கொரோனா வைரஸ்: ஜப்பான் துறைமுகத்தில் 3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு பாதிப்பு

3700 பயணிகளுடன் செல்லும் கப்பலில் இதுவரை 300 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 3700 பயணிகளுடன் செல்லும் கப்பலில் இதுவரை 300 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

News image

கப்பலில் இருந்த 80 வயது ஹாங்காங் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல் நலம் குன்றியதை அடுத்து பரிசோதனைகள் தொடங்கின.

3600 பேருடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்துள்ள இன்னொரு சொகுசு கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

சீனாவின் கிழக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுமார் 1.8 கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள வுஹான் நகரில், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட 11 பொது இடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் அதிவிரைவாக புதிய மருத்துவமனைகளும் அங்கு கட்டப்பட்டுவிட்டன. செவ்வாய்க்கிழமை மட்டும் சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000. மொத்தமாக இந்த நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இதனால், 24,300 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஜப்பான் கடலில் நிற்கும் டயமண்ட் பிரின்சஸ் கப்பலின் ஊழியர்களும், நோய் பாதித்த பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஏனெனில் இந்த வைரஸின் சினைக் காலம் இரண்டு வாரம் என்று நம்பப்படுகிறது.

நோய் தொற்றியுள்ள 10 பேரும் 50க்கும் மேற்பட்ட வயதினர், அவர்களில் ஒருவர் 80 வயதுக்காரர் என்கிறது ஜப்பானிய ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. அவர்களில் இருவர் ஜப்பானியர்கள். இவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: