"பாஜக அதிமுகவிற்கு நண்பேன்டா" - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ புதிய விளக்கம்

செல்லூர் ராஜூ

பாரதிய ஜனதா கட்சி, என்றைக்கும் அதிமுகவுக்கு "நண்பேன்டா" என திரைப்பட டயலாக் பாணியில் இரு கட்சிகள் இடையிலான உறவு குறித்து பேசியிருக்கிறார், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ .

மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவர், "தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது. ஆகவே வரும் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது," என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் சின்னத்திரை தொடர் பற்றியும் அவர் விமர்சித்தார்.

"நாட்டை திருத்தப் போறேன் என கமல் சொல்ல முடியாது. அவர் உலக நாயகன். அவரால் நடிக்க மட்டுமே முடியும். கமல் மூன்று நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். பிறகு பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு சென்றுவிடுவார். அடுத்து அவரது படம் தயாராக இருக்கிறது. அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று விடுவார் ஆனால் அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கிறோம் ஆகவே, கமலஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது," என்று செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை புண்ணிய பூமியாகும் மீனாட்சி சொக்கநாதர் வாழ்ந்த பூமி சொக்கநாதர் ஆகிய சிவபெருமான் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க கூடாது என்பதற்காக பிட்டுக்கு மண் சுமந்து உழைப்பை நிகழ்த்திக் காட்டிய இந்த பூமி எவ்வளவு புண்ணிய ஸ்தலங்கள் இருந்தாலும் மதுரை மண்ணுக்கு வருவது ஒரு பெருமை ஆகும். ஆகவே இந்த புத்தாண்டு திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி வந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்திலேயே அதிமுகவின் வெற்றிக்கு பாஜக பாறாங்கல்லை போல ஆதரவு கொடுக்கும். திமுகவை கிழி கிழி என பாஜக மேலிட தலைவர்கள் கிழித்தார்கள். பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த அனைவரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக - பாஜக கூட்டணி நிலைத்து நிற்கும் அரசியல் காரணங்களுக்காக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடருவது பற்றி கேட்டபோது, பாஜக அதிமுகவின் நண்பேன்டா, எங்கள் நண்பன் என்று தெரிவித்தார் செல்லூர் ராஜூ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :