கோவை: நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை?

நீட் தேர்வு பயத்தால் கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை?

கோவையில் 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு பயத்தினால் இவர் தற்கொலை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சுபஸ்ரீ செவ்வாய்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை குறித்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு பற்றிய பயம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக மாணவி தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

உயிரிழந்துள்ள மாணவி, நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், பொது மருத்துவ பிரிவில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

இதனால் சுபஸ்ரீ, மன உளைச்சலுக்கு உள்ளாகி நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்து திமுக எம்.பி கனிமொழி, அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியார் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: