ஹரித்வார், ராய்பூர் சாமியார்களின் சர்ச்சை பேச்சு - இரு காவல்துறையின் மாறுபட்ட அணுகுமுறை

பட மூலாதாரம், Alok Putul/BBC
- எழுதியவர், அலிஷான் ஜாஃப்ரி
- பதவி, பி பி சி ஹிந்திக்காக
2021ஆம் ஆண்டு டிசம்பரில், இந்தியாவில் இரண்டு தரம் சன்சத் என்ற பெயரில் செல்வாக்கு மிக்க இந்து மதவாதிகள் பங்கேற்ற கூட்டங்களில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன.
ஒரு கூட்டம் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தில் நடந்தது. அடுத்த கூட்டம் ஒரு வார இடைவெளியில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்தது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் ஹரித்வார் தரம் சன்சத் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள், உலகளாவிய கண்டனத்தையும் சட்ட நடவடிக்கையையும் பெற்றாலும், காந்தியை அவதூறாக பேசிய விஷயத்தில் சம்பந்தப்பட்ட சாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தவிர அது அதிக கவனத்தைப் பெறவில்லை.
எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு சமமான கோரமான அழைப்புகள், முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கான அழைப்புகள் உட்பட இந்த நிகழ்விலும் நடந்தது.
சத்தீஸ்கர் தரம் சன்சத்தில், சுவாமி காளிசரண் காந்தியைப் பற்றி இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததோடு, மத சிறுபான்மையினருக்கு எதிராக மீண்டும், மீண்டும் வெறுப்பைத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அவர் பேசிய காணொளி வைரலானதை அடுத்து, சத்தீஸ்கர் போலீசார் காளிசரனை கைது செய்தனர். அவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிபிசி பார்வையிட்ட அந்த நிகழ்வின் கூடுதல் காணொளிகள், வன்முறைக்கான நேரடி அழைப்பை மற்ற பேச்சாளர்கள் விடுத்ததும் தெரிய வந்தது.
எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், இந்த விஷயத்தில் போலீஸார் தவறான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும் குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
வன்முறைக்காக விடுக்கப்பட்ட அழைப்புகள்

பட மூலாதாரம், Alok Putul/BBC
ராய்ப்பூர் நிகழ்வின் முக்கிய பேச்சாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்கள் சிலர், ஹரித்வார் தரம் சன்சத் அமைப்பாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
உதாரணமாக, நிகழ்வின் பேச்சாளர்களில் ஒருவர் ஜூனா அகாராவின் செல்வாக்கு மிக்க தலைவரும், ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாரான நரசிங்கானந்தின் முக்கிய புரவலருமான பிரபோதானந்த் கிரி.
ஹரித்வார் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை 'மியான்மர் இன அழித்தொழிப்பு போல' செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
நரசிங்கானந்த் மற்றும் பிரபோதானந்தரின் குருவாதவும் ஜூனா அகாராவின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சுவாமி நாராயண் கிரி, நரசிங்கானந்துடனான ஒரு காணொளியிலும் தோன்றுகிறார்.
அதில் அவர் நரசிங்கானந்த் மற்றும் அவரது ஹரித்வார் நிகழ்வுக்கு ஜூனா அகாராவின் ஆதரவை வெளிப்படுத்துகிறார்.
ஜூனா அகாராவின் மகாமண்டலேஷ்வரராக நரசிங்கானந்த் நியமிக்கப்பட்டதில் நாராயண் கிரி முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Alok Putul/BBC
பெரும்பாலான சாமியார்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எரிச்சலூட்டும் கருத்துக்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் அதே வேளையில், ஒரு பெண் சாமியார் இந்து ஆண்களைத் தூண்டிவிட்டு, இந்துப் பெண்களைப் பாதுகாக்க முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையை பயன்படுத்துங்கள் என்பதாக பேசுகிறார்.
சாத்வி விபாவோ முஸ்லிம் பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ளும்படி இந்து ஆண்களிடம் அறிவுறுத்துகிறார்.2021ஆம் ஆண்டு அக்டோபரில் சுர்குஜா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "தர்மந்தரன் ரோகோ மஞ்ச்" என்ற மற்றொரு பேரணியில், ராய்ப்பூர் தரம் சன்சத்தின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான ராம்விச்சார் நேதம் மற்றும் நந்த் குமார் சாய் போன்ற முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சுவாமி பரமாத்மானந்தா கட்டாய மதமாற்றங்களில் சிறுபான்மையினர் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் இலக்கு வைக்கும் கொலைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பட மூலாதாரம், ANI
நூற்றுக்கணக்கான இந்துத்துவா ஆதரவாளர்களிடம் உரையாற்றிய பர்மாத்மானந்த், சிறுபான்மையினரின் தலையை துண்டிக்குமாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்.
பின்னர் வில், அம்புகள் மற்றும் ஈட்டிகளுடன் ஆயுதம் ஏந்தியவர்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
கடந்த காலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் வன்முறையை அவர் நியாயப்படுத்தினார். ராய்ப்பூர் நிகழ்வில், சுதந்திர போராட்டத்தைப் போலவே இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான போராட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று அவர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
போலீஸ் என்ன செய்கிறது?

பட மூலாதாரம், CG KHABAR/BBC
இத்தகைய சர்ச்சை பேச்சாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததா என்பதை அறிய சுர்குஜா எஸ்பி அமித் காம்ப்ளேவை பிபிசி அணுகியது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் யாரும் கவனம் செலுத்தாததால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
ஒரு குற்றச் செயல் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்று பிபிசி அவரிடம் கேட்டதற்கு, "இல்லை ஊடக கவனத்தின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை" என்று பதிலளித்தார்.இந்தக் காணொளிகள் பற்றி காவல்துறைக்கு தெரியுமா என்று கேட்டபோது, "இந்த காணொளிகளை நாங்கள் ஊடகங்கள் மூலம் பெற்றோம், எனவே அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்."காணொளி வைரலாகி 3 மாதங்கள் ஆகின்றன. அவை ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டதையும், அது திருத்தப்படுவதற்கான சிறிய வாய்ப்பு கூட இல்லை என்றும் பிபிசி அவருக்கு நினைவூட்டியது.
அதற்கு அவர், போலீசார் முழுமையாக விசாரித்து ஆதாரங்களின்படி செயல்படுவார்கள் என்று மட்டும் கூறினார்.
சுர்குஜா எஸ்பியின் அதே வார்த்தைகளை ராய்ப்பூர் எஸ்பி பிரசாந்த் அகர்வால், பிபிசியிடம் வலியுறுத்தினார். மற்ற பேச்சாளர்கள் மீது காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை, மேலும் வெறுப்பூட்டும் பேச்சை காவல்துறை சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது என்பது அவரது பதிலாக இருந்தது.
'காந்தியை அவமதிப்பு பிரச்னை ஆக சுருங்கிய சர்ச்சை'
முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைக்கான அழைப்புகள் புறக்கணிக்கப்பட்டதாக அகில இந்திய மஜிலிஸ் இ முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ச்சியான ட்வீட்களில் குற்றம்சாட்டியிருந்தார்.
சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு பெரும்பான்மை தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், ANI
"ஒருபுறம், உத்தராகண்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், ஆட்சிக்கு வந்தால், ஹரித்வாரில் இனப்படுகொலை செய்பவர்களைத் தண்டிப்போம் என்று கூறுகிறார்கள். மறுபுறம், சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு முஸ்லிம்கள் மீது பாலியல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகளைத் தூண்டியவர்களை கைது செய்ய தவறி விட்டது. வன்முறையைத் தூண்டும் வகையில் சத்தீஸ்கர் சாமியார்களால் வெளியிட்ட பல பேச்சுகளை நான் வெளியிட்டிருந்தேன் ஆனால் காவல்துறை ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது. முழுப் பிரச்னையும் மகாத்மா காந்தியை அவமதிக்கும் அளவுக்குச் சுருக்கப்பட்டது. காந்தியாகவே இருந்தால் கூட அவர் தன் மீதான விமர்சனத்தை விட அப்பாவி சிறுபான்மையினரின் உயிர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார்," என்று பிபிசியிடம் கூறினார் ஒவைசி.இந்த வழக்கில் 'ஒருதலைபட்சமாக விசாரணை' நடப்பதாக காங்கிரஸ் அரசை பாஜக பாரதிய ஜனதா கட்சி சாடியது.
"காளிசரணின் கருத்துக்கு எதிராக மட்டுமே காங்கிரஸ் கட்சி பாகுபாடான நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸுடன் தொடர்புடைய பேச்சாளர்கள் சமமாகவோ அல்லது இன்னும் அதிகமாகவோ பிரச்னைக்குரிய விஷயங்களைப் பேசியநிலையில், அவை பொதுப் பார்வையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.
நியாயமான விசாரணை நடத்தினால், காளிசரண் மட்டுமின்றி, எந்தச் சமூகத்தின் மீதும் வெறுப்பைத் தூண்டும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டியிருக்கும்.
காங்கிரஸ் தலைவர்கள் தர்ம சன்சத் உரையில் உடன்படவில்லை என்றால் அவர்களே ஏன் அதில் கலந்துகொண்டார்கள்? என்று பாஜக தலைவர் சச்சிதானந்த் உபாசனே கேள்வி எழுப்புகிறார்.தர்ம சன்சத்தின் தலைமைப் புரவலர் மஹந்த் ராம்சுந்தர் தாஸ், காளிசரணின் உரைக்குப் பிறகு அந்த நிகழ்வு தொடர்பாக பேசுவதை தவிர்க்கிறார்.

பட மூலாதாரம், Alok Putul/BBC
எவ்வாறாயினும், காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு பல வெறுப்பூட்டும் வார்த்தை பிரயோகங்களுக்கு வாய்ப்பாக இருந்தது. அதுவும் ராம்சுந்தர் தாஸ் முன்னிலையில் மிகவும் வன்முறை வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பேசப்பட்டபோதும் அவர் தலையிடவில்லை என்று பெயர் தெரியாத ஒரு வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்தது.
இது ஒரு வெறுப்பு பேச்சு மாநாடு என்பது பகிரங்கமான ரகசியம் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் துண்டுப் பிரசுரத்தை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட அவர், அதில் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது விவாத நிகழ்ச்சியின் நிரலாக இருந்தது.
அந்த நிகழ்வில் மற்ற பேச்சாளர்களை ஏன் கண்டிக்கவில்லை என்று ராம்சுந்தர் தாஸிடம் பிபிசி கேட்டபோது, பார்வையாளர் நிகழ்வு பற்றி பேசாமல் தவிர்த்தார்.
காந்திக்கு எதிரான காளிசரணின் கருத்துகளைக் கண்டித்தது போல், மற்றவர்களின் முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சுக்களை அவர் கண்டிக்கிறாரா என்று கேட்டதற்கு, ராம்சுந்தர், "இந்தக் கேள்விகளை ஹரித்வார் மற்றும் ராய்ப்பூரில் உள்ள பேச்சாளர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும், நான் எப்படி அது பற்றி பேச முடியும்," என்று மறுகேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Alok Putul/BBC
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்கள், பாஜக வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினர்.
"பாஜகவிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர்கள் ஏன் குற்றவாளிகளுக்கு எதிராக புகார் செய்யக் கூடாது? யாராவது சட்டத்தை கையில் எடுத்திருந்தால், அவர்களை சத்தீஸ்கர் அரசு சும்மா விடாது. என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.சிங் கூறினார்.
அதே சுற்றுச்சூழல் அமைப்பால் துன்புறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, தேர்தலுக்கு முன் வகுப்புவாத உணர்ச்சிகளைத் தூண்டியதாக பாஜக மீது குற்றம்சாட்டினார்.
எனினும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை பதிவு செய்த எவருக்கும் எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை."தெளிவாக, வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது," என்று அவர் கூறினார்.
"மற்ற வெறுப்புப் பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோருவதற்கு காளிசரணின் அனுதாபிகளால் எப்படி முடிகிறது" என்றும் அல்கா கேள்வி எழுப்பினார்.
நரசிங்கானந்தின் ஆதரவாளரான விகாஸ் செஹ்ராவத்திடமிருந்து தனக்கு வன்முறை அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், தனது புகாருக்குப் பிறகு சில நிமிடங்களுக்கா தாம் முற்றுகையிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.வெறுப்புக் குற்றங்களின் பல காணொளிகளில் பல கவர்தாவில் வன்முறையை தூண்டும் வகையிலான முஸ்லிம் எதிர்ப்பு அணி திரட்டல் காட்சிகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு ஜனவரியில் சுர்குஜாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் முஸ்லிம்களைப் புறக்கணிப்பதாக சத்தியம் செய்வது போன்ற காணொளி ஒன்று வெளிவந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக செயல்பாட்டாளர் அலோக் சுக்லா, "மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவா வன்முறைகள் அதிகரித்துள்ளன. வலதுசாரி இந்துத்துவா அரசியலுடன் தொடர்புடைய 'தேசியவாத' வெறுப்புணர்வை தூண்டும் குழுக்களுக்கு அரசாங்கம் தடையற்ற அனுமதி வழங்கியுள்ளது. பாஜக மீதான அவர்களின் எதிர்ப்பு கருத்தியல் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
- உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் நீடிக்கும் கலவர தாக்கம் - கள நிலவரம்
- பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?
- "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - தேர்தல் குறித்து உ.பி கிராமப் பெண்கள்
- பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் - எந்த நாடு முதலிடம்?
- யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?
- எளிய மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய சிறுவயது கனவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












