"மாணவிகளின் போராட்டத்திற்கு அந்நிய சக்திகளே காரணம்"- பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர்

காயமடைந்த மாணவிகள்

பட மூலாதாரம், Sameeratmaj Mishra

படக்குறிப்பு, காயமடைந்த மாணவிகள்
    • எழுதியவர், சமீர் ஆத்மஜ் மிஸ்ரா
    • பதவி, பிபிசி இந்தி சேவை, வாரணாசி

டெல்லி மற்றும் அலகாபாத்தை சேர்ந்த சில குழப்பச் சக்திகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சூழ்நிலையை சீரழிப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

''பல்கலைக்கழக மாணவர்கள் என்னை எதிர்க்கலாம். எனது எண்ணங்கள் அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆனால், இப்பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த மதன் மோகன் மாளவியாவுக்கு எதிராகவும், பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும் அவர்களால் எதையும் தவறாக கூறமுடியாது'' என்கிறார் துணை வேந்தர் கிரிஷ்.

பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவிகள் போராட சில வெளிப்புற சக்திகள் தூண்டியதாகவும், அவர்களை சந்திக்கத்தான் சென்றபோது தன் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாவும் கூறுகிறார் கிரிஷ்.

இந்தக் குழப்ப சக்திகளின் காரணமாகவே, பல்கலைக்கழகத்திற்கு போலீஸ் புகுந்து நடவடிக்கை எடுத்தாகவும் கூறுகிறார் அவர்.

துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி

பட மூலாதாரம், JITENDRA TRIPATHI

படக்குறிப்பு, துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி

பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவி ஒருவர் ஆளானதாக குற்றம்சாட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மாணவிகளை பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எந்த நோக்கமும் இல்லையென பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பினர் குற்றம்சாட்டினார்.

சனிக்கிழமை மாலை போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் இடம்பெற்றுள்ளதால் சம்பவ இடத்தில் இருந்து மாணவர்களை போலீசார் அகற்றினர்.

இது தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல வாகனங்கள் தீயிலிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறை சூழ்நிலையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டோர் பல்கலைக்கழக விடுதிகளில் உள்ளனரா என்று போலீசார் பல்கலைக்கழக விடுதிகளில் தேடல் நடத்தினர்.

வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார்

பட மூலாதாரம், Sameeratmaj Mishra

மாணவர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க பெரும் அளவில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வன்முறை ஏற்பட்டதையொட்டி மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் கோபமடைந்த மாணவர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :