You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிம் மாற்றும் மோசடி: ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள்
- எழுதியவர், ஓன்கர் கரம்பெல்கர்
- பதவி, பிபிசி மராத்தி
சமீபத்தில் மும்பையில் ஒரு தொழிலதிபர் சிம் மாற்றும் மோசடியால் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஒரே இரவில் நடந்துமுடிந்துள்ளது.
இது போன்ற சமயங்களில், ஏமாற்றுக்குழு யாராவது ஒருவரின் மொபைலின் சிம் கார்டை முடக்குவதற்கு கோரிக்கை விடுக்கிறார்கள். சிம் கார்டு முடக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரின் எண்னை கொண்டிருக்கும் புதிய சிம் மூலம் ஓடிபி (OTP) எனச் சொல்லப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தும் நூதன திருட்டு மூலமாக பணத்தை ஒருவரின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றுவது போன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்றைய நாள்களில், பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் ஊடகம் வழியாகவேச் செய்யப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தகவல்கள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனும் சூழ்நிலையும் நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் சிம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.
எப்படி சிம் மாற்று மோசடி நடக்கிறது?
சைபர் பாதுகாப்பு சட்ட நிபுணர் மற்றும் வழக்குரைஞரான பிரஷாந்த் மலி எப்படி சிம் மாற்று மோசடி நடக்கிறது மற்றும் எப்படி மக்கள் தம்மை பார்த்துக்கொள்வது என்பது குறித்து பிபிசி மரத்தியிடம் பேசினார்.
அவர் சொன்னதென்ன?
''இது போன்ற குற்றங்கள் தோராயமாக 2011-லிருந்து அதிகரித்து வருகிறது. சிம் மாற்றும் மோசடி என்பது யாரோ ஒரு நபரால் மட்டும் செய்யப்படுவதில்லை. பலர் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். இது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
சைபர் மற்றும் சட்ட அமைப்பு நடத்திய உள் ஆராய்ச்சி ஒன்றில் 2018-ம் வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 200 கோடி ரூபாய் சிம் மாற்று மோசடி மூலம் களவாடப்பட்டுள்ளது''
1.இது போன்ற குற்றங்களுக்கு இரையாகுபவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் அவதிப்படுகிறார்கள். வெவ்வேறு வித ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள் உங்களை கண்காணிக்கிறார்கள்.
சில சமயங்களில் அவர்களிடமிருந்து உங்களுக்கு நீங்கள் முன்பின் அறியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடும். மேலும் அவர்கள் உங்களிடம் பல்வேறு தகவல் கேட்பார்கள். அப்போது நீங்கள் முக்கியமான விவரங்களை பகிர்வதை தங்களின் மோசடிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
2. சில சமயங்களில் சந்தேகத்துக்குரிய இணைப்புகளை உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் அதை கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். இப்படித்தான் உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படுகின்றன.
சில நேரங்களில் முறைகேடு செய்யும் குழுக்கள் வங்கிகளின் தரவுத்தளங்களை முறைகேடாக வாங்கிவிடுகிறார்கள். ஒருமுறை உங்களது தகவல்கள் அவர்களுக்கு கிடைத்துவிட்டால் அவர்களால் எளிதாக போலி அடையாள அட்டையை உருவாக்கிவிட முடிகிறது. மேலும் அதன் மூலம் மொபைல் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு உங்கள் மொபைலில் இருக்கும் சிம்மை முடக்கிவிட முடிகிறது. சில நேரங்களில் வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் மூலமாக தகவல்களை சேகரிக்கிறார்கள்.
3. மொபைல் நிறுவனங்களிடமிருந்து புதிய சிம்மை பெற்றப்பிறகு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) பெறுவதற்கான கோரிக்கையை விடுத்து, அக்கடவுச்சொல் கிடைத்தவுடன் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கிறார்கள்.
புது சிம் அவர்களது கையில் இருப்பதால் மட்டுமே ஓ.டி.பி மூலமாக அவர்களால் இம்முறைகேட்டில் ஈடுபடமுடிகிறது. உங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பணம் உடனடியாக வெவ்வேறு நபர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
உங்களது கணக்குக்கு வேறு யாராவது பணம் மாற்றினால் என்ன செய்வது?
யாராவது உங்களிடம் வந்து உங்களது வாங்கி கணக்கில் வைப்பு நிதி போடத்தயாராக இருப்பதாகக் கூறினால் சந்தேகப்படுங்கள் என்கிறார் பிரஷாந்த் மலி.
''மோசடிக்கார்கள் உங்களது கணக்கில் சிறந்து காலம் வைத்திருந்தால், வைக்கப்படும் தொகைக்கு 10% கமிஷன் தருகிறேன் அல்லது பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூறுவார்கள். இப்படிப்பட்ட பணம் பெரும்பாலும் சிம் மாற்று மோசடி மூலம் யாரையாவது ஏமாற்றியதால் கிடைத்த பணமாக இருக்கக்கூடும்''
'' ஆகவே நீங்கள் மோசடியில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட, இம்மோசடி தொடர்பான வங்கி கணக்கில் தொடர்புள்ளவராக சிக்கக்கூடும். நீங்கள் முன்பின் அறியாத நபர் காரணமின்றி உங்களது வங்கிக்கணக்கில் வைப்பு நிதி செலுத்துவதாக கூறினால், அதுபோன்ற வலைகளுக்கு இரையாகாதீர்கள்.''
உங்களது முக்கியமான ஆவணங்களை யாரிடம் ஒப்படைக்கிறீர்கள்?
ஆன்லைன் பரிமாற்றங்கள் செய்யும்போது மக்கள் வழக்கமாக என்னென்ன தவறுகளைச் செய்கிறார்கள் என்பது குறித்து பிபிசி மரத்தியிடம் பேசினார் மகாராஷ்டிரா சைபர் துறையின் துணை கண்காணிப்பாளரான பால்சிங் ராஜ்புட்.
''கிரெடிட் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை நீங்கள் யாரிடமும் பகிரக்கூடாது. ஆன்லைன் பரிமாற்றங்கள் செய்வதாக இருந்தால் பாதுகாப்பான இணையதள பக்கங்களில்தான் நீங்கள் மேற்கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஓ டி பி மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றில் இருக்கும் சி வி வி எண் போன்றவற்றை முகம் தெரியாத நபர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது'' என்கிறார்.
''யாரிடம் நீங்கள் உங்களது ஆவணங்களை தருகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. யாரிடமாவது உங்களது ஆவணங்களின் நகலை தருவதாக இருந்தால் அதில் எதற்காக அந்த ஆவணத்தை கொடுக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள் மேலும் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் எழுதிவிடுங்கள்.
இது ஆவணங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். மேலும் எந்தவொரு நபரிடமோ நிறுவனங்களிடமோ ஜெராக்ஸ் செய்யப்பட்ட தாளை தரும்போது உண்மையில் உங்களது ஆவணங்களை அவர்களிடம் தர வேண்டியது அவசியமா என்பதை இரண்டு முறை யோசித்து ஆராய்ந்துவிட்டு கொடுங்கள்'' என விளக்குகிறார்.
சிம் மாற்று மோசடியை தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
''ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் மின்னஞ்சல் எச்சரிக்கை வசதி தேவை. ஒருவேளை சிம் கார்டு உடனடியாக முடக்கப்பட்டால் வங்கிக்கு உடனடியாக தகவல் கொடுத்து மொபைல் எண்னை வங்கிக்கணக்கின் இணைப்பிலிருந்து நீக்கக் கோரும் வசதி வேண்டும்.''
சிம் மாற்று மோசடிகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை அல்லது தொடர் விடுமுறை தினங்களில் நடக்கின்றன. பொதுவாக விடுமுறை தினங்களில் வங்கியை தொடர்பு கொள்வதற்கு மக்களும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆகவே சிம் கார்டு இந்நாட்களில் முடக்கப்பட்டால் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்''
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்