You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மஹாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து காணாமல் போன முகலாயர்கள்
- எழுதியவர், சமீர் ஹாஷ்மி
- பதவி, பிபிசி
இந்தியாவின் பெரும்பகுதியை மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முகலாய சாம்ராஜ்ஜியம் தொடர்பான பாடங்களை பள்ளி புத்தகங்களில் இருந்து மகாராஷ்டிரா மாநில அரசு அகற்றிவிட்டது.
முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு பாட புத்தகங்களில் இருந்து ஏன் அகற்றப்பட்டது? இந்தியா, இந்து ஆட்சியாளரால் நிறுவப்பட்ட பேரரசு என்பதை மையப்படுத்தவேண்டும். அதற்கு உதாரணமாக புத்தகத்தில் மையப்படுத்தப்படுபவர் இந்து மதத்தை சார்ந்த ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜி.
ஆனால் புத்தகங்களில் ஏற்படுத்திய மாறுதலால் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான கட்டிடங்களும், நினைவுச்சின்னங்களும் முகலாயர் காலத்தில் கட்டப்பட்டவை. சுமார் 300 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த முகலாய ஆட்சி, இந்திய வரலாற்றில் தவிர்க்கமுடியாத முக்கியமான பகுதியாகும்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முகலாயர்களின் முக்கியத்துவம் தெரிய வேண்டியதில்லை என்று எப்படி முடிவு செய்யப்பட்டது?
மகாராஷ்டிர மாநிலத்தின் பள்ளி கல்வித் திட்டத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன. தற்போது அங்குள்ள வரலாற்றுப் பாடத்தில் சத்ரபதி சிவாஜியை மையப்படுத்தியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டில் முகலாயர்களை தோற்கடித்து மராட்டா சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றினார் சிவாஜி. அவர் மகாராஷ்டிரா உட்பட நாட்டில் பல பகுதிகளில் ஆட்சிபுரிந்தார்.
அரசர் சிவாஜி இந்து மதத்தை சேர்ந்தவர், ஆனால் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்.
'மராட்டா வரலாற்றை படிப்பது கட்டாயம்'
'மதம் அல்லது அரசியலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை' என்று கூறுகிறது இந்த முடிவை எடுத்திருக்கும் வரலாற்று பாடத்திட்ட குழு.
'நமது குழந்தைகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். எனவே மராட்டா வரலாறே அவர்களுக்கு முக்கியமானது. அதன்பிறகு பிற வரலாற்றை தெரிந்துக் கொள்ளட்டும். புத்தகங்களில் பக்கங்களில் எண்ணிக்கைக்கு வரம்பிருப்பதால், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முகலாய வரலாற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக மராட்டா வரலாற்றை புறக்கணிக்கமுடியாது' என்கிறார் குழுவின் தலைவர் சதானந்த் மோரே.
வலதுசாரி அரசியல் கட்சிகள் முகலாயர்களை 'முஸ்லிம் படையெடுப்பாளர்கள்' என்று கூறுகின்றன. முகலாயர்கள் இந்துக்களை ஆக்ரமித்து ஒடுக்கியதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு இந்த முழக்கம் வலுப்பெற்றுவிட்டது.
'மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டாம்'
சில முகலாய அரசர்கள் இஸ்லாம் மத்த்தை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், பல முகலாய ஆட்சியாளர்கள் இந்துகள் அதிகமாக இருந்த பகுதிகளிலும் அமைதியாக நல்லாட்சி புரிந்தனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முகலாய ஆட்சியாளர்களின் திறமையை, அவர்களின் ஆட்சியின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும், மதத்தின் அடிப்படையில் அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :