கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே தற்கொலை செய்துகொண்ட முதியவர்

தற்கொலை செய்துகொண்ட முதியவர்

பட மூலாதாரம், asiandelight / getty

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

தனக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்னரே கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர், கேரள மாநிலத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இதனிடையே, இவருக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த காரணத்தினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 6ஆம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

இவர் கேரளாவிலிருந்து வந்த காரணத்தினாலும், கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் கொரோனா வைரஸ் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

பின்னர், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரிகளைத் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்னரே, கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா நோய் குறித்த அச்சம் காரணமாக மன உளைச்சலால் இவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தற்கொலை செய்து கொண்ட நபரின், கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், இவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என தெரியவந்தது.

மருத்துவமனை தரப்பில் தற்கொலை செய்து கொண்டவர் குறித்து செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

அதில், "இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பப் பிரச்சனை இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வியாழன் இரவு தனது மனைவியை பார்க்க வேண்டுமெனப் பணி செவிலியர்கள் இடம் வற்புறுத்தியதின் பேரில், அவரது மனைவியை வரவழைத்து போதுமான சமூக இடைவெளியில் சந்திக்க வைத்துள்ளனர். அப்போது அறையின் கதவருகில் நின்று தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் தன்னை தனது உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மற்றும் மதியம் உணவு அருந்தியுள்ளார், பணி மருத்துவர்கள் மற்றும் பணி செவிலியர்களின் சகஜமாகப் பேசியுள்ளார். மாலை 6 மணியளவில் பணியில் இருந்த செவிலியர் கொடுத்த டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 7 மணிக்கு மருத்துவரும், செவிலியரும் நோயாளியைப் பரிசோதனை செய்ய அறையின் கதவைத் திறந்து பார்க்கும்போது, இவர் தனது அறையில் துண்டு மூலம் தூக்கிட்டுத் தொங்கிய நிலையிலிருந்துள்ளார். அவரைக் கீழே இறக்கி சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: