டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணி வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணி வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 8 ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம், இந்தியா தனது நிகர ரன் ரேட்டை மேம்படுத்தி, அரையிறுதி வாய்ப்பில் தன்னை உறுதியாகத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்பு, இந்தியா அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்தது. ஆனால் இப்போது, ​​ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையே நடக்கும் போட்டி கிட்டத்தட்ட ஒரு காலிறுதிப் போட்டியாக மாறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி, தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக மாறும்.

தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு இந்தியா பல தவறுகளைச் சரிசெய்திருந்தாலும், சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளன.

தொடக்க ஜோடியில் மாற்றம்

 சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்காக ஒரு பெரிய ஸ்கோருக்கு சஞ்சு சாம்சன் அடித்தளம் அமைத்தார்.

போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் நிபுணர்களான இர்ஃபான் பதான் மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோர் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் இந்திய அணியின் இந்தப் புதிய உத்தியை வரவேற்றனர்.

இர்ஃபான் கூறுகையில், "இஷான் கிஷன் மூன்றாவது வரிசையில் களமிறங்குவதை நான் விரும்பவில்லை. ஆனால், இந்தத் தொடரில் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியா தடுமாறியது. இஷானுக்குப் பதிலாக சஞ்சுவைத் தொடக்க வீரராகக் களமிறக்கும் இந்தியாவின் முடிவு இந்தப் போட்டியில் பலன் தந்தது. ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா இந்த நகர்வால் ஆச்சர்யமடைந்தார், அதனால்தான் அவர் ஆரம்பத்தில் ஆஃப்-ஸ்பின்னர்களைப் பயன்படுத்தவில்லை" என்றார்.

சஞ்சய் பங்கர் கூறுகையில், "உண்மையில், டி20 அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றபோது இருந்த இடத்துக்கு இந்திய அணி மீண்டும் வந்துள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அங்கிருந்தே தொடக்க வீரர்களாக களமிறங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆனால் அந்த மாற்றங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்திய அணி தனது தவறைத் திருத்திக்கொண்டுள்ளது" என்றார்.

உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இந்தக் கூட்டணியில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யாது என்றும், வரவிருக்கும் போட்டிகளில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்குவதைக் காணலாம் என்றும் இர்ஃபான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபிஷேக் சர்மா இந்தப் போட்டியின் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இந்தத் தொடரில் இதுவரை ஒரு சிறந்த தொடக்கக் கூட்டணியைக் கண்டறிய முடியாதது இந்தியாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

ஆனால் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், நல்ல பார்மில் இருந்த இஷான் கிஷானுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனைத் தொடக்க வீரராக இந்தியா தேர்வு செய்தது. இது அணிக்கு ஒரு வலது-இடது கை ஆட்டக்காரர்களின் கூட்டணியைக் கொடுத்தது.

முன்னதாக, முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இடது கை ஆட்டக்காரர்களாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பதில் எதிரணிகளுக்குப் பெரிய சிரமம் இருக்கவில்லை.

இந்தியாவின் இந்த நகர்வு பலன் தந்தது, இந்த ஜோடி வெறும் 3.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

கடந்த நான்கு போட்டிகளில் 0, 0, 0 மற்றும் 15 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் எந்தப் பதற்றத்தையும் காட்டவில்லை மற்றும் முதல் இரண்டு-நான்கு பந்துகளை எதிர்கொண்டு களத்தில் தொடர்ந்து நிற்க முயன்றார்.

இதன் மூலம், அபிஷேக் சர்மா மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாகக் கையாண்ட இந்திய அணி

 ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலகக் கோப்பையில் இதுவரை இந்திய பேட்ஸ்மேன்களின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது, சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை தான்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்தத் தொடரில் எதிரணி சுழற்பந்து வீச்சாளர்கள் 19 இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்திருந்தனர்.

இந்த 19 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகள் எதிரணியின் ஆஃப்-ஸ்பின்னர்களிடம் வீழ்ந்தன. இருப்பினும், ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த பலவீனத்தை நிவர்த்தி செய்தனர். ஜிம்பாப்வே இந்தியாவின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது, அதில் ஒன்று மட்டுமே சுழற்பந்து வீச்சாளருக்குக் கிடைத்தது.

போட்டிக்குப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "நடந்த விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாங்கள் இங்கு வந்தோம். எங்கள் வீடியோ ஆய்வாளர் தயாரித்த ஸ்லைடுகளை நாங்கள் பார்த்தோம், அதில் ஆண்டு முழுவதும் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கண்டோம். அதைப் பார்த்த பிறகு எங்களுக்குப் பெரிய நேர்மறை எண்ணம் உருவானது. டாப் ஆர்டர் முதல் ஆறாவது வரிசை வரை அனைத்து பேட்ஸ்மேன்களும் பங்களித்தனர்" என்றார்.

சூர்யகுமார் யாதவின் இந்த கூற்று, முந்தைய போட்டிகளில் இந்திய அணி மீண்டும் மீண்டும் செய்து வந்த ஒரு தவறையும் சுட்டிக்காட்டியது. அதாவது, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி ஆட்டத்தின் வேகத்தைக் குறைப்பது தான் அந்தத் தவறு.

ஆனால், இந்தியா இந்தத் தவறைச் சரிசெய்தது, மேலும் அவர்கள் அதைத் திறம்படச் செய்து பல குறிப்பிடத்தக்க சாதனைகளைத் படைத்தனர்.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த ஆறு இந்திய பேட்ஸ்மேன்களும் 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தனர்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் எடுப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தத் தொடரில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோருக்கும் வழிவகுத்தது.

20 ஓவர்களில் இந்தியா எடுத்த 256 ரன்கள் என்பது உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 17 சிக்ஸர்களை விளாசினர், இது டி20 உலகக் கோப்பையின் ஒரு இன்னிங்ஸில் இந்தியாவால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கையாகும்.

தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்கு இந்தியாவின் பேட்டிங் தான் மிகப்பெரிய காரணமாக இருந்தது, ஆனால் அடுத்த போட்டியிலேயே அது சிறப்பாக மீண்டெழுந்து வந்துள்ளது என்பது தான் இதன் பொருள்.

பந்துவீச்சு குறித்த கேள்விகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த அற்புதமான வெற்றியில் கூட, இந்தியாவின் பந்துவீச்சு அவர்களின் பலவீனமாக வெளிப்பட்டது. 257 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பந்து வீச்சாளர்களால் ஆறு ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

ஜிம்பாப்வேக்கு எதிரான இந்த அற்புதமான வெற்றியில் கூட, இந்தியாவின் பந்துவீச்சு அவர்களின் பலவீனமாக வெளிப்பட்டது. 257 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே தொடக்க வீரர் பிரையன் பென்னட் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 11 சிக்ஸர்களை விளாசினர்.

இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்ட ஜிம்பாப்வே, இலக்கு குறைவாக இருந்திருந்தால், இந்தியாவின் பலவீனமான பந்துவீச்சை சாதகமாகப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருக்க முடியும்.

ஜிம்பாப்வே ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வேகமாக ரன் எடுக்க தடுமாறியது, ஆனால் 6.2 ஓவர்களுக்குப் பிறகு இந்தியா தனது முதல் விக்கெட்டை எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்தனர்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா நான்கு ஓவர்களில் 35 ரன்களை விட்டுக்கொடுத்து தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர் .

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்தியா ஆறாவது பந்து வீச்சாளராக சிவம் துபேயை முயற்சித்தது, ஆனால் அவர் இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் வழங்கினார்.

இருப்பினும், அர்ஷ்தீப் சிங் நான்கு ஓவர்களில் 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கியப் பங்காற்றினார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பானதாக இல்லை என்பதை கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையைச் சொல்வதென்றால், நாங்கள் பந்துவீச்சில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இறுதியில், நாங்கள் வெற்றி பெற்றது நல்லது. ஆனால், நாங்கள் முன்னேறிச் செல்லும்போது இதைக் கருத்தில் கொள்வோம்" என்றார்.

மேலும், "மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாங்கள் களம் இறங்கும் போது இதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு