போது இருக்கும் சிறந்த மருத்துவத்தின் உதவியால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்' என பல மேடைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். திருநங்கை ஒருவர் ஹெச்.ஐ.வி தொற்று பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு முதலில் தயக்கம் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்துக் கொண்டார்கள். இதுவரை 24 நாடுகளுக்கு மேல் பயணித்து இருக்கிறேன். 20க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான சர்வதேச கருத்தரங்களில் பங்கேற்று பேசி இருக்கிறேன். செல்லும் இடமெல்லாம் என்னை முன்னிறுத்தியே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்" என பெருமையுடன் கூறினார் நூரி.
அதேபோல், நூரி SIP என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இற்த தொண்டு நிறுவனத்தின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் என கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக தங்கும் இடம் கொடுத்து உணவும் கொடுத்து அவர்கள் கல்வி கற்க வசதியும் ஏற்படுத்தி கொடுக்கிறார் நூரி. இந்த தொண்டு நிறுவனத்திற்கு SIP என்ற பெயர் வைத்ததற்குப் பின்னால் உள்ள ஒரு சோக நிகழ்வை சுட்டிக்காட்டுகிறார் அவர்.
"முதன்முதலாக ஒரு பொது நல அமைப்பில் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டேன். அந்த அமைப்பின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பொருட்களை வழங்குவதற்காக பல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வேன். அப்போது செல்வி, இந்திரா, பழனி என என்னைப் போன்று ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளை சந்தித்தேன். அன்பின் ஆழம் எவ்வளவு இருக்கும் என அவர்களின் நட்பு என்னை உணர வைத்தது. ஆனால் நான் நேசிக்கும் பலரும் என் வாழ்வில் அதிக தூரம் என்னோடு பயணித்ததில்லை. ஹெச்.ஐ.வி தாக்கம் அதிகரித்து செல்வி, இந்திரா, பழனி மூவரும் இறந்து போக, எங்கள் நட்பின் அடையாளமாய் நான் தொடங்கிய தொண்டு நிறுவனத்திற்கு என் நண்பர்களின் முதல் எழுத்தான SIP என்பதை வைத்தேன்," என கூறினார் நூரி.
2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். ஒரு நாள் நள்ளிரவில் இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாள் ஆன குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு பக்கத்தில் ஒரு கடிதம் இருந்திருக்கிறது. அதில் பெற்றவர்களை ஹெச்.ஐ.விக்கு பலி கொடுத்த குழந்தை என்று எழுதி இருக்கவே, அந்த குழந்தையை பரிசோதித்ததில் அந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது.

பட மூலாதாரம், Noori Saleem
சுற்றிலும் எறுப்புகள் , ஈக்கள் மொய்த்த நிலையில் இருந்த குழந்தையை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்க துவங்கினார் நூரி. இப்படித்தான் முதல் குழந்தை இங்கு வந்தது. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் இதுவரை 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நர்சிங், பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார்கள். பலருக்கும் திருமணம் நடந்து முடிந்து மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்கள். என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டதால் ஹெச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஹெச்.ஐ.வி நெகடிவ் குழந்தை பிறந்து அவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பூரிப்புடன் கூறினார் நூரி.

பட மூலாதாரம், Noori Saleem
" எனக்கு 64 வயதானாலும் இன்னும் குழந்தைகளை பராமரிக்க என் உடலிலும் தெம்பு இருக்கிறது. என் மனதிலும் தெம்பு இருக்கிறது. நான் அடைந்த இன்னல்களை என் குழந்தைகள் அடைய விடமாட்டேன் என்கிறார் நூரி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













