கொரோனா வைரஸ்: சரிந்த எண்ணெய் வர்த்தகம், உயர்ந்த பலி எண்ணிக்கை - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச பெட்ரோலிய எண்ணெய் சந்தையில் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலால் சீனாவில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்திலும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சீனாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் 20 சதவீதம் குறைந்துள்ளதை அடுத்து ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பதை 12 சதவீதம் குறைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சரி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
- கொரோனா வைரஸினால் இதுவரை 490 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர்.
- சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் காரணமாக இருவர் பலியாகி உள்ளனர். ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
- தாய்லாந்தில் 25 பேர், ஆஸ்திரேலியாவில்ம் 12 பேர், வியட்நாமில் 10 பேர், கனடாவில் 4 பேர், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தலா இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- நேபாளம், சுவீடன், இலங்கை, பெல்ஜியம், பின்லாந்து, ஸ்பெயின், கம்போடியா ஆகிய நாடுகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
- ஜப்பானில் 20 பேரும், அமெரிக்காவில் 11 பேரும், சிங்கப்பூரில் 18 பேரும், மலேசியாவில் 8 பேரும், தென் கொரியாவில் 16 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- இந்தியாவில் மூவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மூவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
- சீனா சென்று திரும்பிய ஆஸ்திரேலியர்களை கிறிஸ்துமஸ் தீவில் தனிமைப்படுத்தப்படுத்தி உள்ளது ஆஸ்திரேலிய அரசு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து ஏறத்தாழ 2700 கி.மீ தொலைவில் இந்தோனீசியாவுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் இவர்களை இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்துகிறது ஆஸ்திரேலியா.
- இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கிருமிக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. இந்த வைரஸ் கொரோனாவைரஸ் குடும்பத்தை சார்ந்ததால் தற்காலிகமாக 2019-nCoV (2019 novel Corona Virus என்பதன் சுருக்கம்) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வைரஸ் கிருமிக்கு நிரந்திர பெயர் வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்டர்நேஷனல் கமிட்டி ஆன் டேக்சாநமி ஆஃப் வைரஸஸ் அமைப்பு இதற்கு பொறுப்பு.
- சீனா எடுத்த கடும் நடவடிக்கைகளால்தான் இந்த வைரஸ் மிக மோசமாக பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதரர நிறுவனம் சீனாவை பாராட்டி உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:









