உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?

பட மூலாதாரம், Athanasios Gioumpasis
இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா?
"பிபிசி ரீல்ஸ்" இது குறித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.
அதனை கட்டுரை வடிவத்தில் இங்கே உங்களுக்காக வழங்குகிறோம்.
ஒரு நிமிடம் இந்த உலகில் உள்ள கடல்கள் அனைத்தும் திடீரென காணாமல் போய்விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள்.
உலகில் சுமார் 37 மில்லியன் மக்கள் கடலை சார்ந்து வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல்கள் எல்லாம், கடலின் அடிமட்டத்திற்கு சென்று உடைந்துவிடும். கடலில் வாழும் உயிரினங்கள் உடனடியாக இறந்துவிடும்.

பட மூலாதாரம், BBC REEL
கடல் படுகையில் இருக்கும் கரிமப்படிமங்கள் எல்லாம், அழுக ஆரம்பித்து விடும்.
கடற்கரையாக இருந்த இடங்களில் ஒரு மாதிரியான துர்நாற்றம் வீசக்கூடும்.
கடல் இல்லாமல் போனதால், உருவான 1.3 பில்லியன் க்யூபிக் கிலோ மீட்டர் காலியிடத்தை காற்று வேகமாக நிரப்பும். இதன் விளைவாக வளி மண்டலத்தின் அடர்த்தி பெருமளவு குறையும்.
இதனால் உயரமான இடங்களில் வாழும் மக்கள் அடர்த்தியற்ற காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கும். அதாவது எவரஸ்ட் மலைப்பகுதியின் ஆபத்து மிகுந்த பகுதி எப்படி இருக்குமோ, அது போன்ற காற்றை சுவாசிக்க நேரிடம்.
மேலும், இந்த இடங்களில் வளி மண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் குறையும் என்பதால் வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும்.
இந்த உலகில் 97 சதவீத நீர் என்பது கடல்தான். அந்த 97 சதவீத நீர் இல்லையென்றால், நீர் சுழற்சி முறை உடையும்.
அதாவது, மழையும், பனிப்பொழிவும் மிக, மிக குறைவாகவே இருக்கும். இதனால் ஏரிகள், குளங்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்படும்.
மேக கூட்டங்களும் காணாமல்போகும் என்பதால், சூரியனின் மொத்த வீரியமும் பூமியின் மேல் விழும்.
பனிப்பாறைகளும், பனிக்குமிழ்களும் வேகமாக உருகிவிடும்.

பட மூலாதாரம், Sean Gallup
உலகின் மூன்றில் இரண்டு பங்கு பிராண வாயுவை உருவாக்குவது கடல்பாசிகள். அதோடு அவை வளி மண்டலத்தில் இருக்கும் கார்பனை உறியும் தன்மை கொண்டவை. கடல்பாசிகள் இல்லாமல் போனால், பிராண வாயு குறைந்து, கரியமில வாயு அதிகரிக்கும்.
செடி, கொடிகள் காய்ந்து போக, காட்டுத்தீக்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் ஏற்படும். இதனால் உணவு வளங்கள் குறைய ஆரம்பிக்கும். அதோடு, இந்த காட்டுத்தீ பிராணவாயுவை மேலும் குறைத்து, ஆபத்து மிகுந்த பசுமைக்குடில் வாயுக்களையும் அதிகம் உருவாக்கும்.
உணவு, நல்ல குடிநீர் இல்லாமல், மனித இனம் இந்த பூமியில் வாழ்வது சாத்தியமற்றதாக்கி விடும்.
நம் உலகின் கடல்கள் அனைத்தும் அவ்வளவு விரைவில் காணாமல் போகாது என்பது நமக்கு தெரியும். ஆனால், மனிதர்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறு உயிரினங்களுக்கும் இந்த பூமியில் வாழ கடல் முக்கியமானது என்பதால் அதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
பிற செய்திகள்:
- ரஃபால் போர் விமானத்தை இயக்கும் இந்திய விமானப்படை வீராங்கனை சிவாங்கி சிங் - சுவாரஸ்ய தகவல்கள்
- இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?
- தமிழக முதல்வரிடம் பேசியது என்ன? பாஜக மாநில தலைவர் எல். முருகன் பேட்டி
- நடிகர் சூரி புகார்: விஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி வழக்கு பதிவு - என்ன நடந்தது?
- 'இரண்டாம் குத்து' பட சர்ச்சை: இயக்குநர் சந்தோஷ் - பாரதிராஜா மோதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












