ஜோ பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி நிருபர்
'அமெரிக்கா இஸ் பேக்' (பழையபடி திரும்பியது அமெரிக்கா) - அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெறும் கட்டம் வந்தபோது, ஜோ பைடன் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் வெற்றி உரையின்போது இப்படித் தான் முழக்கமிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், தனது புதிய அணியை மக்களுக்கு அறிமுகப்படுத்திய அவர், "எனது அணிக்கு ஒப்பிடமுடியாத அனுபவமும் திறமையும் உள்ளது. பழைய சிந்தனை அல்லது பழைய பழக்கவழக்கங்களுடன் நாம் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என்ற கருத்தையும் இந்த அணி பிரதிபலிக்கிறது." என்றும் குறிப்பிட்டார்.
ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
தற்போது அவர் தனது இடைக்கால அணியை அறிவித்துள்ளார். இதில் ஆன்டனி பிளிங்கன், ஜான் கெர்ரி, எவரில் ஹெய்ன்ஸ், ஜேக் சுலிவன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் போன்ற அனுபவம் மிக்கவர்களின் பெயர்களும் அடங்கும். இவர்கள் ஒபாமா ஆட்சியிலும் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பைடனின் புதிய அணி ஒபாமா ஆட்சியின் பிம்பமா?
பைடன் நிர்வாகத்தை ஒபாமா நிர்வாகத்துடன் ஒப்பீடு செய்வது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுவதற்கு இதுதான் காரணம்.

பட மூலாதாரம், Twitter
ஜான் கெர்ரி - இவர் 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபரின் பிரதிநிதியாக பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக டிரம்ப் முடிவு செய்தார். காலநிலை மாற்றம் குறித்த அதிபரின் சிறப்புத் தூதராகச் செயலாற்ற இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் பைடன்.
எவரில் ஹெய்ன்ஸ் - ஒபாமா அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள இவர், தேசியப் புலனாய்வுத் துறையைக் கையாளும் முதல் பெண்மணியாகச் செயலாற்றவுள்ளார்.
ஆன்டனி பிளிங்கன் - பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக இவர் இருப்பார். ஒபாமா நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும் தேசியப்பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும் இவர் செயலாற்றியுள்ளார். அப்போது பைடன் துணை அதிபராக இருந்தார்.
ஜேக் சுல்லிவன் - இவர் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக சுல்லிவன் இருந்தார்.
லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் - இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பராக் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றியவர். இவர் 2013 முதல் 2017 வரை ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்தார்.
ஆனால் ஒரு செய்தி ஊடகத்துக்கு பைடன் அளித்த பேட்டியில் "எனது நிர்வாகம் ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாவது பதவிக்காலம் ஆகாது" என்று தெளிவாக கூறியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தில் பங்கெடுத்த அமைச்சர்கள் தனது அணியிலும் இடம் பிடித்திருப்பதற்குக் காரணம், அவர்கள் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிம்பமாகத் திகழ்கிறார்கள் என்பது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஒபாமா நிர்வாகத்தின் மூன்றாவது ஆட்சிக் காலமாகத் தனது நிர்வாகம் இருக்காது என்பதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டார். "நாங்கள், ஒபாமா-பைடன் நிர்வாகங்களின் ஒப்பீட்டில் ஒரு புதிய உலகத்தை எதிர்கொள்கிறோம்" என்று பைடன் கூறினார்.
பைடனும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலும்
பைடனின் இந்த வாதத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
டைம்ஸ் ஆப் இந்தியாவின் ராஜீய விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் இந்திராணி பக்சி, "பைடன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க காங்கிரஸ் தான். இரண்டாவது சவால் டிரம்ப் முறியடிக்கத் தவறிய கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது. மூன்றாவது சவால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுவருதல். இவை மூன்றும் பைடன் முதலில் சமாளிக்க வேண்டிய உள்நாட்டுச் சிக்கல்கள். அவற்றைக் கையாளும் விதம் கொண்டு தான் பைடன் 1.0-வின் செயல்பாடு மதிப்பிடப்படும்." என்று கூறுகிறார்.
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஆய்வுத் துறையின் இயக்குநரும் லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியருமான ஹர்ஷ் பந்த் இந்திராணியின் கருத்துடன் உடன்படுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "ஜோ பைடனுக்கு முன் இருக்கும் சவால், அமெரிக்காவின் மாறிவரும் அரசியல் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படப்போகிறார் என்பது தான். இந்த அரசியல் கண்ணோட்டங்கள் என்பவை உள்நாட்டு மற்றும் உலகளாவியவை ஆகும். அதற்கு முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இரு அளவிலும் ஒரு விரிவான பாதை வகுத்து அதனைத் தன் அணியினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பின்பற்றி அணியின் செயல்பாடு இருக்கவேண்டும்" என்று கூறுகிறார்.
மேலும் அவர், "அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினருக்கு அதிக பலமில்லை. ஆனால், செனட் சபையில் இரு தரப்பினருக்கும் சரி பாதி பலம் உள்ளது. செனெட்டின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களில் குடியரசு கட்சி, பைடனுக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும்." என்றும் கூறுகிறார்.
ஒபாமா 3.0 என்பதன் பொருள்
ஒபாமா 3.0 என்றால் என்ன? இதற்கு பதிலளித்த இந்திராணி, "ஒபாமா 3.0 என்றால் பைடன் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவார். அவர் ரஷ்யாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார். காலநிலை மாற்றம் போன்ற விஷயங்களில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், BROOKS KRAFT LLC / CORBIS VIA GETTY IMAGES
இந்திராணி தொடர்ந்து கூறுகையில், "பைடன் 1.0, ஒபாமா 3.0 -வாக இருக்க வேண்டுமானால், ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவை இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியம். ஆனால் இன்று சீனா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையை விரும்புகிறதா என்று கேட்டால், நிச்சயமாகக் கூற முடியாது. சீனாவின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, அமெரிக்காவுடன் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிகிறது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரில் தான் வெற்றி பெற்றதாக அது எண்ணுகிறது." என்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா நிறைய மாறிவிட்டது. இது உலகின் ஒரே சக்திவாய்ந்த பொருளாதாரமாகும், இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது என்பது இந்திராணியின் கருத்தாகவுள்ளது
சீனாவுடனான தொடர்பு
ஜோ பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் கால தாமதம் செய்த நாடுகளில் சீனாவும் ஒன்று. சீன அரசாங்க செய்தி நிறுவனத்தின்படி, ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், "சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கிறது" என்று கூறியுள்ளார்.
வாழ்த்துச் செய்தி கூட பூடகமாகத் தெரிவிக்கப்படுவது, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
எனவே பைடனின் புதிய அணியை மட்டும் மனதில் கொண்டு இது ஒபாமா 3.0 -வாக இருக்கும் என்று அவசரப்பட்டுக் கூற இயலாது என்று கருதுகிறார் இந்திராணி.
ஆயினும், வெளியுறவுக் கொள்கை அனுபவத்தில் பைடனுக்கு ஈடாக எவரும் இன்று அமெரிக்காவில் இல்லை என்று அவர் நம்புகிறார். ஆனால் உள்நாட்டு அரசியலில் பைடன் பின்தங்கியிருந்தால், வெளியுறவுக் கொள்கையின் வலிமையால் மட்டும் அவரால் அதிகம் சாதிக்க முடியாது என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், YUICHI HAMILTONZAKI / GETTY IMAGES
இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய மாற்றம் இது தான். பைடனும் இதைத் தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹர்ஷ் பந்த் அதையே வேறு விதமாகக் கூறுகிறார். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்திருக்கலாம் ; ஆனால் 'டிரம்பிசம்' இன்னும் உள்ளது. இதை எதிர்த்துப் போராடுவது இப்போது பைடனுக்குப் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கணிக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், ஒபாமா நிர்வாகத்தைப் போல சீனாவுடன் உறவு கொள்ள முயற்சிப்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.
ஹர்ஷ் பந்த் மேலும் கூறுகையில், "தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய காலங்களில் சீனாவுடன் கொண்டிருந்த கடுமையான அணுகுமுறையைக் கடைபிடிக்கவேண்டிய நிலையில் தான் பைடனும் உள்ளார்.
ஷி ஜின்பிங்கைக் குறிக்கக் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, பைடன் சீனாவுக்கு முன்னால் பலவீனமாக இருப்பார் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனவே, சீனாவுக்கு எதிராகத் தானும் கடுமையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கும் இருக்கிறது.
டிரம்பின் கொள்கைகளின் இது போன்ற அழுத்தமும் வரவேற்பும் பைடனின் தேர்தல் பிரச்சாரத்திலும் வர்த்தகக் கொள்கையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்தை எழுப்பினார்.
எனவே பைடன் தனது பிரச்சாரத்தில் 'மேட் இன் அமெரிக்கா ஃபார் அமெரிக்கா' பற்றியும் பேசினார். இதிலிருந்து, வரும் நாட்களில் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை ஒபாமாவின் பதவிக்கால வர்த்தகக் கொள்கையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
பல தரப்பு ஒப்பந்தங்கள்
இரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் போன்ற பிற பலதரப்பு ஒப்பந்தங்களுக்கும் இது பொருந்தும்.
டிரம்ப் நிர்வாகத்தின் போது, அமெரிக்கவுடனான பிற நாடுகளின் உறவுகள் பெரிதும் மாறிவிட்டன. அமெரிக்கா-இரான் உறவு, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

பட மூலாதாரம், Getty Images
இதேபோல், உலகில் பல நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும் வந்துள்ளன. அமெரிக்காவின் உதவியுடன், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புதிய நட்பு ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன் மற்றும் செளதி அரேபியாவும் இஸ்ரேலுக்கு நெருக்கமாகி வருவதையும் காணலாம்.
ஆனால் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவு இருதரப்பு உறவு மட்டுமல்ல, பல வழிகளில் அது பலதரப்பு உறவாகவும் பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுடன் இரான் ஒரு ஒப்பந்தத்தை (ஜே.சி.பி.ஓ.ஏ) மேற்கொண்டது. அதன்படி இரான் தனது அணுசக்தி திட்டங்களை மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. அதற்கு ஈடாக ஐ.நா. விதித்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவை இதிலிருந்து விலக்கிக் கொண்டார்.
இப்போது பைடன் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், அவர் மீண்டும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தம் அவர்கள் மீது அதிகமாக இருக்கலாம். அமெரிக்கா தனது நீண்ட கால நண்பர்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புவதாக பைடன் கூறி வருகிறார்.
இது ஒரு எடுத்துக்காட்டு. ஒபாமா நிர்வாகத்தின் போக்கை விரும்பினாலும் கூட பைடனால் செயல்படுத்த முடியாத பல பலதரப்பு பிரச்சினைகள் உள்ளன.
எனவே, இன்றைய சூழலில், பைடனின் கொள்கை, ட்ரம்பின் கொள்கைகளின் விரிவாக்கமாகவே இருக்க முடியுமேயன்றி, ஒபாமாவின் காலக் கொள்கையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார். பைடனின் பாணி டிரம்பின் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.
பிற செய்திகள் :
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












