இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷ்ருதி மேனன்
    • பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெள்ளிக்கிழமை 30ஆவது நாளை எட்டியிருக்கிறது. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்குப் பலனளிக்கக்கூடிய ஒன்றுதான் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய அரசு, மறுபுறம், அந்த சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோதியும், பாஜகவும் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக 2016ஆம் ஆண்டில் தெரிவித்தனர். ஆனால், இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

கிராமப்புற வருவாய்க்கு என்ன ஆனது?

உலக வங்கி தகவல்களின்படி இந்தியாவில் பணியும் நபர்களில் 40 சதவீதம் பேர் விவசாயத்திலோ அதனுடன் தொடர்புடைய தொழிலிலோ ஈடுபட்டுள்ளனர்.

கிராமப்புற வீடுகளின் வருவாய் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. ஆனால், கிராமப்பகுதிகளின் முக்கிய வருவாயான விவசாயத்தில் வரும் வருமானம் குறித்த தகவல் ஒன்றின்படி 2014 -2019 ஆண்டுகளில் விவசாய வருவாய் உயரும் விகிதம் குறைந்து வருகிறது.

கடந்த சில வருடங்களில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. உலக வங்கி தகவல்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 2017ஆம் ஆண்டு 2.5 சதவீதத்திலிருந்து 2019ஆம் ஆண்டு 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2013ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு இந்தியா கணக்கெடுப்பு ஒன்றை எடுத்தது அதில் இடைப்பட்ட காலத்தில் விவசாயிகளின் சராசரி வருவாய் 40 சதவீத அளவு அதிகரித்ததாக கூறப்பட்டது.

ஆனால் அந்த மூன்று வருடங்களில் விவசாயிகளின் அன்றாட வருவாய் வெறும் 2 சதவீத அளவே உயர்ந்துள்ளதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிக்கை 2018ஆம் ஆண்டில் மதிப்பிட்டது.

மேலும் இந்த அறிக்கைபடி, இந்த விவசாயிகளின் வருவாய், விவசாயமல்லாதோரின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குதான் என்று தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து பேசிய விவசாய கொள்கை நிபுணர் தேவிந்தர் ஷர்மா, விவசாயிகளின் வருமானம் பல தசாப்தங்களாக அதிகரிக்காமலேயே உள்ளது அல்லது குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் அதிகரிக்கும் விலைவாசியை விவசாயிகளும் எதிர்கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டும் தேவிந்தர் ஷர்மா, அவர்கள் தயாரித்த பொருட்களுக்கு வைக்கப்படும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்தும் குறிப்பிடுகிறார்.

கடந்த சில வருடங்களாக நிலவும் தீவிர பருவ மாற்றங்களும் விவசாயிகளை பாதித்து வருகின்றன.

அரசின் இலக்குகள் எட்டப்பட்டனவா?

2022 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்றால், 2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவர்களின் வருமானம் 10.4 சதவீதமாக அதிகரித்திருக்க வேண்டும் என 2017ஆம் ஆண்டில் அரசாங்க கமிட்டி ஒன்று தெரிவித்தது.

ஆனால் அது நடக்கவில்லை.

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

மேலும் விவசாயத்துறையில் அரசு 6.39 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தனியார் மற்றும் அரசு முதலீடு இரண்டுமே அது குறைந்து வருவதையே காட்டுகிறது.

2011-12 ஆண்டுகளில் விவசாயத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த முதலீடு 8.5 சதவீதமாக இருந்தது.

2013-14ஆம் ஆண்டுகளில் அது 8.6 சதவீதமாக உயர்ந்தது. அதன்பின் 2015ஆம் ஆண்டிலிருந்து எந்த வளர்ச்சியும் இல்லாமல் 6 -7 சதவீதத்தில் உள்ளது.

கடனில் மூழ்கும் விவசாயிகள்

2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி எடுத்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் மூன்று வருடங்களில் விவசாயிகள் கொண்டுள்ள சராசரி கடன் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவித்தது.

மத்திய மற்றும் மாநில அளவில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டு 80 மில்லியன் விவசாயிகளுக்குப் பயன் தரும் நேரடி பணம் செலுத்தும் திட்டம் ஒன்றை அறிவித்தது மத்திய அரசு.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.

இந்தியாவில் ஏற்கனவே ஆறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது என்கிறார் தேவிந்தர் ஷர்மா.

ஆனால் இந்த திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கான தகவல் இல்லை.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ கமிட்டியின் தலைவர் அசோக் தல்வாய், அரசு சரியான பாதையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

"நாம் தரவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த மூன்று வருடங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது," என்கிறார் அவர். மேலும் அவர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் எல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பது தெரிந்ததாக பிபிசியிடம் அசோக் தல்வாய் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :