You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பை காப்பதற்காக பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஆலோசகர் மற்றும் பிற செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த முயற்சிகள் குறித்து ரோஜர் உண்மையை மறைத்து அமெரிக்கா நாடாளுமன்ற குழு விசாரணையில் பேசினார் என்பதே முக்கிய குற்றச்சாட்டு.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்த ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட முல்லர் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, அதுதொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படும் டிரம்பின் ஆறாவது உதவியாளர் அல்லது ஆலோசகர் ஸ்டோன் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன பொய் சொன்னார்?
டிரம்பின் பிரசார அணியுடன் தொடர்பாடல் செய்தது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டிரம்ப் மற்றும் விக்கிலீக்ஸுக்கு இடைத்தர் போன்று செயல்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஸ்டோன் ஐந்து பொய்களை கூறியதாக இந்த விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் இருப்பு குறித்தும் ஸ்டோன் பொய் சொன்னதாக தெரியவந்துள்ளது.
டிரம்ப் மீதான நன்மதிப்பை காக்கும் வகையில் ஸ்டோன் உண்மையை திரித்து செயல்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
இலங்கை எட்டாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 5 மணி வரை இடம்பெறும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
வோடஃபோன்: பெரும் நஷ்டத்தில் நிறுவனம் - இந்தியாவில் நிலைக்குமா வர்த்தகம்?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் இந்தியா, தனது இரண்டாவது காலாண்டில் 510 பில்லியன் ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இழப்பால் வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமா என்ற அச்சமும் நிலவுகிறது. இது தொழில்துறையின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சந்தைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
விரிவாக படிக்க:இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா வோடஃபோன் நிறுவனம்?
'என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள்''
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது போல தெரியவில்லை என்றும் அவரது மரணத்திற்கு ஒரு பேராசிரியர்தான் காரணம் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி பாத்திமா கடந்த சனிக்கிழமையன்று இறந்ததை அடுத்து, அவரது மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவாகியுள்ள நிலையில், அவரது தந்தை தனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை என்றும் அதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதியிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:''என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள்'' - தந்தை லத்தீப்
ஆக்ஷன்: சினிமா விமர்சனம்
நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார்.
தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். அதில், முதலமைச்சருடைய (பழ. கருப்பைய்யா) மூத்த மகன் (ராம்கி) குற்றம்சாட்டப்படுகிறார். பிறகு அவர் தற்கொலையும் செய்துகொள்கிறார். தேசியத் தலைவரின் கொலைக்குப் பின்னால் இருப்பது உண்மையிலேயே யார் என்பதை முதல்வரின் இளைய மகன் (விஷால்), பல நாடுகளுக்குப் பயணம் செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
விரிவாக படிக்க:ஆக்ஷன்: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்