You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பு - இதுதான் காரணமா?
விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பதவியிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார் எனக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிப்பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதால், அவர் அமைச்சர் பதவியில் தற்போதுவரை தொடருகிறார். ராஜேந்திர பாலாஜி என்ன காரணத்திற்காக கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என வெளிப்படையாக அதிமுக தெரிவிக்கவில்லை. இருந்தபோதும், இன்று (மார்ச் 22) அவர் டிவிட்டர் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு காரணமாக நீக்கப்பட்டிருக்கலாம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
ராஜேந்திர பாலாஜி பதிவிட்ட கருத்தை தற்போது நீக்கியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனக் கட்சி கருதியதால் அவரை கட்சி பதவியிலிருந்து விலக்கிவைக்க வாய்ப்புள்ளது என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக, ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தை விமர்சித்து ஊடகங்களில் பேசிவருவதாகவும், அவருடைய கருத்து சர்ச்சைக்குள்ளாவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுகவினர் கருதுகின்றனர்.
கடந்த 2019ல்,''ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற நேரத்தில், ''பிரதமர் மோடிதான் எங்களுக்கு 'டாடி'யாக இருந்து வழிகாட்டுகிறார்'' எனக் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :