தமிழக மீன்பிடி படகுகளை சுற்றிவளைத்த இலங்கை வடமராட்சி மீனவர்கள்: 21 மீனவர்கள் கைது, 2 படகுகள் பறிமுதல்

தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று காலை நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை யாழ்பாணம் மாவட்டம் மாதகல் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 27ந் தேதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலஙலகை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கினார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் படகுகளை சிறைபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்று காலை முதல் சாலைகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்

அதனை தொடர்ந்து நேற்று இரவு வடமராட்சி, வெற்றிலைக்கணி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்கள் படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க படகுகளுடன் கடலுக்குள் சென்றனர். அப்போது வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு படகையும் அதிலிருந்த21 மீனவர்களையும் இலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து சிறைபிடித்து மீனவர்களை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இரண்டு படகை அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென தொடர்ந்து இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நடுக்கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த தமிழக படகை சுற்றிவளைக்கும் போது படகில் இருந்த தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக இலங்கை மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் இரண்டு படகையும் இன்று யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைத்து, பின் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: